Skip to main content

உள் இடஒதுக்கீடு! ஓட்டா? வேட்டா?

Published on 06/03/2021 | Edited on 06/03/2021

 

ddd

 

தேர்தல் களத்தில் முதல் தொகுதிப் பங்கீடாக, அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 23 சீட் என்பதை உறுதி செய்திருக்கிறது, வன்னியர் சமூகத்துக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் வகையில், முதல்வர் எடப்பாடி தனது ஆட்சியின் கடைசி நாள் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதா. தேர்தல் தேதி அறிவிக்கப்டுவதற்கு சற்று முன் இந்த மசோதா நிறைவேற்றப்பட, அரசியல் களம் பரபரப்பானது.

 

மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலத்துக்கான தேர்தல் தேதியை 26-ந்தேதி அறிவிக்க தேர்தல் ஆணையம் தயாராகியுள்ளது என்கிற செய்தியை அறிந்து, ஏகத்துக்கும் பதட்டமானது எடப்பாடி அரசு. இந்தச் சட்ட மசோதாவை வைத்துதான் அ.தி.மு.க. கூட்டணிக்குள் பா.ம.க.வை நிலை நிறுத்திக்கொள்ள முடியும் என எடப்பாடி திட்டமிட்டிருந்தார். அதற்கு தேர்தல் ஆணையம் உலை வைத்துவிடுமோ என யோசித்தும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும் என்பதை உணர்ந்தும், தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக அவசரம் அவசரமாக மசோதாவை நிறைவேற்றினார். அப்போது பேசிய எடப்பாடி, ‘இந்த இடஒதுக்கீடு தற்காலிகமானது. 6 மாதத்திற்குப் பின்னர் சாதிவாரியான புள்ளி விவரங்கள் அடிப்படையில் மாற்றியமைக்கப்படும்‘’ எனத் தெரிவித்தார்.

 

நிறைவேற்றப்பட்டுள்ள இந்தச் சட்டமசோதா, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நடத்திய தொடர் போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில், "தமிழக அரசின் அமைச்சர்கள் குழுவினருக்கும் பா.ம.க.வினருக்கும் 10-க்கும் மேற்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதன் தொடர்ச்சியாகவே வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

 

அத்துடன் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பிலுள்ள பிற சமூகத்தினருக்கு 2.5 சதவீதமும் சீர்மரபினருக்கு 7 சதவீதமும் வழங்கப்பட்டுள்ளது. அனைத்துச் சாதியினருக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை.

 

உள் இடஒதுக்கீடு மூலம் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்குரிய பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படும். வன்னியர்களின் சமூக நிலையும் வாழ்க்கைத்தரமும் மேம்படும். இதற்காகத்தான் 40 ஆண்டுகளாக நான் போராடி வருகிறேன்.

 

வன்னியர்களுக்கு அவர்களின் மக்கள் தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதே நமது கோரிக்கை. இதுகுறித்து தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். அரசும், அடுத்த 6 மாதங்களுக்குள் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி உரிய இடப்பங்கீடு வழங்க உறுதியளித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. சட்டப்பேரவைத் தேர்தலின் வெற்றியைத் தொடர்ந்து அந்த இலக்கையும் பாட்டாளி மக்கள் கட்சி வென்றெடுக்கும்!" என அழுத்தமாகக் குறிப்பிடுகிறார் டாக்டர் ராமதாஸ். தனது தந்தைக்கு கண்ணீர் நன்றியுடன் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட வீடியோவும் வைரலானது.

 

அதே நேரத்தில், இந்தச் சட்ட மசோதா அரசியல் களத்திலும் வழக்கறிஞர்கள் மத்தியிலும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் இளங்கோவனிடம் விவாதித்தபோது, "தமிழகத்தில் சாதிவாரியான புள்ளி விவரங்களைச் சேகரிப்பதற்காக எடப்பாடி அரசு அமைத்துள்ள ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் கமிட்டியின் அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்படாத நிலையில், உள் இடஒதுக்கீட்டின் அளவாக 10.5 சதவீதத்தை எப்படி முடிவு செய்தார்கள்?

 

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத் தலைவரின் பரிந்துரையின்படி 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வன்னியர் சமூகத்துக்கு வழங்குவதாக சட்டமுன்வடிவில் தெரிவிக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆணையத்தின் இந்தப் பரிந்துரை அரசுக்கு சமீபத்தில் கொடுக்கப்பட்டதல்ல; சில வருடங்களுக்கு முன்பே கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்படியிருக்கையில், உள் இடஒதுக்கீடு சட்ட மசோதாவை முந்தைய பேரவை கூட்டங்களில் நிறைவேற்றாதது ஏன்?

 

ஆணையத்தின் பரிந்துரையின்படி உள்இடஒதுக்கீடு வழங்க முடியுமெனில், சாதிவாரி கணக்கெடுப்பிற்காக ஒரு கமிட்டியை அண்மையில் அமைக்க வேண்டியதன் அவசியம் எதற்கு? ஆணையத்தின் பரிந்துரையிருந்தாலும் சாதிவாரி புள்ளிவிவரங்களைச் சேகரித்த பிறகே உள்இடஒதுக்கீட்டின் அளவைத் தீர்மானிக்க முடியும் என்பதால்தானே? அதனால், இந்தச் சட்டமசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது அரசியல் உள் நோக்கம் கொண்டது.

 

6 மாதங்களுக்கு தற்காலிகச் சட்ட மசோதா எனச் சொல்கிறார் எடப்பாடி. 6 மாதங்களுக்கு ஒரு சட்டமசோதா என்பது விந்தையாக இருக்கிறது. ஏனெனில், சட்டமன்றம் கூட்டப்பட முடியாத அசாதாரணமான சூழல்களில்தான் குறிப்பிட்ட காலத்துக்கான அவசர சட்டம் நிறைவேற்றமுடியும். இப்போது தமிழகத்தில் எந்த அசாதாரணமான சூழலும் இல்லை. எனவே இப்படி ஒரு சட்ட முன்வடிவை நிறைவேற்றுவது சட்டச் சிக்கல்களை உருவாக்ககூடும். அதனால், அரசியல் மற்றும் கூட்டணி காரணங்களுக்காகவே மசோதாவை நிறைவேற்றியிருக்கிறார் எடப்பாடி. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே இதற்கு உயிர் இருக்கிறதா? வன்னியர் சமூகத்துக்குப் பலனளிக்குமா? என்பது தெரியும்'' என்கிறார்.

 

இந்தநிலையில், தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக நிறைவேற்றப்பட்ட சட்டமசோதாவிற்கு கவர்னர் ஒப்புதலளிப்பாரா என்கிற சர்ச்சைகள் எதிரொலித்த நிலையில், சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ச்சியாக எடுத்த அதீத முயற்சியில் சட்டமசோதாவுக்கு ஞாயிறு இரவு 1 மணி அளவில் ஒப்புதலளித்திருக்கிறார் கவர்னர் பன்வாரிலால். மசோதா நிறைவேற, சி.வி.சண்முகத்தின் உழைப்பும் அதிகமிருந்தது.

 

உள் இடஒதுக்கீடு கொடுத்தால் மட்டுமே அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க முடியும் என்கிற நிபந்தனைகளை விதித்திருந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மசோதா நிறைவேற்றப்பட்டதையடுத்து அ.தி.மு.க.வுடனான கூட்டணியை உறுதிசெய்தார். அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 23 இடங்களை ஓ.பி.எஸ்.சும் இ.பி.எஸ்.சும் ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள்.

 

இதுகுறித்து பேசிய பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி, "இந்த தேர்தலில் எங்களின் ஒரே நோக்கம் இட ஒதுக்கீடுதான். அதை அரசு நிறைவேற்றித் தந்துள்ளது. அதனால் நாங்கள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைத்துப் பெற்றுள்ளோம். ஆனாலும், எங்கள் பலம் குறையாது. எங்கள் கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெறும்'' என்கிறார்.

 

ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வில் கடந்த 2001-ல் கூட்டணி வைத்த பாமகவுக்கு 27 இடங்கள் கிடைத்தன. அதில், 20 இடங்களில் ஜெயித்தது பாமக. அதன்பிறகு நடந்த தேர்தல்களில் திமுக கூட்டணியிலும் தனித்தும் போட்டியிட்ட பாமக, 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது மீண்டும் ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையிலான அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தது. அந்த கூட்டணி, உள் இடஒதுக்கீடு மசோதாவால் தற்போது சட்டமன்றத் தேர்தலிலும் தொடர்கிறது.

 

இந்த சட்ட மசோதாவால் அ.தி.மு.க.-பாமக கூட்டணிக்கான சாதக-பாதகங்கள் குறித்து அரசியல் விமர்சகர்கள் மற்றும் பாமக தரப்பில் விசாரித்தோம். நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர்கள், "வட தமிழகத்தில் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் வன்னியர் சமூகத்தினர் பெரும்பான்மையாக பா.ம.க.விலும், அடுத்து தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளிலும் இருக்கிறார்கள். அந்த வகையில், உள் இடஒதுக்கீடு மசோதா ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். மறுப்பதற்கில்லை. பா.ம.க.விற்கு பலம்தான். ஆனால், திமுகவிலுள்ள வன்னியர்கள் கட்சி நலனைக் கடந்து அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணிக்கு வாக்களிப்பார்களா? என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. அதேசமயம், அ.தி.மு.க.வை இதுவரை ஆதரித்து வரும் பிற சமுகத்தினரின் மனநிலை மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு. இதுபோன்று பல காரணிகள் தேர்தல் களத்தில் எதிரொலிக்கும்'' என்கின்றனர்.

 

இது குறித்து பா.ம.க. செய்தித் தொடர்பாளர் வினோபா பூபதியிடம் நாம் கேட்டபோது, "சமூக நீதிக்கான மருத்துவர் அய்யா ராமதாசின் 40 ஆண்டு கால போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வெற்றி இது. கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இதுநாள் வரை வன்னியர் சமூகத்தினருக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், தற்போது நிறைவேற்றப்பட்ட உள் இடஒதுக்கீடு மசோதாவால் ஓரளவு துடைத்தெறியப்பட்டிருக்கிறது. இதன் மூலம் வரும் கல்வியாண்டுகளில் அதிகப்படியான பலன்கள் வன்னியர் சமூகத்தினருக்கு கிடைக்கும்.

 

அந்தவகையில், அரசியல் காழ்ப்புணர்வுகளைக் கடந்து ஒட்டுமொத்த வன்னியர் சமூகமும் ஒருமுகமாக இணைவதற்கான சூழல் உருவாகியிருக்கிறது. இந்த இணக்கம் அ.தி.மு.க.-பாமக கூட்டணிக்கு 100 சதவீத வெற்றியைத் தரும். காரணம், தி.மு.க.வின் கட்சிப் பொறுப்புகளில் இருக்கும் வன்னியர்கள், திமுக ஆதரவாளர்களாக இருக்கும் வன்னியர்கள் என பலரும் அய்யா ராமதாசை தொடர்புகொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்திருப்பதால் எதிர்காலத்தில் நமக்கும் கிடைக்கும் என்கிற நம்பிக்கையைப் பிற சமூகத்தினருக்கு கொடுத்துள்ளது இந்தச் சட்டமசோதா. அதனால் பிற சமூகத்தினரின் ஆதரவும் முன்பை விட அதிகமாகவே பாமக-அ.தி.மு.க. கூட்டணிக்கு கிடைக்கும்'' என்கிறார்.

 

"வன்னியர் வாக்கு போதுமா, அந்நியர் வாக்கும் இணையுமா" என்பதே தேர்தல் களத்தை தீர்மானிக்கும்.

 

 

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.