ADVERTISEMENT

60 கிராம மக்களின் வாழ்வாதாரமான வெலிங்டன் ஏரியை கண்டு கொள்வாரா எடப்பாடி!

06:27 PM Mar 26, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT

கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாமல் தமிழகம் வரலாறு காணாத வறட்சியை சந்தித்து வருகிறது. அதிலும் கடந்த ஆண்டு மிக மிக கடுமையான வரட்சி. குடிநீருக்கே மக்கள் பட்ட கஷ்டங்கள் ஏராளம் ஏராளம். தினசரி குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் போராட்டங்கள், மறியல்கள் என நடத்தினார்கள். தமிழகமே நாவறண்டு துடித்தது. சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையும் கூட வடக்கு மேற்கு மாவட்டங்களில் அரைகுறையாக பெய்துள்ளது. வரும் வெயில் காலத்தில் கடந்தாண்டை போல இந்த மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது. இதை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

மேலும் 27 மாவட்டங்களில் தடுப்பணைகள் கட்ட முதல்வர் எடப்பாடி தற்போது உத்தரவிட்டுள்ளார். இது ஒரு பக்கம். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ளது வெலிங்டன் ஏரி. இந்த ஏரி 24000 ஏக்கர் பாசன வசதி கொண்டது. இதன் மூலம் சுமார் 60 கிராமங்களில் உள்ள விவசாயிகள் பொதுமக்கள் பயன் பெற்று வந்தனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே மழை இல்லாமல் இந்த ஏரிக்கு தண்ணீர் வரவில்லை. ஏற்கனவே இந்த ஏரியின் கரை சீர் கெட்டு கிடக்கிறது. அதிலும் கடந்த ஆண்டு குறைவான மழை பெய்ததன் விளைவாக ஏரியின் முழு கொள்ளளவு 28 அடி அவ்வளவு நீர் பிடிக்கும் அளவிற்கு மழையும் இல்லை. நீர் வரத்தும் இல்லை. குறைவான மழையின் காரணமாக சுமார் 15 அடி தண்ணீர் மட்டுமே நிரம்பியது. தற்போது இந்த தண்ணீரை பாசன வாய்க்கால்களில் கடந்த ஒன்பதாம் தேதி மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் திறந்து விட்டுள்ளார். இந்த தண்ணீரை கொண்டு விவசாயிகள் பாசனம் செய்வதற்கு பயன்படாது. இந்த வாய்க்கால் மூலம் செல்லும் தண்ணீர் கிராமங்களில் உள்ள துணை ஏரிகளில் நிரம்பி அந்தந்த கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வாய்ப்பு இருந்தது. மேலும் ஆடு மாடுகள் குடிக்க, குளிக்க பயன்படும் என்ற அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்த தண்ணீர் சுமார் 25 நாட்கள் வரை அனைத்து வாய்க்கால்களிலும் செல்ல வேண்டும். ஆனால் பல வாய்க்கால்களில் செடியும் சீமைக் கருவேல மரங்களும் அதோடு பிளாஸ்டிக் கழிவுகளும் நிரம்பி வழி மறித்து கிடைப்பதால் திறந்துவிடப்பட்ட தண்ணீர் கடைசி வரை சென்று சேரவே இல்லை. உதாரணத்திற்கு திட்டக்குடி - கருவேப்பிலங்குறிச்சி சாலையோரம் செல்லும் பிரதான வாய்க்கால் மற்றும் ஆவினங்குடி அருகே நெய்வாசல் திருவட்டத்துறை கூடலூர் வரை செல்லும் கிளை வாய்க்காலில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் சுமார் 200 மீட்டர் தூரம் கூட செல்லவில்லை. அந்த அளவிற்கு வாய்க்கால் இருந்தும் செடி கொடிகளாலும் பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பி கிடக்கிறது.

இப்படி பல இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் குறுக்கே மக்கள் தற்காலிகமாக நடந்து செல்ல போடப்பட்ட தடுப்பு அணைகள் என வாய்க்காலின் கடைமடை வரை தண்ணீர் சென்று சேராமல் ஆங்காங்கே குறுக்கே தடுக்கப்பட்டு தேங்கி நிற்கின்றன. தண்ணீர் திறப்பதற்கு முன் இந்த வாய்க்கால்களை சுத்தம் செய்து விட்டு தண்ணீரை திறந்து விட்டிருக்க வேண்டும். பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததன் விளைவு இப்போது திறந்து விடப்பட்ட தண்ணீர் பாசனத்திற்கும் பயன்படாமல் நிலத்தடி நீர் மட்டம் உயரவும் வகையில்லாமல் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதது என்பதுபோல வெலிங்டன் ஏரி தண்ணீர் பயனில்லாமல் விரயமாகி வருகிறது. இதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவே இல்லை.

பிரிட்டன் ஏரிக்கு தண்ணீர் வரும் பிரதான வாய்க்கால் தொழுதூர் அணைக்கட்டு பகுதியில் உள்ளது. இங்கு பல கோடிகளை ஒதுக்கி செலவு செய்துள்ளனர். அதேபோல் சரிந்து வரும் ஏரிக்கரையை சரி செய்வதாக கூறி அவ்வப்போது பல கோடிகளை ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கிறார்கள். ஆனால் முறையாக சரியாக இந்த சரிந்த ஏறி கரையையும் அதன் பாசன வாய்க்கால்களையும் அதன் துணை ஏரிகளையும் சுத்தம் செய்து பராமரிப்பு பணிகளை முறையாக அரசும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் செய்யவில்லை என வேதனையோடு கூறுகிறார் விவசாயி ராஜேந்திரன்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்கிறார். ஏரி, குளங்களை தூர்வாரி செப்பனிடுவதற்காக குடிமராமத்து பணி என்ற பெயரில் பல ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது. பல்வேறு ஆறுகளில், ஓடைகளில் தடுப்பணைகள் கட்டப்படுகிறது. விரைவில் 27 மாவட்டங்களில் தடுப்பணைகள் கட்டப்படும் என முதல்வர் எடப்பாடி தற்போது அறிவித்துள்ளார். ஆனால் 60 கிராம மக்களின் வாழ்வாதாரமாக விளங்கி வரும் வெலிங்டன் ஏரிக்கு நிரந்தரமாக நீர்வரத்துக்கு வழிவகை செய்து, ஏரிக்கரையை சீர்செய்து தூர்ந்து கிடக்கும் ஏரியை தூர் வாரி விவசாயிகள் பயன்பாட்டுக்கு எப்போது வரும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது என்கிறார்கள் இப்பகுதி விவசாயிகள் .

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT