Skip to main content

"இந்த தேர்தலோடு அதிமுக தூக்கி எறியப்படும்" - அமைச்சர் தங்கம் தென்னரசு

Published on 10/02/2023 | Edited on 10/02/2023

 

minister thangam thennarasu talks about erode by election 

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு, ஈரோடு திமுக தேர்தல் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பச்சை பொய்களைக் கூறி உள்ளார். தோல்வி பயத்தில் மக்களின் மனதில் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார். 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் ஒரு பகுதியாக இருந்த எடப்பாடி பழனிச்சாமி ஈரோட்டுக்கு ஏதும் செய்யவில்லை. அவர் சொன்ன பொய்கள் எல்லாம் கேலிக்கூத்தானவை.

 

எடப்பாடி பழனிசாமி அவரது ஆட்சியில் செய்யாத திட்டங்கள், கட்சிக்கு செய்த துரோகங்கள் எல்லாம் அனைவரும் அறிந்ததே. பாஜகவின் பேச்சை கேட்டு தமிழகத்திற்கு கெடுதல் செய்துள்ளார். நீட் விவகாரம், உதய் மின் திட்டத்தால் பாதிப்பு, மேகதாது அணை பிரச்சனையில் இணக்கமாகச் சென்றது, விவசாயிகளுக்கு பல்வேறு துரோகம் செய்தது. இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

 

ஊழலைப் பற்றி பேச அதிமுகவினருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது. அவர்களது ஆட்சியில் செய்த பல்வேறு ஊழல்களால் தான் மக்கள் அவர்களைத் தூக்கி எறிந்தனர். எடப்பாடி பழனிசாமி குட்கா பற்றி பேசுவதெல்லாம் வேடிக்கையாக இருக்கிறது. அதிமுக ஆட்சியில் ஸ்டெர்லைட் விவகாரத்தில் பலர் சுட்டு கொல்லப்பட்டது, பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பல உண்மைகளை மூடி மறைத்தது. இது எல்லாம் மக்களுக்கு தெரியும். ஈரோடு இடைத்தேர்தல் களத்தில் அதிமுக எத்தனை முகமூடிகள் போட்டாலும், இந்தத் தேர்தலோடு அதிமுக தூக்கி எறியப்படும். பல இடைத்தேர்தல்களில் அவர்கள் எல்லாம் செய்ததை நாங்கள் செய்ததாகச் சொல்கிறார்கள். திமுக அரசின் அமைச்சர்கள் ஈரோட்டில் கிடாவிருந்து நடத்துகிறார்கள் என்று சொல்கிறார் என்று நீங்கள் சொல்கிறீர்கள். நான் தயிர் சாதம் தான் தற்போது சாப்பிட்டு வந்தேன்.

 

ஈரோட்டில் பல திட்டங்களுக்கு முதற்கட்டமாக 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளோம். படிப்படியாக வேலைகளைச் செய்வோம். ஈரோடு வருங்காலத்தில் சீர்மிகு நகரமாக இருக்கும். அவர்கள் செய்த திட்டங்கள் ஏதுமில்லை என்பதால் ஈரோடு திண்டலில் எடப்பாடி பழனிச்சாமி தண்டால் எடுத்துக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் கடந்த ஆண்டை விட நிதிப்பற்றாக்குறை 2177 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. வருவாய் பற்றாக்குறை 1472 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. கடந்த ஆட்சியை விட நிதி நிர்வாகத்தை சிறப்பாக நடத்தி வருகிறோம். அதேபோல் கூட்டணி தர்மத்தை மதித்து அனைத்து அமைச்சர்களும் தேர்தல் பணியாற்றி வருகிறோம். அதிமுகவை போல் கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கிய தொகுதியைப் பறித்துக் கொண்டு நாங்கள் நிற்கிறோம் என்ற உணர்வில் நாங்கள் இல்லை" எனப் பேசினார்.

 

மேலும், "திமுகவுக்கு எந்த காலத்திலும் தோல்வி பயம் இல்லை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு இடத்தில் பெகாசஸ் என்கிற முறையில் இரட்டை இலை சின்னத்தை, கிரேக்க தொண்மையின் அடையாளமான குதிரைகள் எனக் கூறி நினைவு சின்னம் அமைத்தார்களே, அது அவர்களது கட்சியின் நிதியிலா வைக்கப்பட்டது" என பேனா நினைவுச் சின்னம் குறித்து எடப்பாடி பழனிச்சாமி கூறிய கருத்துக்கு தங்கம் தென்னரசு பதிலளித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.