ADVERTISEMENT

ஜெயிக்க வச்சா இன்னும் எத்தனை பொண்ணுங்க குடிய கெடுக்கப் போறானுகளோ - பொள்ளாச்சி அரசியல் 

10:20 AM Apr 15, 2019 | Anonymous (not verified)

கொங்கு பெல்ட்டின் இப்போதைய அ.தி.மு.க. எம்.பி.க்களில் பலர், இந்தத் தேர்தலில் போட்டியிடத் தயங்கிய நிலையில், பொள்ளாச்சி எம்.பி. மகேந்திரன் மட்டும் தில்லாக களத்தில் குதித்திருக்கிறார். ஆனாலும் அவரை திகிலடிக்க வைத்துக்கொண்டிருக்கிறார் துணை சபா பொள்ளாச்சி ஜெயராமன். கடந்த ஐந்து வருடங்களில் தொகுதிக்கு எதுவுமே செய்யாமல் எப்படி ஓட்டுக் கேட்டுப் போவது என்ற தயக்கம் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு இருப்பதை பல இடங்களில் காணமுடிந்தது. இதேபோல் இஸ்லாமிய, கிறிஸ்தவ சமூக ஏரியாக்களில் ஓட்டுக் கேட்டுப் போவதும், அ.தி.மு.க.வினருக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

ADVERTISEMENT



இதையெல்லாம் சமாளித்துப் போய்க் கொண்டிருந்தாலும் மகேந்திரனின் பிரச்சார வேனில் பொள்ளாச்சி ஜெயராமன் ஏறி நின்று பயமுறுத்துகிறார். பாலியல் கொடூரத்தால் பொள்ளாச்சியே எரிமலையாய் இருக்கும் போது, கட்சியின் சீனியரான இவரை, பிரச்சார வேனிலிருந்து எப்படி இறங்கச் சொல்வது என தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறார் மகேந்திரன். ஆனால் பொள்ளாச்சி ஜெயராமனோ, பிரச்சார வேனுக்கு முன்னும் பின்னும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பவனி வந்து கொண்டிருக்கிறார்.

ADVERTISEMENT



இந்த பாதுகாப்புடன் கிணத்துக்கடவு தொகுதியில் ஓட்டுக் கேட்டுப் போன போது ஏக களேபரமாகிவிட்டது. கிணத்துக்கடவு ஒன்றியத்தில் இருக்கும் குளத்துப்பாளையத்தில் பொள்ளாச்சி ஜெயராமனும் மகேந்திரனும் ஓட்டுக் கேட்டுக் கொண்டிருந்தபோது, நடராஜ் என்கிற ரத்தத்தின் ரத்தம், "காலம் காலமாக நாங்க ரெட்டை இலைக்குத்தான் ஓட்டுப் போட்டுக்கிட்டிருக்கோம். அப்படியெல்லாம் நாங்க ஓட்டுப் போட்டு உங்களை ஜெயிக்க வச்சதுக்குப் பரிசுதான் உன்னோட ரெண்டு பசங்களும் பல சின்னப் பொண்ணுங்களை நாசம் பண்ணிருக்கானுங்க. இப்பவும் ஜெயிக்க வச்சா இன்னும் எத்தனை பொண்ணுங்க குடிய கெடுக்கப் போறானுகளோ''’என சகட்டுமேனிக்கு ஒருமையில் விளாசியதும் வேனிலிருந்து இறங்கி, காருக்குள் போய் உட்கார்ந்துகொண்டார் பொள்ளாச்சி ஜெயராமன்.



அப்போதும் விடாத நடராஜ், கார் கண்ணாடியைத் தட்டியபடி சவுண்ட் விட... காரைக் கிளப்பிக் கொண்டு, ஜெயராமன் பறக்க, பிரச்சார வேனைக் கிளப்பிக்கொண்டு பறந்துவிட்டார் மகேந்திரன். சொந்தக் கட்சிக்காரர்களின் கோபத்தால் ரொம்பவே தத்தளித்துக் கொண்டிருக்கிறார் மகேந்திரன். இது போதாதென்று, முதல்வர் எடப்பாடி பிரச்சாரத்திற்கு வருவதற்கு முன்னால், "பச்சைக்கிளி முத்துச்சரம்' என்ற எம்.ஜி.ஆர்.பாடலுக்கு படுகவர்ச்சியாக டான்ஸ் ஆடி மக்களை முகம் சுழிக்க வைத்தது கலைநிகழ்ச்சி குரூப்.

இப்படி பல வழிகளில் அ.தி.மு.க. தத்தளிப்பது, தி.மு.க. வேட்பாளர் சண்முகசுந்தரத்திற்கு சாதகமாகத்தான் இருக்கிறது. ஆனால் இங்கும் சொந்தக் கட்சி நிர்வாகிகளின் சொதப்பலால், பல இடங்களில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது தி.மு.க. "ஆனைமலை மற்றும் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியங்கள்தான் தி.மு.க. வீக்காக இருக்கும் ஏரியா. ஆனைமலை ஒ.செ. தேவ சேனாதிபதியும் பொள்ளாச்சி வடக்கு ஒ.செ. மருதவேலுவும் களப்பணிகளில் மந்தகதியாக இருப்பதுடன், அ.தி.மு.க.வினரின் பணப்பட்டுவாடாவையும் கண்டுகொள்வதேயில்லையாம். இதே ஸ்டைலில்தான் வால்பாறை ந.செ. கோழிக்கடை கணேசனும் இருக்கிறார். இதையெல்லாம் தலைமை சரிபண்ணலைன்னா சிக்கல்தான்' என்கிறார்கள் உ.பி.க்கள்.

இரு கட்சிகளின் தத்தளிப்பு, தள்ளாட்டத்திற்கிடையிலும் மக்கள் நீதி மய்யம் மூகாம்பிகாவும் நாம் தமிழர் சனுஜாவும் தீவிரமாக வாக்கு கேட்டுவருகிறார்கள்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT