Skip to main content

அ.தி.மு.க.வுக்கு எதிராக வருமான வரித்துறையா?  -ரெய்டு அரசியல்!

Published on 04/04/2019 | Edited on 04/04/2019

இந்தியா முழுவதும் நடக்கும் பாராளுமன்றத் தேர்தல்களில் வரும் முடிவுகளை பல விஷயங்கள் தீர்மானிக்கின்றன. ஆளும்கட்சி மீதான அதிருப்தி அலை, எதிர்க்கட்சிகளின் கூட்டணி பலம், சாதி, மதம், வேட்பாளர்களின் களப்பணி என பல காரணிகள் பல மாநிலங்களின் தேர்தல் முடிவுகளுக்கு காரணமாகின்றன. ஆனால் தமிழக தேர்தல் முடிவுகளை ஒரேயொரு காரணிதான் தீர்மானிக்கிறது, அதுதான் பணம் என்கிறார்கள் இந்திய தேர்தல் கமிஷன் அதிகாரிகள்.

 

velumani



ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பண விநியோகத்தால் நிறுத்தப்பட்டது. ஒரு வருடம் கழித்து அங்கு தேர்தல் நடந்தபோதும் ஆளும் அ.தி.மு.க. மீது 408 பண விநியோக புகார்கள் குவிந்திருந்தது. அதை கணக்கில் எடுத்தால் ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்த முடியாது என்றாலும் தேர்தலை நடத்தியது தேர்தல் ஆணையம். ஆர்.கே.நகரில் நடைபெற்ற பண விநியோகத்தை எதிர்த்து தேர்தல் கமிஷன் மற்றும் வருமான வரித்துறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்றளவும் நிலுவையில் உள்ளது. இந்தியாவிலேயே தேர்தலில் நடைபெற்ற பண விநியோகத்திற்கு எதிராக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு இதுதான். 

 

raid



இதைப்பற்றி எல்லாம் விவாதிக்க இந்திய தேர்தல் ஆணையம் ஒரு கூட்டத்தை டெல்லியில் நடத்தியது. அதில் பேசிய தமிழகத்தை சேர்ந்த முக்கிய தேர்தல் பார்வையாளர், தமிழகத்தில் தான் சந்தித்த மிக மோசமான அனுபவத்தை வெளிப்படுத்தினார். "நான் கடந்த வாரம் பா.ம.க. சார்பில் டாக்டர் அன்புமணி போட்டியிடும் தர்மபுரி பாராளுமன்றத் தொகுதிக்கு சென்றிருந்தேன். அங்கிருக்கும் தி.மு.க., பா.ம.க., அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சி பிரமுகர்களிடம் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தேன். 

தேர்தலில் எதையெல்லாம் செய்யலாம், எதையெல்லாம் செய்யக்கூடாது என விளக்கினேன். குறிப்பாக "பண விநியோகத்தில் ஈடுபடக் கூடாது. பண விநியோகம் நடைபெற்றால் அதை வருமான வரித்துறை கண்டுபிடிக்கும். அப்படி கண்டுபிடித்தால் ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் ரத்தானது போல ரத்தாகும்' என சொன்னபோது "பண விநியோகம் நடந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்' என பா.ம.க.வைச் சேர்ந்த ஒருவர் என்னிடம் கேள்வி கேட்டார். 
 

sathya pratha sahu



"நாங்கள் வருமான வரித்துறைக்கு தகவல் கொடுப்போம். அவர்களும் அமலாக்கத்துறையும் சி.பி.ஐ.யும் வழக்குப் பதிவு செய்வார்கள்' என பதில் சொன்னேன். "நீங்கள் அப்படி செய்யவில்லை என்றால் நாங்கள் எந்தவித தடங்கலும் இல்லாமல் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கலாம் இல்லையா?' என கேட்டார். நான் அதற்கு பதில் சொல்லவில்லை. கூட்டத்தை முடித்துவிட்டு நான் தங்கியிருந்த இடத்திற்கு திரும்பி விட்டேன். கூட்டத்தில் என்னிடம் கேள்வி கேட்ட பா.ம.க. பிரமுகர் என்னை பார்க்க வந்தார். அவர் கையில் ஒரு பெரிய சூட்கேஸ். "இதில் 2 கோடி ரூபாய் இருக்கிறது. இதை எடுத்துக் கொள்ளுங்கள். நாங்கள் பண விநியோகம் செய்கிறோம். நீங்கள் கண்டுகொள்ளக் கூடாது' என்றார். 

நான் அவரை மிகக் கடுமையாக எச்சரித்து அனுப்பினேன். இதுதான் தமிழகத்தில் தேர்தல் களத்தில் உள்ள நிலைமை. பண விநியோகத்திற்கு எதிராக எவ்வளவு பெரிய சட்டங்களை போட்டாலும் அதையெல்லாம் மீறி பண விநியோகம் தமிழகம் முழுவதும் நடக்கிறது. அதை தேர்தல் கமிஷனால் எதிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லை. தமிழகத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது, யார் அதிக பணம் கொடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அமையும். ஜனநாயகமும் இந்திய அரசியல் சாசனம் தேர்தல் கமிஷனுக்கு நியாயமான தேர்தல் நடத்த வழங்கிய அதிகாரங்களும் தமிழகத்தில் செல்லு படியாகவில்லை'' என அந்த தேர்தல் ஆணையத்தின் முக்கிய அதிகாரி வருத்தத்துடன் பதிவு செய்தார். உடனே தமிழக தேர்தல் களத்தில் விளையாடும் பணத்தை எப்படி கட்டுப்படுத்துவது என சீரியசாக விவாதித்தார்கள் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள். தமிழகத்தின் தலைமை போலீஸ் அதிகாரி மற்றும் உளவு அதிகாரி ஆகியோர் தலைமையில்தான் பண விநியோகம் நடக்கிறது.

 

anbunathan



முதலமைச்சர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ். ஆகியோர் செல்லும் கான்வாய்களில் பணம் கொண்டு செல்லும் வாகனம் செல்கிறது. போதாக்குறைக்கு அவர்களது கான்வாயில் செல்லும் ஆம்புலன்ஸ் மற்றும் அவர்களுக்கு ஆதரவான மீடியாக்களின் வண்டிகள் பணம் கொண்டு செல்லும் வண்டிகளாக மாற்றப்படு கின்றன. எனவே அந்த இரு போலீஸ் அதிகாரிகளையும் மாற்றாமல் பண விநியோகத்தை தடுக்க முடியாது' என்றார்கள். அவர்களை மாற்ற வேண்டுமென்றால் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு ஒரு அறிக்கை தாக்கல் அளிக்க வேண்டும். அவர் ஏற்கனவே தேர்தல் கமிஷனராக இருந்த ராஜேஷ் லக்கானியை விட அதிகமாக அ.தி.மு.க.வை ஆதரிக்கிறார். என்ன செய்வது என தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கவலைப்பட்டனர்.

அதனால் களத்தில் இருக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நேரடியாக வருமானவரித்துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொள்ளலாம். அதற்கு சத்ய பிரதா சாஹுவின் அனுமதியை பெற வேண்டியதில்லை. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழகத்தை சுற்றும் தேர்தல் பார்வையாளர்களுக்கு அகில இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்தது. சென்னை மண்டல வருமானவரித் துறையை சேர்ந்த அதிகாரிகளுக்கும் "தேர்தல் பார்வையாளர்கள் அழைத்தால் உடனடியாக செல்ல வேண்டும்' என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இது சென்னை மண்டல வருமான வரித்துறையின் தலைமைப் புலனாய்வு அதிகாரியான வீரகுமாரை தாண்டி சிறப்பு புலனாய்வு அதிகாரிகளாக உள்ள நான்கு ஐ.ஆர்.எஸ். அதிகாரிகளுக்கும் போய்ச் சேர்ந்தது. அதில் ஒரு தேர்தல் பார்வையாளர் வருமான வரித்துறையின் சிறப்பு அதிகாரியை அழைத்தார். "சென்னை கீழ்கட்டளை பகுதியில் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான ஒரு காண்ட்ராக்டர் தினமும் கோடிக்கணக்கான ரூபாய்களை வண்டிகளில் ஏற்றி அனுப்பி வருகிறார். 

உடனே அவரது வீட்டை ரெய்டு செய்தால் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும்' என்கிறார். அவர் பெயர் நடராஜ் சபேசன்.  சென்னை நகரில் உள்ள எல்.இ.டி. பல்புகளை அவர் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்க்கு சப்ளை செய்கிறார் என வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு கண்டுபிடிக்கிறது. அவரது கீழ்கட்டளை வீடு, பூந்தமல்லியில் உள்ள அவரது தொழிற்சாலை என பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்துகிறது.

முதலில் சில லட்சங்கள் கிடைத்த பணம் போகப் போக கோடிகளாக மாறுகிறது. நேரம் செல்லச் செல்ல கோடிகளின் எண்ணிக்கை    உயர்ந்து கொண்டே போகிறது. இந்தப் பணம் யாருடையது என கேட்டால் நடராஜ் சபேசனிடம் பதில் இல்லை. வருமான வரித்துறை அதிகாரிகள் கேட்ட கேள்விகளை அவரால் தாங்க முடியவில்லை. அதனால் நெஞ்சுவலி என அப்பல்லோ மருத்துவமனையில் படுத்துக் கொள்கிறார். விடாத கருப்பாக தொடரும் வருமானவரித்துறை அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவ மனைக்குள் செல்கிறார்கள். "நோயாளியை தொந்தரவு செய்யாதீர்கள்' என மருத்துவமனை நிர்வாகம் சொல்லி விடுகிறது. சரி, சிகிச்சை முடிந்து வரட்டும் என அங்கேயே ஒரு படையை நிறுத்தி வைத்துவிட்டு தங்களது ரெய்டை தொடர்கிறார்கள். ஒரு கோடி இரண்டு கோடி என ஆரம்பித்த பணக்குவியல்கள் தொடர்ந்து பதினாறு கோடியை தொடுகிறது. பணம் எண்ணும் எந்திரங்கள், சென்னை மாநகராட்சியில் சபேசன் எடுத்த காண்ட்ராக்ட் அதில் கிடைத்த லாபம் என ஏகப்பட்ட விவகா ரங்கள் வருமான வரித்துறையிடம் கிடைக்கிறது.

சபேசன் இன்னும் எவ்வளவு பணம் வைத்திருக்கிறார். அவற்றை கடந்த தேர்தலில் இதேபோல் வருமான வரித்துறையிடம் சிக்கிய கரூர் அன்புநாதனைப் போல ஆம்புலன்ஸ் வண்டிகள் போன்ற லாரிகளில் அனுப்பினாரா? என ஏகப்பட்ட எலக்ட்ரானிக் டேட்டாக்களை திரட்டிக் கொண்டிருக்கும் வருமான வரித்துறையின் சோதனை இன்னமும் முடியவில்லை. சபேசன் மீது வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை, சி.பி.ஐ. ஆகியவை வழக்குப் பதிவு செய்துவிட்டு சபேசன் மருத்துவமனையிலிருந்து வெளியே வருவதற்காக காத்துக் கிடக்கின்றன. இந்தப் பணம் எப்படி வந்தது என சபேசன் உரிய பதில் சொல்லவில்லையென்றால் சபேசனுக்கு நெருக்கமான உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி மீதும் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்ய காத்திருக்கிறது என்கிறார்கள் இந்திய தேர்தல் ஆணையத்தை சேர்ந்தவர்கள்.

இளம் ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் பட்டாளம் பயம் அறியாதது. சமீபத்தில் தாது மணல் அதிபர் வைகுண்டராஜனிடம் ரெய்டு நடத்தியது இந்தப் பட்டாளம்தான். வைகுண்டராஜன் அதன்பிறகு உயரதிகாரிகளிடம் காம்ப்ரமைஸ் செய்து கொண்டு தனக்கு எதிராக வருமானவரித்துறை நடத்திய ரெய்டுகளில் ஒரு சமரசம் செய்ய முயன்றார். நத்திங் டூயிங் என இந்த இளம் அதிகாரிகள் போர்க்குரல் கொடுத்ததால் வசமாக மாட்டிக் கொண்டார் வைகுண்டராஜன் என்கிறது வருமான வரித்துறை வட்டாரம். வைகுண்டராஜன் விரித்த வலையில் விழுந்தவர் களுக்கு எதிராக துறை ரீதியான விசாரணையை சி.பி.ஐ. நடத்தி வருகிறது என்கிறது வருமான வரித்துறை.

தேர்தல் களத்தில் அ.தி.மு.க.வுக்கு எதிராக வருமான வரித்துறையா? என கொதித்தெழுந்த பா.ஜ.க. வட்டாரம் சென்னை மண்டல தலைமைப் புலனாய்வு அதிகாரியை வறுத்து எடுத்து விசாரித்தது. அவர் உடனடியாக வேலூரில் உள்ள தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீட்டில் ரெய்டு நடத்த உத்தரவிட்டார். சபேசன் வீட்டில் அட்டைப் பெட்டியில்... மூட்டைகளில் கைப்பற்றிய 16 கோடி பற்றி மூச்சே விடாத வருமான வரித்துறை... "துரைமுருகன் வீட்டில் அட்டைப் பெட்டி மூட்டையில் பணம்' என டி.வி.க்களுக்கு தானே முன்வந்து புட்டேஜ் கொடுத்துக் கொண்டிருக்கிறது. உடனே "வேலூர் தொகுதி பாராளுமன்றத் தேர்தல் ரத்தாகும்' என்கிறார் மாநில தேர்தல் ஆணையாளர். இதுதான் வருமான வரித்துறை பாலிடிக்ஸ் என்கிறார்கள் அந்தத் துறையை சேர்ந்தவர்கள்.
 

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.