ADVERTISEMENT

தீபாவளி ஸ்பெஷல்! சேலம் ஆவினில் கேரட் மைசூர்பா அறிமுகம்!

08:22 AM Oct 21, 2019 | santhoshb@nakk…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நிகழாண்டில், 'ஸ்பெஷல் கேரட் மைசூர்பா' என்ற புதிய இனிப்பு வகையை அறிமுகம் செய்துள்ளது சேலம் ஆவின் நிறுவனம்.

ADVERTISEMENT


சேலத்தை அடுத்த தளவாய்ப்பட்டியில் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சேலம், நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து நாள்தோறும் சராசரியாக 5 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து வருவதுடன், ஆண்டுக்கு 600 கோடி ரூபாய் வணிகம் செய்து வருகிறது. வழக்கமான பால், பால் பொருள்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டாலும் கூட தீபாவளி பண்டிகைக் காலங்களில் இனிப்பு வகைகளையும் தயாரித்து விற்பனை செய்வதில் நீண்டகாலமாக ஈடுபட்டு வருகிறது.

ADVERTISEMENT


நிகழாண்டில், தீபாவளி பண்டிகை வரும் அக். 27ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இன்னும் ஆறு நாள்கள் உள்ள நிலையில், பண்டிகைக்கான இனிப்பு வகைகள் தயாரிப்பு பணிகள் 80 சதவீதம் வரை முடிக்கப்பட்டு, விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன.


இந்தமுறை, சுவையான கேரட் மைசூர்பா என்ற புதிய இனிப்பு வகையை அறிமுகம் செய்துள்ளது சேலம் ஆவின் நிறுவனம். இதற்காகவே உழவர் சந்தைகளில், தேர்ந்தெடுத்த அளவிலான கேரட்டுகள் கொள்முதல் செய்யப்பட்டு, அவற்றின் மேல் தோலை சீவி அகற்றிவிட்டு, சுத்தமான ஆவின் நெய், பால் கலந்து தயாரிக்கின்றனர். தயாரிப்புக் கூடத்தில் இருந்து நாமும் கேரட் மைசூர்பாவை சுவைத்துப் பார்த்தோம். நாக்கில் வைத்தவுடன் கரைந்து போகும் கேரட் மைசூர்பாவின் சுவையில் வாடி க்கையாளர்களின் உள்ளமும் கரைந்து போனாலும் ஆச்சர்யமில்லை. அத்தனை சுவை.


தமிழகத்தில், மைசூர்பா இனிப்புக்கென்றே குறிப்பிட்ட ஒரு தனியார் நிறுவனம் பெரிய அளவிலான சந்தைப் பங்களிப்பை வைத்திருக்கிறது. இந்தமுறை ஆவின் கேரட் மைசூர்பா அந்த நிறுவனத்தின் மைசூர்பாவுடன் போட்டியிடும் என நம்பலாம்.


மேலும், வழக்கம்போல நெய் மைசூர்பா, நெய் லட்டு, மில்க் கேக், பால் கோவா, சாதாரண மைசூர்பா, முந்திரி கேக், சோன்பப்டி ஆகிய இனிப்பு வகைகளும் ஆவினில் தயாரிப்பாக சந்தைக்கு வருகிறது. இவற்றுடன் ஆவின் ஸ்பெஷல் மிக்சரும் உண்டு. ஆவின் தயாரிப்பில் கார வகைகளில் மிக்சர் மட்டுமே. 250 கிராம், 500 கிராம், ஒரு கிலோ எடைகளில் விற்பனைக்கு வருகின்றன.


தீபாவளி இனிப்பு, கார வகைகளுக்குக் தேவையான நெய், பால் ஆகியவை ஆவினின் சொந்த தயாரிப்பாக இருப்பதில் ஆச்சர்யம் இல்லை. அதேநேரம், இதர மூலப்பொருள்களான கடலை மாவு, மைதா மாவு, சூரியகாந்தி எண்ணெய், சர்க்கரை, மிக்சருக்குத் தேவையான மசாலா பொருள்கள் ஆகியவற்றை பொன்னி கூட்டுறவு நிறுவனத்திடமே கொள்முதல் செய்து, கூட்டுறவு அமைப்பை வலுப்படுத்துவதில் ஆவின் நிறுவனம் தனி கவனம் செலுத்துகிறது எனலாம்.


சந்தைப்படுத்துவதில் இந்தமுறை தனியார் நிறுவனங்களைப் போல் வாகனங்கள் மூலம் விளம்பர உத்தியையும் கையாண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 'கான்செப்ட் செல்லிங்' என்பார்களே, அதுபோல. 'மைசேலம்' என்ற அப்ளிகேஷன் மூலமும் ஆவின் பால் பொருள்களை விளம்பரப்படுத்த முடிவு செய்திருக்கிறது.


இது தொடர்பாக சேலம் ஆவின் நிறுவன பொதுமேலாளர் விஜய்பாபு நம்மிடம் பேசினார்.


''கடந்த ஆண்டு சேலம் ஆவின் தீபாவளி பண்டிகைக்காக 24 டன் இனிப்பு வகைகளை தயாரித்து விற்பனை செய்தது. இந்தமுறை 40 டன் அளவுக்கு இனிப்புகளை தயாரித்து சந்தைப்படுத்துகிறோம். ஆவினுக்கு நேரடியாக 600 சில்லரை விற்பனை மையங்கள் உள்ளன. அந்த மையங்களில் மக்கள் தங்களுக்குத் தேவையான இனிப்பு வகைகளை வாங்கிக் கொள்ளலாம்.


இந்த ஆண்டு புதிய முயற்சியாக ஸ்பெஷல் கேரட் மைசூர்பாவை அறிமுகம் செய்கிறோம். இதற்கு முக்கிய மூலப்பொருளே கேரட்தான் என்பதால், அதை தரமானதாக பார்த்துப் பார்த்து வாங்கி இருக்கிறோம். முதல் முயற்சி என்பதால் ஒன்றரை டன் அளவுக்கு மட்டுமே கேரட் மைசூர்பா தயாரிக்கப்பட்டு உள்ளது. எல்லா இனிப்பு வகைகளுமே ஆவினில் தயாரிக்கப்பட்ட சுத்தமான நெய், பால் ஆகியவற்றைக் கொண்டே தயாரிக்கப்பட்டு உள்ளன. எப்போதும்போல் தரம், சுவையை உறுதிப்படுத்தி இருக்கிறோம். அக்மார்க் தரம் மட்டுமின்றி ஹலால் செய்யப்பட்டது.


எங்களது நேரடி விற்பனை மையங்கள் மட்டுமின்றி, யாராவது முகவர்கள் ஆவின் இனிப்புகளை விற்பனை செய்ய முன்வந்தாலும் அவர்களுக்கும் மொத்த விலையில் வழங்க தயாராக இருக்கிறோம். அனைத்து அரசு அலுவலகங்கள், கூட்டுறவு அமைப்புகளில் இருந்து வழக்கமான ஆர்டர்கள் இருக்கின்றன,'' என்றார் விஜய்பாபு.


இனிப்பு வகைகள், மிக்சர் ஆகியவை விற்பனைக்கு தயார் நிலையில் இருக்கின்றன. திங்கள்கிழமை (அக். 21, 2019) முதல் ஆவின் நேரடி விற்பனை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்கிறார், ஒப்பந்ததாரர் ரவி.




ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT