Skip to main content

டெல்லியுடன் மோதும் முதல்வர் எடப்பாடி! பா.ஜ.க.வுக்குள் ரகசிய வேட்டை!

Published on 12/08/2020 | Edited on 12/08/2020

 

eps

 

தமிழக பா.ஜ.க. தலைவராக முருகன் நியமிக்கப்பட்டதை அடுத்து கட்சியின் மாநில நிர்வாகிகள், அணித்தலைவர்கள் என பல்வேறு பதவிகளுக்கு நியமனம் நடந்தன. இந்த நியமனங்களில், அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. உள்பட மாற்று கட்சிகளிலிருந்து பா.ஜ.க.வுக்குத் தாவிய முக்கியஸ்தர்கள் பலருக்கும் முக்கியத்துவம் தரப்படவில்லை. அவர்கள் எதிர்பார்த்த பதவிகள் கிடைக்காதததும், பொறுப்புகளே சிலருக்கு கொடுக்கப்படாததும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தன. இதில் பழைய அ.தி.மு.க.வினரை தாய்க்கழகமான அ.தி.மு.க.வுக்குள் கொண்டு வரும் அசைன்மெண்ட்டுகளை அமைச்சர்களுக்கு தந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

 

அப்போது, "அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இருக்கும் நிலையில், பா.ஜ.க.வில் உள்ள முன்னாள் அ.தி.மு.க.வினரை நாம் இழுப்பது டெல்லிக்கு கோபத்தை வரவழைக்காதா?'' என அமைச்சர் கே.சி.வீரமணி, எடப்பாடியிடம் கேட்க, "கூட்டணி உறவு ஆரோக்கியமாக இல்லை. நமக்கு எதிரானவைகளை அவர்கள் (டெல்லி) எடுக்கின்றனர். இனி அவர்களுக்கும் நமக்கும் மத்திய-மாநில அரசு என்கிற அளவில் மட்டுமே உறவு. அதனால், நமக்கான அரசியலை நாம் முன்னெடுக்க வேண்டும்'' என்றிருக்கிறார் எடப்பாடி.

 

பா.ஜ.க.வில் இணைந்திருந்த ஆற்காடு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. சீனிவாசன் எதிர்பார்த்தது தமிழக பா.ஜ.க.வின் பொதுச்செயலாளர் பதவி. ஒதுக்கப்பட்டது, தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி. ஏகத்துக்கும் அதிருப்தியடைந்திருந்தார் சீனிவாசன்.

 

உளவுத்துறை மூலம் இதனையறிந்த எடப்பாடி, அமைச்சர் வீரமணியிடம் அதனை விவரிக்க, உடனே சீனிவாசனிடம் பேசினார் வீரமணி. இவர் எடுத்த முயற்சியில், பா.ஜ.க.விலிருந்து விலகி எடப்பாடி முன்னிலையில் அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்துகொண்டார் சீனிவாசன். இதனைப் பரபரப்பான செய்தியாக மாற்றியது அ.தி.மு.க. இதனை ஜீரணிக்க முடியாமல் டெல்லி தலைமைக்கு எடப்பாடிக்கு எதிராக போட்டுக் கொடுத்துள்ளார் தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன்.

 

bjp

 

அதேபோல, பா.ஜ.க. தமிழக தலைவர் பதவியை எதிர்பார்த்து பல்வேறு காய்களை நகர்த்திய அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரான நயினார் நாகேந்திரனும் எதிர்பார்த்தது கிடைக்காததால் அதிருப்தியடைந்திருந்தார். தி.மு.க.வுக்குள் நயினாரை இழுக்க மு.க.ஸ்டாலின் முயற்சிப்பதை அறிந்து, நெல்லைக்கு பறந்த பா.ஜ.க. தலைவர் முருகன், நயினாரைச் சந்தித்து சமாதானம் பேசியிருக்கிறார். நயினாரோ, பிடிகொடுக்கவில்லை. இந்த நிலையில்தான் முன்னாள் கனிமவளத்துறை அமைச்சர் நயினாரை இழுக்கும் அசைன்மெண்ட்டை இந்நாள் கனிமவள அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் ஒப்படைத்தார் எடப்பாடி.

 

admk

 

இது குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள், "நயினாரிடம் பேசிய சண்முகம், பா.ஜ.க. மீது உங்களுக்குள்ள கோபம் நியாயமானதுதான். அதற்காக, தி.மு.க.வை கையிலெடுத்து விடாதீர்கள். அது உங்களின் அரசியலுக்கு நல்லதல்ல. மீண்டும் தாய்க்கழகத்திற்கு வருவதுதான் சரியான முடிவாக இருக்கும் என அழுத்தம் கொடுத்துப் பேசியிருக்கிறார். நயினாரும் இதனைத் தட்டிக்கழிக்காமல், கொஞ்சம் டைம் கொடுங்கள்'' எனத் தெரிவித்துள்ளார். அதனால் நயினாரும் அ.தி.மு.க.வில் இணைய வாய்ப்பு உண்டு. மதுரை மற்றும் நெல்லைக்கு இந்த வாரம் செல்லும் எடப்பாடியின் பயணத்தில் நயினாரைச் சந்திக்க வைக்கும் முயற்சியும் எடுக்கப்பட்டிருக்கிறது''’என்கிறார்கள்.

 

நயினார் நாகேந்திரனுக்கு எடப்பாடி வலை வீசுவதையும் பா.ஜ.க. தலைவர் முருகனால் ஜீரணிக்க முடியவில்லை. இதனையும் டெல்லிக்கு பாஸ் செய்திருக்கிறார் முருகன். இது குறித்து பா.ஜ.க. தலைவர்கள் தரப்பில் விசாரித்த போது, ’’புதிய தலைவரான முருகன் மாற்று கட்சியிலிருந்து வந்தவர்களுக்கான முக்கியத்துவத்தைத் தருவதில்லை. குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அவர் முக்கியத்துவம் தருகிறார். நிர்வாகிகள் நியமனத்திலேயே இதனைக் கவனிக்க முடியும். இதனால் கட்சிக்குள் அதிருப்திகள் அதிகரித்து வருகிறது. இதனையறிந்து, பா.ஜ.க.வை பலகீனப்படுத்த அ.தி.மு.க.-தி.மு.க. தலைமைகள் அரசியல் செய்கின்றன. இதனை டெல்லியிடம் சொல்லியுள்ள முருகன், பா.ஜ.க.வுக்குள் எடப்பாடி ஊடுருவுவதாகப் போட்டுக் கொடுத்துள்ளார். இதனால் எடப்பாடிமீது ஏக கடுப்பில் இருக்கிறது எங்களது (பா.ஜ.க.) தேசியத் தலைமை!'' எனச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

 

CNC

 

பா.ஜ.க.வுக்குள் எடப்பாடி ஊடுருவுகிறாரா? என அ.தி.மு.க.வின் மேலிட தொடர்பாளர்களிடம் விசாரித்தபோது, "மத்திய அரசின் முடிவுகளுக்கு எடப்பாடி அரசு ஆதரவாக இருக்க வேண்டுமென்பதற்காக மட்டுமே அ.தி.மு.க.வை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது பா.ஜ.க. தலைமை. மற்றபடி, அ.தி.மு.க.-பா.ஜ.க. உறவு சரியில்லை. அதனால், டெல்லியுடன் மோதும் முடிவில் இருக்கிறார் எடப்பாடி. அ.தி.மு.க. அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், மா.செ.க்களின் எண்ணங்களும்கூட இதுவாகத் தான் இருக்கிறது. அ.தி.மு.க.வினர் மட்டுமல்ல; மாற்று கட்சிகளிலிருந்து பா.ஜ.க.வுக்கு சென்று தற்போது அதிருப்தியில் இருக்கும் அனைவரையும் அ.தி.மு.க.வுக்குள் கொண்டுவர வேண்டும் என்கிற திட்டத்தோடு ரகசிய வேட்டையைத் துவக்கியுள்ளார் எடப்பாடி. அ.தி.மு.க.வுக்கு எதிராக பா.ஜ.க. தலைமை இயங்கும் நிலையில், அவர்களுடன் மோதுவது என்கிற முடிவை எடுத்ததனால் தான் பா.ஜ.க.வுக்குள் ஊடுருவுகிறார் எடப்பாடி'' என்கிறார்கள் மிக உறுதியாக.


 

Next Story

ரூ. 4.8 கோடி பறிமுதல்; பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் மட்டும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

முன்னதாக கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் தொகுதி பாஜக வேட்பாளர் கே. சுதாகருக்கு நெருக்கமானவர் வீட்டில், தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 4.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு கொடுக்க ரூ. 4.8 கோடியை பாஜக வேட்பாளர் சுதாகர் பயன்படுத்த இருந்ததாக பறக்கும்படை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து சுதாகர் மீது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றவியல் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் மாதநாயகனள்ளி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பாஜக உட்கட்சி மோதல்; 3 பேரிடம் போலீசார் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Police investigation of 3  BJP people 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் சென்னை பாஜக கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளராக இருக்கும் முத்து மாணிக்கம் என்பவர் கடந்த 20ஆம் தேதி துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம் பகுதியில் பாஜக கட்சி நிர்வாகியான ஜெகநாதன் என்பவரின் வீட்டில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாஜக நிர்வாகிகளான டிக்காராம், வெங்கட் என சிலர் மக்களவை தேர்தலின் போது பூத் ஏஜெண்ட் ஆக வேலை செய்ததற்கு பணம் தரவில்லை எனக்கூறி முத்து மாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து முத்து மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் பாஜகவினர் 8 பேர் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பாஜகவின் துரைப்பாக்கம் மண்டல துணைத் தலைவர் வாசு, 95 ஆவது வட்டத் தலைவர் ஜெயக்குமார், 191 வது வார்டு வட்டத் தலைவர்  வெங்கடேசன் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூத் ஏஜெண்ட்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராற்றில் பாஜக மாவட்ட செயலாளருக்கு சொந்த கட்சியினரே கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.