Skip to main content

சிதறாத அதிமுக வாக்கு வங்கி... ஸ்டாலின் எடுத்த முடிவு... நிறைவேறாத திமுக எதிர்பார்ப்பு!  

Published on 29/10/2019 | Edited on 29/10/2019

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னோட்டம் என வர்ணிக்கப்பட்ட விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலின் இரு தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணியிடமிருந்து கைப்பற்றியிருக்கிறது அ.தி.மு.க. இதன் மூலம் தமிழக சட்டமன்றத்தில் அ.தி.மு.க.வின் பலம் 124 ஆக உயர்ந்திருக்கிறது. இரு தொகுதிகளின் வெற்றி-தோல்வி எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றாலும் தங்களது தலைமையின் ஆளுமையை நிரூபிக்க வெற்றி பெறுவது அவசியம் என்பதை அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடியும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் உணர்ந்திருந்தனர். அதனாலேயே வெற்றியை நோக்கி இருவரும் தம் கட்டி ஓடினர். இதில் இரு தொகுதிகளையும் கைப்பற்றியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

 

admk



கடந்த 21-ந்தேதி தேர்தல் முடிந்ததும் இரு தொகுதிகளின் பொறுப்பாளர்களாக இருந்த சீனியர் அமைச்சர்களிடம் தனித்தனியாக விசாரித்தார் எடப்பாடி பழனிச்சாமி. நாங்குநேரியின் பொறுப்பாளர்களான அமைச்சர்கள் தங்கமணி மற்றும் விஜயபாஸ்கரிடம் தனித்தனியாக எடப்பாடி விசாரிக்க, "தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள நாடார் சமூகம் தி.மு.க.வை விட அ.தி.மு.க.வைத்தான் ஆதரிக்கிறார்கள். காங்கிரஸ் வேட்பாளர் இறக்குமதி என்பதால் மண்ணின் மைந்தரான நம்முடைய வேட்பாளருக்குத்தான் காங்கிரஸ் கட்சியினரிடமே ஆதரவு அதிகமிருக்கிறது. தேவேந்திரகுல மக்களின் எதிர்ப்பு தி.மு.க. கூட்டணியைத்தான் பாதிக்கிறதே தவிர அ.தி.மு.க.வை பாதிக்கவில்லை. எப்படி கூட்டிக்கழித்துப்பார்த்தாலும் காங்கிரஸ் ஜெயிக்காது. நம்பிக்கையுடன் இருங்கள்'' என்று விவரித்திருக்கிறார்கள்.

 

admk



அதேபோல, விக்கிரவாண்டி தொகுதி பொறுப்பாளர்களிடம் எடப்பாடி விவாதிக்க,  வட தமிழகத்தில் வன்னியர்களுக்கு எதிரான அரசியலை பொன்முடியும் எ.வ.வேலுவும் செய்து வருவதை தி.மு.க.விலிருக்கும் வன்னியர்களே ஜீரணிக்கவில்லை. அது விழுப்புரம் மாவட்டத்தில் அதிகம். அதனால், தொகுதியிலுள்ள வன்னியர்கள் மொத்தமாக கன்சாலிடேட் ஆகி அ.தி.மு.க.வை ஆதரித்துள்ளனர். பெரும்பான்மை சமூகத்தின் வலிமையை தி.மு.க. உணர்ந்திருக்கும் என பகிர்ந்துகொண்டதுடன் தேர்தல் வியூகமாக என்னென்ன செய்தோம்'' என அவர்கள் விவரித்திருக்கிறார்கள்.

இரு தொகுதிகளின் தேர்தல் பணியில் ஈடுபட்ட அ.தி.மு.க. சீனியர்கள் சிலரிடம் பேசியபோது, "பொதுவாக, இடைத்தேர்தல் என்றாலே அதிகார பலமும் பண பலமும் இணைந்து ஆளும் கட்சியைதான் ஜெயிக்க வைக்கும் என்பதை கடந்த கால தேர்தல்கள் நிரூபித்திருக்கின்றன. அதில் தற்போதைய இடைத்தேர்தலும் விதிவிலக்கல்ல. ஒரு லட்சம் வாக்குகளுக்கு தலா 2000 ரூபாய் என வாக்காளர்களை பர்ச்சேஸ் செய்ய 20 கோடி, தேர்தல் பணிகளுக்கு 20 கோடி என ஒரு தொகுதிக்கு 40 கோடி என இரு தொகுதிகளுக்கும் 80 கோடி என்கிற மெகா பட் ஜெட்டில் வெற்றியை கபளீகரம் செய்திருக்கிறோம்'' என உண்மையை ஒப்புக்கொள்கிறார்கள் அழுத்தமாக.


வாக்குப்பதிவு முடிந்த மறுநாள் இரவு உளவுத்துறையின் உயரதிகாரியிடம் விவாதித்தார் எடப்பாடி பழனிச்சாமி. வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை இரண்டு தொகுதிகளிலும் உளவுத்துறையினர் எடுத்திருந்த சர்வேயில் இரண்டிலும் அ.தி.மு.க.வுக்கு சாதகமான ரிசல்ட் வந்திருப்பதை எடப்பாடியிடம் பகிர்ந்துகொண்டார் உளவுத்துறை உயரதிகாரி. அதனாலேயே வாக்கு எண்ணிக்கை அன்று எவ்வித பதட்டமும் இல்லாமல் இருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. வாக்கு எண்ணிக்கை அன்று காலையிலேயே சீனியர் அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் எடப்பாடியின் இல்லத்தில் குழுமியிருந்தனர். ரிசல்ட் சாதகமாக வருவதை அறிந்து அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் அ.தி.மு.க. தலைமையகத்துக்கு விரைந்தார் எடப்பாடி. அ.தி.மு.க. தொண்டர்கள் ஏக உற்சாகத்தில் இருந்தனர். வெற்றியை எடப்பாடியுடன் பகிர்ந்துகொண்டனர் ர.ர.க்கள்!


வெற்றியையும் தோல்வியையும் சமமாக கருதும் தி.மு.க. தரப்பை, விக்கிரவாண்டி- நாங்குநேரி இடைத்தேர்தல் தோல்வி வெகுவாக ஆதங்கப்பட வைத்திருக்கிறது. தோல்வி குறித்து சீனியர்களிடம் மு.க.ஸ்டாலின் ஆலோசித்தபோது, "அதிகார பலமும் பண பலமும் நம்மை தோற்கடித்து விட்டது என சொன்னாலும், மாவட்டத்தில் பொன்முடியின் விரும்பத்தகாத வன்னியர் எதிர்ப்பு அரசியலும், விடுதலை சிறுத்தைகள் இருந்தும் தலித் வாக்குகள் நமக்கு கிடைக்காததும்தான் தி.மு.க.வுக்கு தோல்வியை ஏற்படுத்தியது'' என கொட்டித் தீர்த்துள்ளனர்.

இது குறித்து வட தமிழகத்திலுள்ள தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் நாம் விசாரித்த போது, "நாடாளுமன்றத் தேர்தலையும் சட்டமன்றத் தேர்தலையும் தமிழக மக்கள் எப்போதும் பிரித்தே பார்ப்பார்கள் என்பது தற்போதைய இடைத்தேர்தல் நிரூபித்திருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் எனில் காங்கிரசா? பா.ஜ.க.வா? என்றும், சட்டமன்றத் தேர்தல் எனில் அ.தி.மு.க.வா? தி.மு.க.வா? என்றும் தான் தமிழக வாக்காளர்கள் முடிவெடுக்கின்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு கிடைத்த அமோக வெற்றியும் அதையொட்டி நடந்த 22 தொகுதி இடைத்தேர்தலில் பெரும்பான்மை வெற்றியும் எங்கள் தலைவரின் (மு.க.ஸ்டாலின்) உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என சொன்னாலும், மோடி ஆட்சி வீழ்ந்து காங்கிரஸ் ஆட்சி அமையும் என்கிற எதிர்பார்ப்பில்தான் தி.மு.க. கூட்டணியை அமோகமாக ஆதரித்தனர். ஆனால், மத்தியில் ஆட்சி மாற்றத்தை விரும்பிய மக்கள், மாநிலத்தில் அதை விரும்பவில்லை. அதனாலேயே இடைத்தேர்தலில் தி.மு.க.வின் எதிர்பார்ப்பு நிறைவேறுவதில்லை' என சுட்டிக்காட்டுகிறார்கள்.

அ.தி.மு.க.வுக்கு நெருக்கமான அரசியல் வியூக வகுப்பாளர் ஒருவரிடம் நாம் விவாதித்தபோது, "அ.தி.மு.க.வின் வெற்றியை பற்றி விவாதிப்பதை விட, தி.மு.க.வின் தோல்விக்கான காரணங்கள்தான் விவாதிக்கப்பட வேண்டும் என இடைத்தேர்தல் முடிவுகள் உணர்த்துகிறது. ஸ்டாலின் எடுத்த ஆண்டி ராமதாஸ் ப்ரோ வன்னியர் ஸ்ட்ரேட்டஜியை அச்சமூக மக்கள் ஏற்கவில்லை. வட தமிழகத்தில் தொடர்ந்து வன்னியர் சமூகத்தை புறக்கணித்து விட்டு திடீரென தேர்தல் வந்ததும் அந்த சமூகத்திற்கான உரிமைகளுக்கு குரல் கொடுப்பதை தேர்தல் ஸ்டண்டாகவே கணித்திருக்கிறார்கள். அதேசமயம், வன்னியர்களுக்கு நேர் எதிரான தலித் சமூகம், ஸ்டாலினின் வன்னியர்களுக்கு அள்ளித்தெளித்த வாக்குறுதிகளில் அதிருப்தியடைந்திருக்கிறது. அதனால், கூட்டணிக் கட்சியான சிறுத்தைகளின் தலித் வாக்குகள் மட்டுமல்ல தி.மு.க.வின் தலித் வாக்குகள் கூட தி.மு.க.வுக்கு உதவவில்லை. அது, அ.தி. மு.க.வுக்கு இடமாறியுள்ளது. தி.மு.க.வின் கணிசமான கட்சி வாக்குகள், முஸ்லிம்-கிறிஸ்தவ மற்றும் சிறுபான்மை சாதிகளின் வாக்குகள்தான் கௌரவமாக தி.மு.க.வை காப்பாற்றியிருக்கிறது. அதேசமயம், தமிழகத்தில் எத்தனை கட்சிகள் உருவானாலும், புதிது புதிதாக யார் அரசியலுக்கு வந்தாலும் அ.தி.மு.க. - தி.மு.க.வை தவிர மற்றவர்கள் வலிமையாக முடியாது என உணர்த்தியுள்ளது இடைத்தேர்தல் முடிவுகள். அந்த வகையில் அ.தி.மு.க.-தி.மு.க. இரு கட்சிகளுமே வலுவாக இருக்கிறது. ஜெயலலிதா மறைந்தாலும் அ.தி.மு.க.வின் வாக்குகள் அக்கட்சியை விட்டு சிதறவில்லை என்பதையும் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்''’ என்கிறார் பல்வேறு புள்ளி விபரங்களைச் சுட்டிக்காட்டியபடி.

இடைத்தேர்தல் முடிவுகளை சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக கொள்ள முடியாது என்பது ஆண்ட-ஆள்கிற இரு கழகங்களுக்கும் நன்றாகவே தெரியும். அதனால், சட்டமன்றத் தேர்தல் களத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்கான வியூகங்களை இப்போதே வகுக்கத் தொடங்கியுள்ளன. அதற்கு முன்பாக, உள்ளாட்சித் தேர்தல் வரும் என்ற எதிர் பார்ப்பு நிலவுகிறது. இடைத்தேர்தல் தந்த தெம்பினால், உள்ளாட்சித் தேர்தலை ஆளுங்கட்சி கூடுதல் நம்பிக்கையுடனும் அதிகார பலத்துடனும் எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது.

தி.மு.க.வைப் பொறுத்தவரை, உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு சரியான போட்டியை ஏற்படுத்தும் வகையில், தனிப்பட்ட செல்வாக்குள்ள வேட்பாளர்கள் அதனிடம் அதிகம். எம்.ஜி.ஆர்.-ஜெ. ஆட்சிக் காலத்திலும்கூட, உள்ளாட்சி அமைப்புகளில் தி.மு.க. தனது பலத்தை நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பான டிரெய்லர் போல அமையக்கூடிய உள்ளாட்சித் தேர்தலில் போட்டி எப்படி இருக்கும், உள்ளாட்சியில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், மாவட்ட யூனியன்கள் உள்பட பலவற்றிலும் யார் ஆட்சி என்ற அரசியல் பரபரப்பு அதிகரித்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்கு 4 வார கால அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளது மாநில தேர்தல் ஆணையம். தேர்தல் காய்ச்சல் இரு பெரிய கட்சிகளுக்கும் அடிக்கிறது. சின்ன கட்சிகள் என்ன செய்யும்?

 

 

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.