ADVERTISEMENT

சசி-எடப்பாடி சமரசம்! புது ரூட் போடும் சொந்தங்கள்!

03:23 PM Nov 20, 2020 | rajavel

ADVERTISEMENT

கடந்த 11ஆம் தேதி தஞ்சாவூர் பக்கத்தில் சுவாமிமலை ரிசார்ட்டில் தினகரனின் மகள் ஜெய ஹரிணிக்கும், துளசி அய்யா வாண்டையார் பேரன் ராமநாதனுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிச்சயதார்த்தத்துக்கு திவாகர் அழைக்கப்படவில்லை. 14ஆம் தேதி தினகரனின் மாமனாரும் அனுராதா, பிரபா, டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரின் அப்பாவுமான சுந்தரவதனம் மரணமடைந்தார். பல நாட்களாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உடல்நலம் சரியில்லாமல் இருந்த சுந்தரவதனம், சசிகலாவின் சகோதரர்.

ADVERTISEMENT

சசிகலாவின் குடும்பத்தில் மூத்தவரான சுந்தரவதனத்தின் மறைவு சசிகலாவை ரொம்பவே பாதித்தது. விவேகானந்தனின் மறைவுக்காக சசிகலா பரோலில் வர முயற்சி செய்தார். உடனடியாக அவருக்கு பரோல் தரமுடியாது என சிறை நிர்வாகத்தின் தரப்பில் வாய்மொழியாக சொல்லப்பட்டது. சசிகலா வரவில்லை. ஆனால் ஒட்டுமொத்த மன்னார்குடி குடும்பமே அந்த இறுதி நிகழ்வில் பங்கெடுத்தது. சென்னையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல் தஞ்சாவூருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஒருநாள் வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. கரோனாவால் பாதிக்கப்பட்ட ஜெயா டி.வி பாஸ்கரனை தவிர மற்ற அனைவரும் அந்த துக்க நிகழ்வில் பங்கெடுத்தனர். டிடிவி தினகரன், அனுராதா, பிரபா அவரின் கணவர் டாக்டர்.சிவகுமார், திவாகரன் அவரது மகன் ஜெய் ஆனந்த், சுதாகரனின் மனைவி, பாஸ்கரனின் மனைவி என ஒட்டுமொத்தமாக மன்னார்குடியே தஞ்சாவூரில் உள்ள சசிகலாவின் வீட்டில் திரண்டிருந்தது.

சுந்தரவதனம்

திவாகரனும், தினகரனும் பேசிக் கொள்ளவில்லை. ஆனால் திவாகரனின் மனைவியும், தினகரனின் மனைவியும், மறைந்த சுந்தரவதனத்தின் மகளுமான அனுராதாவிடம் பேசினார். அதேபோல் ஜெயா டி.வி எம்.டியான விவேக், தினகரனுடன் சமீபகாலமாக பேசாமல் இருந்தார். அவரும் தினகரனோடு பேசினார். இப்படி மன்னார்குடி சொந்தங்கள் ஒன்றோடு ஒன்றாக இணைந்து பேசிய பேச்சு அரசியல் பக்கம் திரும்பியது. சொந்தபந்தங்கள் அரசியல் பேசவேண்டாம் என்ற சசிகலாவின் கட்டளையை மீறி இது நடந்தது.

சசிகலா வெளியே வந்தால் என்ன நடக்கும் என்ற பேச்சு அங்கு எழுந்தது. சசிகலாவுக்காக தி.நகரில் ஒரு புத்தம் புதிய மாளிகை ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது. அதில் உள்ள வசதிகள் பற்றி பேச்சு வந்தது. அதன்பிறகு எடப்பாடி ஆட்சி, பற்றியும், அமைச்சர் துரைக்கண்ணு மரணம், கைப்பற்றப்பட்ட கோடிகள் என பேச்சில் சுவாரசியம் அதிகரித்தது. இனி எடப்பாடியுடன் எப்படி நடந்து கொள்வது என்பது பற்றி மன்னார்குடி சொந்தங்களுடன் ஒரு பட்டிமன்றமே நடந்தது.

விவேக் ஜெய் ஆனந்த் தினகரன் திவாகரன்

தினகரன் தரப்பு, அ.ம.மு.க. உடன் கூட்டணி சேர்ந்து மூன்றாவது அணியை உருவாக்க காங்கிரஸ் தரப்பிலிருந்து அழைப்புகள் வருகிறது என்று தெரிவித்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த திவாகரன் தரப்பினர் எடப்பாடி பழனிச்சாமி திவாகரனுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் பேசுகிறார். அமைச்சர்கள் எல்லோரும் நல்லபடியே இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி தூண்டிவிட்டுதான் வருமானவரித்துறை அதிகாரிகள் சசிகலாவின் 1,500 கோடி சொத்துக்களை மடக்கினார்கள். அதெல்லாம் இப்பொழுது மாறிவிட்டது. எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவுக்கு ஒத்துழைப்பு தர தயாராக இருக்கிறார் என்றார்கள். ஆனால் இதைப்பற்றி எல்லாம் வெளியில் பேசுவதற்கு சசிகலா அனுமதித்ததில்லை என தினகரன் தரப்பினரும், திவாகரன் தரப்பினரும் பேசிக்கொண்டார்கள்.

அதேநேரத்தில் சசிகலாவின் ஆஸ்தான தளபதிகளாக இருந்த ராவணன் போன்றோர் கொங்குமண்டல அமைச்சர்கள் தங்களிடம் சசிகலாவுக்கு ஆதரவாக நடந்துகொள்வதாக வாக்களித்திருக்கிறார்கள் என பதிவு செய்தனர். இப்படி ஒட்டுமொத்த அதிமுகவும் சசிகலா தரப்பிடம் பணிந்து நிற்கிறது என்பது போன்ற இமேஜ் அந்த மரண வீட்டிற்கு வந்த வந்தவர்கள் மத்தியில் உருவாகியிருந்தது என்கிறார்கள் சசிகலாவுக்கு நெருக்கமான மன்னார்குடி வட்டாரத்தை சேர்ந்தவர்கள்.

இதற்கிடையே ஓபிஎஸ் எப்படி இருக்கிறார் என்கின்ற சிறு பட்டிமன்றமும் அங்கு நடைபெற்றது. சசிகலா விஷயத்தில் பா.ஜ.க. இணக்கமாகவே இருக்கிறது. ஜனவரி மாதம் ரிலீஸ் ஆவதற்கு க்ரீன் சிக்னல் காட்டி விட்டது. பாஜக ஒத்துழைக்கும் நேரத்தில் ஓபிஎஸ்ஸும் சசிகலாவுக்கு ஒத்துழைப்பு தர தயாராக இருக்கிறார். சசிகலா வந்ததுமே எடப்பாடி முதல்வராக தொடர்வாரா என்கின்ற சந்தேகம்தான் இப்பொழுது எழுந்துள்ளது. அதிமுகவை தனது முழு கட்டுப்பாட்டில் எடப்பாடி வைத்திருக்கிறார். எனவே எடப்பாடிக்கு யாராவது தொந்தரவு கொடுத்தால் அது சசிகலாவிற்கு எதிரானதாக மாறிவிடும் என்கின்ற வாதமும் எடுத்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் எடப்பாடிக்கு நெருக்கமான சேலம் இளங்கோவனின் மகன் பிரவீனின் திருமணம் வருகின்ற 27ஆம் தேதி சேலத்தில் நடைபெற இருக்கின்றது. மகாதேவனுக்கு நெருக்கமான இளங்கோவன், சசிகலா குடும்பத்துடன் நல்ல அறிமுகத்தை கொண்டவர். அவரது மகனின் திருமணத்திற்கு சசிகலாவின் உறவினர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்தத் திருமணத்தில் எடப்பாடியும் கலந்து கொள்கிறார். அந்த திருமணத்தின் போது எடப்பாடிக்கும், சசிகலாவுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை வலுப்பெறும் என மன்னார்குடி சொந்தங்கள் நம்பிக்கை தெரிவித்தபடி கலைந்து சென்றார்கள்.

-தாமோதரன் பிரகாஷ்,
துரை மகேஷ்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT