Skip to main content

''வலுக்கட்டாயமாக நாற்காலிகளைப் பிடித்துக் கொண்டிருந்தால் தலைவராக முடியாது''-சசிகலா பேச்சு!

Published on 03/07/2022 | Edited on 04/07/2022

 

 "You cannot become a leader if you hold the chairs by force"- Sasikala speech!

 

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவாதங்கள் சூடுபிடித்திருக்கும் நிலையில் மறுபுறம் அதிமுகவை கைப்பற்ற போவதாக தெரிவித்துவந்த சசிகலா அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கி பல்வேறு இடங்களுக்குச் சென்று ஆதரவுகோரி வருகிறார்.

 

இந்நிலையில் அரசியல் பயணம் ஒன்றில் பேசிய சசிகலா, ''அதிமுக எத்தனையோ கழகத் தொண்டர்களின் இன்னுயிரை தியாகம் செய்து, எம்ஜிஆரின் கடின உழைப்பால் உருவாக்கிய இயக்கம். ஏதாவது சூழ்ச்சிகளை செய்து தாங்கள் உயர்பதவிகளில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதற்காக சாதாரண கழகத் தொண்டர்கள் பதவிக்கு வருவதற்கு முட்டுக்கட்டை போடுவது எந்த விதத்தில் நியாயம். இது கழகத் தொண்டர்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகம். ஒரு சிலரின் மேல்மட்ட அரசியலுக்கு அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா?

 

சிலரின் சுய விருப்பு, வெறுப்புக்காக இரட்டை இலை சின்னத்தை இதுபோன்று முடக்குவதற்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. கட்சியா? ஆட்சியா? இவை இரண்டில் எதை காப்பாற்ற வேண்டும் என்ற நெருக்கடியான சூழ்நிலை வந்த போதெல்லாம் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் தொண்டர்களின் நலனைக் கருத்தில்கொண்டு கட்சியைக் காப்பாற்றினார்கள். ஆனால் இன்று கட்சிக்காக உழைத்த அப்பாவி தொண்டர்கள் வீதியில் இருக்கிறார்கள். சும்மா 20-10 பேரை தனக்கு ஆதரவாகப் பேச வைத்துவிட்டு நான் தான் தலைமை என்று தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டு வலுக்கட்டாயமாக நாற்காலிகளைப் பிடித்துக் கொண்டு இருந்தால் தலைவராக ஆகிவிட முடியாது'' என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.