Skip to main content

இந்த அரசாங்கம் திட்டமிட்டே ஆதீனம் விவகாரத்தில் மூக்கை நுழைக்கிறது - இ.பி.எஸ் காட்டம்!

Published on 10/06/2022 | Edited on 10/06/2022

 

"மதம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் அரசு மூக்கை நுழைக்க கூடாது, எல்லா மதத்தையும் சமமாக பார்க்க வேண்டும்," என தருமபுரம் ஆதீனத்தை பார்த்து ஆசிபெற்றுவிட்டு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி கூறினார்.

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்திருந்த எடப்பாடி பழனிச்சாமி, திருக்கடையூர் கோயில், திருவெண்காடு கோயில், வைத்தீஸ்வரன் கோயில் என நவக்கிரக ஸ்தலங்களில் சாமி தரிசனம் செய்தார். பிறகு வைத்தீஸ்வரன் கோயிலில் நடந்த சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ பாரதியின் மகன் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திவிட்டு, அங்கிருந்து தருமபுரம் ஆதீனம் சென்று ஆதீனத்தை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது பட்டின பிரவேச விவகாரம் குறித்தும், இன்றைய அரசியல் நிலைபாடுகள் குறித்தும் ஆதீனத்திடம் பேசிவிட்டு வெளியே வந்தவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

 

அவரிடம் சிதம்பரம் கோயில் விவகாரம் குறித்து கேட்டதற்கு, "மதம் சம்பந்தப்பட்டது, கோயில் சம்பந்தப்பட்டது, அது குறித்து முழு விவரம் வந்த பிறகே அறிக்கை விட முடியும். எல்லா மதத்தையும் சமமாக பார்க்க வேண்டும். மதத்தில் யாரும் மூக்கை நுழைக்க கூடாது. ஆண்டாண்டு காலமாக அவர்களுக்கென இருக்கும் வழிமுறைகளில் நாம தலையிடக்கூடாது. கோயில்களுக்கு என வழிமுறை இருக்கு, அவங்க நிகழ்ச்சி நடத்துவதற்கு சட்ட ரீதியாக பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது" என்றார்.

 

அதன் பிறகு ஆதீன விவகாரம் குறித்து பேசிய அவர், "இந்த அரசாங்கம் திட்டமிட்டே ஆதீனம் விவகாரத்தில் மூக்கை நுழைக்கிறது; அது கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே, திமுக ஆட்சியின் போதும் பிறகு அதிமுக ஆட்சியின் போதும் பட்டினப்பிரவேசம் மிகச் சிறப்பாக நடந்தது. சுமார் 500 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த இந்த பட்டினபிரவேசத்தை திடீரென ஆட்சிக்கு வந்த ஜோரில் திமுக அரசு திட்டமிட்டே தடை செய்ய முயற்சித்தது. அதை கண்டித்து நாங்கள் குரல் கொடுத்தோம். சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தோம். பட்டினப்பிரவேசம் பிறகு சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது" என்றார்.

 

இதன் பிறகு, பட்டினப்பிரவேசத்திற்கு வருங்காலத்தில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என அரசு கூறியது, அதிமுக, சசிகலா, தினகரன் ஆகியோர் பற்றிய கேள்விகளை பத்திரிகையாளர்கள் எழுப்பினர். 


இவற்றுக்கெல்லாம் பதில் அளித்த அவர், “அப்போது (பட்டினப்பிரவேசம்) திமுக ஆட்சியில் இருக்கிறதா என பார்ப்போம். தினகரன், தனிக்கட்சி துவங்கி சுருங்கி விட்டார். சசிகலா அதிமுகவில் உறுப்பினராக கூட இல்லை. அவருக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தமே இல்லை. இனிமேலாவது இந்த கேள்வியை தவிர்க்க முயற்சிங்கள்” எனத் தெரிவித்தார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.