செய்யாத குற்றத்திற்காக ஆயுள் தண்டனை கைதியாக ஜெயிலிலேயே இருக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஜெயம் ரவி, பரோலில் தன் 12 வயது மகளைப் பார்க்க வெளியே வருகிறார். அவர் வெளியே வந்த நேரத்தில் யார் யார் மூலம், குற்றம் சுமத்தப்பட்டு ஜெயிலுக்கு சென்றாரோ அவர்கள் எல்லாம் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். இன்ஸ்பெக்டராக இருக்கும் கீர்த்தி சுரேஷின் சந்தேக பார்வை ஜெயம் ரவி மீது திரும்புகிறது. எப்பொழுதும் ஷாடோ போலீஸுடன் இருக்கும் ஜெயம் ரவி இந்த கொலைகளை செய்தாரா, இல்லையா? ஜெயம் ரவி ஜெயிலுக்குப் போகும் காரணம் என்ன? குற்றம் செய்தவர்களை யார் கொலை செய்தது? என்பதே சைரன் படத்தின் மீதிக் கதை.
முந்தைய படங்களைக் காட்டிலும் தன் அனுபவ நடிப்பின் மூலம் முதிர்ச்சியான கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக நடித்து கைத்தட்டல் பெற்றிருக்கிறார் ஜெயம் ரவி. சின்ன சின்ன முக பாவனைகள் அசைவுகள் என அந்த முதிர்ச்சியான கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி கவனம் பெற்றிருக்கிறார். எப்பொழுதும் கலகலப்பாக நடிக்கும் ஜெயம் ரவி இந்த படத்தில் சற்றே அடக்கி வாசித்து அதிலும் கைத்தட்டல் பெற்றிருக்கிறார். வாய் பேச முடியாத அதே சமயம் காது கேளாத மாற்றுத்திறனாளியாக நடித்திருக்கும் அனுபமா பரமேஸ்வரன், அந்த கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ அதைக் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார். இன்னொரு நாயகி கீர்த்தி சுரேஷ், மிடுக்கான போலீஸ் அதிகாரியாக வந்து மாஸ் காட்டியிருக்கிறார். தேவையில்லாத எமோஷ்னல்களை முகபாவனைகள் மூலம் வெளிப்படுத்தாமல் ஒரிஜினல் போலீஸ் எப்படி எல்லாம் நடந்து கொள்வார்களோ அப்படியெல்லாம் எதார்த்தமாக நடந்து கொண்டு அந்த கதாபாத்திரத்திற்கு வலுக்கூட்டி இருக்கிறார். இவரின் மிடுக்கான தோற்றமும் துடிப்பான வசன உச்சரிப்பும் அந்த கதாபாத்திரத்தை தூக்கிப் பிடித்திருக்கிறது.
எஸ்.கே. செல்வகுமார் ஒளிப்பதிவில் திரில்லர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக கையாண்டு படத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றிருக்கிறது. ஜி.வி. பிரகாஷ் இசையில் பாடல்கள் சுமார். சாம் சி.எஸ் பின்னணி இசை வழக்கம் போல் காதை கிழித்து விடுகிறது. மொத்தமாக இப்படத்தை பார்க்கும் பொழுது, முதல் பாதி மெதுவாக நகர்ந்து ஒரு கொலைக்குப் பின் வேகம் எடுத்து அதன் பின் கிரிப்பிங்கான திரைக்கதை மூலம் நிறைவான திரில்லர் படம் பார்த்த அனுபவத்தை சைரன் கொடுக்கத் தவறவில்லை.
சைரன் - சத்தம் அதிகம்; வெளிச்சம் குறைவு!