லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'லியோ' படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். இப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இசை வெளியீட்டு விழா செப்டம்பரில் நடக்கவுள்ளதாக முன்பு லோகேஷ் கனகராஜ் தெரிவித்த நிலையில், விரைவில் அதன் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தை முடித்துவிட்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு 'சிஎஸ்கே' எனத் தலைப்பு வைக்கப்பட்டதாகவும், கதாநாயகியாக ஜோதிகாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் முன்பு தகவல் வெளியானது. அண்மையில் படப்பிடிப்பு செப்டம்பர், அக்டோபரில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் பரவலாகப் பேசப்பட்டது.
இதையடுத்து விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாகவும் அதில் ஒரு விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. சமீபத்தில் நடிகை அபர்ணா தாஸ் இப்படத்தில் இணைந்துள்ளதாகவும் ஜெய்க்கு ஜோடியாக அவர் நடிக்கவுள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனிடையே சிம்ரனிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதகாவும் ஜோதிகாவுக்கு பதில் அவர் நடிக்கவுள்ளதாகவும் முணுமுணுக்கப்பட்டது.
இந்த சூழலில் விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழு அமெரிக்கா சென்றுள்ளது. அங்கு விஎஃபக்ஸ் ஸ்கேன் மூலம் விஜய்க்கு டெஸ்ட் லுக் எடுக்கப்பட்டது. இதையடுத்து லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள திரையரங்கில் ‘தி ஈக்வலைசர் 3' படத்தின் முதல் காட்சியை விஜய் கொண்டாடி பார்த்து ரசித்துள்ளதாக, வெங்கட் பிரபு எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்த அவர், "முதல் முறையாக... தளபதி விஜய்யின் ஃபேன் பாய் தருணத்தை படம் பிடித்தேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.