'எதற்கும் துணிந்தவன்' படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா பாலா இயக்கத்தில் 'சூர்யா 41' நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக க்ரித்தி ஷெட்டி நடிக்க, சூர்யாவின் தங்கை கதாபாத்திரத்தில் மலையாள நடிகை மமீதா பைஜூ நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்க, சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. மீனவர் சமூகத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
கன்னியாகுமரி பகுதியில் முழு வீச்சில் நடைபெற்று வந்த இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதனிடையே படப்பிடிப்பு தளத்தில் சூர்யாவிற்கு, பாலாவிற்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சூர்யா இப்படத்தில் இருந்து வெளியேறியதாகவும், இப்படம் கைவிடப்படுவதாகவும் சமூக வலைத்தளங்களில் பரவலாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை மறுத்த பட தயாரிப்பு நிறுவனம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜூன் மாதம் கோவாவில் தொடங்கும் என அறிவித்தது. இருப்பினும் அதற்கான பணிகள் எதுவும் தொடங்கப்படாமல் இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில் நடிகர் சூர்யா இப்படம் குறித்து பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், மீண்டும் சூர்யா 41 படப்பிடிப்புக்கு வர காத்திருக்கிறேன் எனக் குறிப்பிட்டு படம் தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அத்துடன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில் சூர்யா மாஸான லுக்கில் தோன்றியுள்ளார்.