சிவகார்த்திகேயன் தற்போது 'மாவீரன்' படத்தில் நடித்து வருகிறார். நடிப்பது மட்டுமல்லாமல் தயாரிப்பு, பாடல் பாடுவது, பாடலுக்கு வரிகள் எழுதுவது உள்ளிட்ட துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா, வாழ், டாக்டர் உள்ளிட்ட படங்களைத் தயாரித்த சிவகார்த்திகேயன் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான 'டான்' படத்தைத் தயாரித்திருந்தார்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தில் 'விடுதலை' படத்திற்கு பிறகு சூரி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக மலையாள நடிகை அன்னா பென் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். 'கொட்டுக்காளி' என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை 'கூழாங்கல்' பட புகழ் இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் இயக்குகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் தற்போது ஃபர்ஸ்ட் லுக்கின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.
இதில், அன்னா பென் கோபமாக உட்காந்திருக்க ஒரு பெண்மணி அவரை அழைக்கிறார். அவர் எழவில்லை. அவரின் வருகைக்கு காத்திருக்கும் சூரி கோபத்துடன் புகைப்பிடித்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறார். இதனைப் பார்க்கையில் சூரியும் அன்னா பென்னாவும் கணவன் மனைவியாக நடித்துள்ளது போல் தெரிகிறது. இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜின் முந்தைய படமான 'கூழாங்கல்' ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பங்குபெற்று ‘டைகர்’ விருது வென்றது. இவ்விருதை வாங்கிய முதல் தமிழ்ப் படமும் இந்தியாவின் இரண்டாவது படமும் இதுதான். மேலும், 94வது ஆஸ்கர் விழாவிற்கு இந்தியா சார்பாக அனுப்பப்பட்டது. ஆனால் நாமினேஷன் லிஸ்டில் இடம் பெறவில்லை. இப்படம் இன்னும் திரையரங்குகளில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.