தமிழில் ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் பாடல்களைப் பாடியவர் பென்னி தயாள். மேலும் பல்வேறு நகரங்களில் இசை நிகழ்ச்சிகளில் பாடி வருகிறார். அந்த வகையில் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ட்ரோன் கேமரா பென்னி தயாள் தலையில் இடித்துள்ளது. இதில் தலையின் பின் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இரண்டு விரல்களிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.
அவர் பேசியதாவது, "காயங்கள் இப்போது பரவாயில்லை. இதிலிருந்து மிக வேகமாக மீண்டு வருவேன் என்று நினைக்கிறேன். நான் மூன்று விஷயங்களை உங்களிடம் கூற விரும்புகிறேன். முதலில் அனைத்து பாடகர்களும் மேடையில் பாடிக்கொண்டிருக்கும் போது ட்ரோன் கேமரா அருகில் வராதபடி பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் உடல் அசைவிற்கும் ட்ரோன் கேமரா இயக்கும் நபருக்கும் ஒரு புரிதல் இருக்காது. ட்ரோன் ஆப்பரேட் செய்யும் ஒருவரை கூடவே வைத்துக் கொள்ளுங்கள்.
தயவு செய்து அனைத்து கல்லூரிகள், நிறுவனங்கள், நிகழ்ச்சி அமைப்பாளர்கள் சான்றளிக்கப்பட்ட ட்ரோன் ஆபரேட்டரை தேர்வு செய்யுங்கள். இல்லையென்றால் இது மிகவும் ஆபத்தானது. நாங்கள் வெறும் பாடகர்கள். நாங்கள் மேடையில் பாடுகிறோம் அவ்வளவு தான். நாங்கள் ஸ்டண்ட் செய்ய விஜய், அஜித், சல்மான் கான் அல்லது பிரபாஸ் போன்ற ஆக்ஷன் ஹீரோக்கள் அல்ல. அதனால் நேரலை நிகழ்ச்சியின் போது ட்ரோன்கள் பாடகருக்கு மிக அருகில் வரக்கூடாது" எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
View this post on Instagram Show commentsADVERTISEMENTADVERTISEMENT