ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியுள்ள பாலிவுட் படம் 'பதான்'. இப்படத்தின் 'பேஷரம் ரங்' பாடலில் தீபிகா படுகோனே அணிந்திருக்கும் காவி நிற உடை பெரும் சர்ச்சையைக் கிளப்பி கடந்த சில வாரங்களாக சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது. காவி நிற உடையை மிகவும் கவர்ச்சியான முறையில் தீபிகா படுகோனே அணிந்திருப்பதாக இந்துத்துவா ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
இந்த நிலையில், மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் மற்றும் பாஜக-வை சார்ந்த நரோட்டம் மிஸ்ரா, பதான் படத்தின் பாடலில் உள்ள காட்சிகள் மற்றும் உடைகளை மாற்றுமாறு பதான் தயாரிப்பாளர்களிடம் கேட்டுக்கொண்டார். அடுத்து அயோத்தியைச் சேர்ந்த சாமியார் பிரமான்ஸ் ஆச்சாரியா, ஷாருக்கானை நான் நேரில் பார்த்தால் உயிரோடு அவரை எரித்து விடுவேன்; இல்லை வேறு யாராவது எரித்தால் அவருக்கு ஆதரவாக நீதிமன்றம் வரை சென்று ஆதரவு தெரிவிப்பேன் என்று கூறினார். "ஷாருக்கானை நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும்" என்று பா.ஜ.க எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் எச்சரித்தார்.
இப்படி தொடர்ந்து சர்ச்சைகள் ஒரு பக்கம் நடந்துள்ள நிலையில், பதான் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் தமிழ் ட்ரைலரை விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ஷாருக்கான் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். படத்திற்கு தொடர்ந்து பிரச்சனை வரும் சூழலில் விஜய் இந்த ட்ரைலரை வெளியிட்டது பலரின் கவனத்தைப் பெற்றுள்ளது. விஜய் முதன்முறையாக மற்றொரு நடிகரின் படத்தினுடைய ட்ரைலரை வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக விஜய்யின் பீஸ்ட் பட ட்ரைலரை ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து விஜய்க்கு வாழ்த்து கூறியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
இந்நிலையில், விஜய்யின் பதிவிற்கு தற்போது ஷாருக்கான் நன்றி தெரிவித்து ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மிக்க நன்றி நண்பா. இதனால் தான் நீங்க தளபதி. கூடிய விரைவில் ஒரு அருமையான விருந்தில் சந்திப்போம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஷாருக்கானும் விஜய்யும் நல்ல நட்புடன் பழகி வருவது அனைவரும் அறிந்ததே. முன்னதாக அட்லீ இயக்கும் 'ஜவான்' பட படப்பிடிப்பிற்காக சென்னை வந்த போது விஜய்யை சந்தித்து பேசினார். மேலும், விஜய் தனக்கு நல்ல உணவு விருந்து வைத்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.