சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி, மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' படம் இன்று (10.08.2023) உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு, திரையரங்கு முன் வழக்கம் போல் பேனர் வைத்து, பட்டாசு வெடித்து கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். இதனால் திருவிழா போல் ஒவ்வொரு திரையரங்கமும் காட்சி அளிக்கிறது. இந்தக் கொண்டாட்டம் இந்தியாவைத் தாண்டி கனடா, சைனா உள்ளிட்ட நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு திரையரங்கிலும் ரஜினி ரசிகர்கள் வித்தியாசமாகக் கொண்டாடி வருகின்றனர். ரசிகர்களைத் தாண்டி லதா ரஜினிகாந்த், தனுஷ், ரம்யா கிருஷ்ணன், அனிருத், பாடகர் விஜய் யேசுதாஸ், ராகவா லாரன்ஸ், காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ், பாடலாசிரியர் சூப்பர் சுபு உள்ளிட்டோர் திரையரங்குகளில் ரசிகர்களுடன் படம் பார்த்து ரசித்தனர்.
இந்நிலையில் ஷாருக்கானிடம் ரசிகர் ஒருவர் ஜெயிலர் படம் பார்ப்பீர்களா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடிய ஷாருக்கான், ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது ஜெயிலர் படம் பார்ப்பீர்களா என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, “கண்டிப்பாக பார்ப்பேன்., ரஜினி சார் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மாஸ். ஜவான், படப்பிடிப்பு தளத்துக்கு எங்களை வந்து ஆசீர்வதித்தார்" எனப் பதிலளித்தார்.
முன்னதாக ஜவான் படப்பிடிப்பும் ஜெயிலர் படப்பிடிப்பும் ஒரே இடத்தில் நடந்து வருவதாகத் தகவல் வெளியான நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் படப்பிடிப்புக்கு ரஜினி வந்து ஆசீர்வதித்ததை ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.