கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக லாக்டவுன் அமலில் உள்ளது. இதனால் இந்தியா முழுவதும் சினிமா ஷூட்டிங்கும் மார்ச் மாதத்திலிருந்து நிறுத்தப்பட்டுவிட்டது. மீண்டும் எப்போது ஷூட்டிங் தொடங்கப்படும் என்பது கேள்விகுறியாகவே உள்ள நிலையில் பாலிவுட் திரைத்துறை சார்ந்து இருந்த தினக்கூலி பணியாளர்கள் பலர் வருவாய் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே பல்வேறு பிரபலங்களும், பாலிவுட் நட்சத்திரங்களும் உதவி செய்து வரும் நிலையில் இயக்குநர் ரோஹித் ஷெட்டியும் தினக்கூலி பணியாளர்களுக்கு உதவியுள்ளார்.
'கத்ரோன் கே கிலாடி' என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் அவர் இந்நிகழ்ச்சி மூலம் தனக்குக் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை, துணை நடிகர்கள், நடனக் கலைஞர்கள், சண்டைக் கலைஞர்கள், லைட்மேன் உள்ளிட்ட பலருக்கு, நேரடியாக அவர்கள் வங்கிக் கணக்குக்கே அனுப்பவுள்ளார். இயக்குனர் ரோஹித் ஷெட்டியின் இந்த உதவிக்குப் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். ரோஹித் ஷெட்டியின் இயக்கத்தில் அடுத்ததாக 'சூர்யவன்ஷி' திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.