ADVERTISEMENT

"சீமான் சொன்னதை போய் நான் பாலா அண்ணனிடம் சொல்ல முடியுமா?" - நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேட்டி

06:56 PM May 07, 2022 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த 2018ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி ஹிட்டடித்த ஜோசப் திரைப்படம், விசித்திரன் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. மலையாளத்தில் இயக்கிய எம்.பத்மகுமாரே தமிழிலும் இயக்க, ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடித்துள்ளார். இயக்குநர் பாலா தயாரித்துள்ளார். நேற்று வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படத்தின் நாயகன் ஆர்.கே.சுரேஷை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் விசித்திரன் படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

"அமீரா படத்தின் ஷூட்டிங்கில் இருந்தபோது சீமான் அண்ணன்தான், ஜோசப் என்று ஒரு படம் வந்திருக்கிறது. அதை நீ ரீமேக் செய்தால் உனக்கு பொருத்தமாக இருக்கும் என்றார். உடனே போய் அந்தப் படத்தின் ரைட்ஸை வாங்கினேன். உலகின் நூறு சிறந்த படங்களில் ஜோசப்பும் ஒரு படம் என்பதால் அதன் ரீமேக்கை ரொம்பவும் கவனமாக செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதனால் ஹீரோவாக நடிப்பதில் எனக்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது.

பாலா சாரிடம் சென்று விஷயத்தைக் கூறினேன். அவர் தயாரிக்கிறேன் என்றார். நீ நடின்னு சீமான் அண்ணன் சொன்னதை போய் நான் பாலா அண்ணனிடம் சொல்ல முடியுமா? நான் நடிக்கிறேன்... நீங்க தயாரிங்க என்று சொன்னால் அது சரியாக இருக்காது. அதனால் விஜய் சேதுபதி, மாதவன் யாரையாவது நடிக்க வைக்கலாம் என்று அவருக்கு யோசனை சொன்னபோது அவரும் நீயே நடி என்றார். நான் கொஞ்சம் யோசித்தேன். ஏன்டா உன் மேல உனக்கு நம்பிக்கையில்லையா, நீ நடி... இந்தப் படம் உன்னை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்லும் என்றார்.

இந்தப் படத்திற்காக 120 கிலோவிற்கு உடல் எடையை அதிகரித்தேன். பின், 90 கிலோ, 80 கிலோ என படத்திலேயே வித்தியாசம் காட்டியிருப்போம். அந்தக் கேரக்டருக்கான பாடிலாங்குவேஜ் வரவேண்டும் என்பதற்காக நடிக்கும்போது நாள் முழுவதும் சிறுநீர் கழிக்காமல் சிறுநீர் பையை நிரப்புவேன். அதன் மூலம், நடிப்பது, பேசுவதில் வித்தியாசம் காட்டமுடியும். படத்தில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரையுமே பாலா சார்தான் தேர்வு செய்தார்.

கரோனா டைம்லதான் இந்தப் படத்தை எடுத்தோம். நான் குண்டானதை நிறைய பேர் பார்க்கவில்லை. சிலர் படம் பார்த்துவிட்டு ஆச்சர்யமாக கேட்டார்கள். படம் பார்க்கும்போது எல்லோருக்கும் ஆச்சர்யமாக இருக்க வேண்டும் என்பதற்காக உடல் எடையை கூட்டிய புகைப்படத்தை எங்கும் வெளியிடக்கூடாது என பாலா சார் சொல்லிவிட்டார்.

படம் பார்த்துவிட்டு பாலா சார் என்னிடம் எதுவுமே பேசவில்லை. என் முதுகில் ஓங்கி அடித்துவிட்டு, உன் புருஷன் அடுத்த கட்டத்திற்கு சென்றுவிடுவான் என என் மனைவிடம் கூறினார். மேலும், நல்ல நடிச்சிருக்கான். நானே எதிர்பார்க்கல என்றார்".

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT