தமிழ், தெலுங்கு இந்தி உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா தற்போது வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் வாரிசு படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அத்துடன் பாலிவுட்டில் அமிதாப்பச்சனுடன் குட்பை படத்திலும் நடித்து வருகிறார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா தன்னுடைய செல்லப் பிராணியான நாய் குட்டிக்கு விமான டிக்கெட் போட்டுக் கொடுத்தால்தான் படப்பிடிப்புக்கு வருவேன் என்று தயாரிப்பாளரிடம் கூறியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் ராஷ்மிகா மந்தனாவை ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.
இந்நிலையில் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "என்னுடைய வளர்ப்பு நாய் ஆரா என்னுடன் வரவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் கூட, அவள் விரும்பவில்லை. ஆரா என்னுடன் இருப்பதை விட ஐதராபாத்தில் இருக்கத்தான் விரும்புகிறாள். உங்க அக்கறைக்கு ரொம்ப நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.