நடிகர் தனுஷுடனான விவாகரத்தை அறிவித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 'பயணி' ஆல்பம் பாடலை உருவாக்கும் பணிகளில் கவனம் செலுத்திவந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் உருவாகியுள்ள இப்பாடலுக்கு அன்கித் திவாரி இசையமைத்துள்ளார். தமிழில் அனிருத்தும், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்தும், தெலுங்கில் சாகரும், இந்தியில் அன்கித் திவாரியும் பாடியுள்ளனர்.
இப்பாடல் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் திரைப்பிரபலங்கள் பலரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பாராட்டியும் வாழ்த்து கூறியும் வருகின்றனர். அந்த வகையில் நடன இயக்குநரும், நடிகருமான பிரபு தேவா ஐஸ்வர்யா ரஜினிகாந்தை வாழ்த்தி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "வணக்கம் பப்பு, உங்களுக்கு எல்லாம் அவங்க ஐஸ்வர்யா, ஆனா எனக்கு எப்பவுமே அவங்க பப்புதான். அவங்க 9 வருஷம் கழிச்சு ஒரு இசை ஆல்பம் பண்ணிருக்காங்க. இப்போயெல்லாம் ஆல்பம் பாடல் தான் ட்ரெண்டா இருக்கு. பப்பு அவ்வளோ சீக்கிரமா எதையும் ஒத்துக்க மாட்டாங்க, அப்படி இருக்கவங்களே ஆல்பம் பாடல் பண்ணி அதை நான்கு மொழிகளில் வெளியிடுறாங்கன்னா அது உண்மையாவே சூப்பரா இருக்கும். அதுமட்டும் இல்லாம பயணி ஆல்பம் பாடலில் அவங்க யார் யார் கூட பணியாற்றுனாங்கன்னு கேள்விப்பட்டேன். எல்லாரும் பெரிய பெரிய ஆட்கள். உண்மையாகவே சிறப்பாக இருக்கும். வாழ்த்துக்கள்" எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரபு தேவாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். இதனிடையே, பயணி ஆல்பம் பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகி பலரின் கவனத்தைப் பெற்று வருகிறது.