இதனையொட்டி 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டும் வருகின்றன.இந்த மாவட்ட மக்களுக்கான அவசர உதவிகளுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, தென் மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாகத் தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும், மீட்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இயக்குநர் மாரிசெல்வராஜ் தூத்துக்குடி பகுதிக்குச் சென்று தொடர்ச்சியாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்டது குறித்தும், சிக்கியுள்ளவர்கள் தைரியமாக இருக்குமாறும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "கருங்குளம் பஸ் ஸ்டாப்பில் சிக்கியிருந்த 60 க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். முத்தலாங்குறிச்சி மக்களும் மீட்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தின் வேகம் குறையாமல் இருப்பதால் அடுத்த கிராமங்களுக்குள் நுழைவது கடினமாக இருக்கிறது… நன்றாக விடியும்வரை மக்கள் தைரியமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கவும்… மீள்வோம்” என்றிருக்கிறார்.