நடிகை மாளவிகா மோகனன் தற்போது விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக தீவிர உடற் பயிற்சியும் சிலம்ப பயிற்சியும் மேற்கொண்டார். கோலார் தங்க வயலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடிக்க ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பிற்காக ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விக்ரமிற்கு அடிபட்டது. இதில் காயம் ஏற்பட்டு விலா எலும்பு முறிந்து தற்போது குணமடைந்து வருகிறார். இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன், ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடினார். அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அந்த வகையில் தங்கலான் படப்பிடிப்பு குறித்து ரசிகர் ஒருவர் கேட்டதற்கு பதிலளித்த மாளவிகா, "தங்கலான் நன்றாக உருவாகி வருகிறது. ஒரு தனித்துவமான படைப்பை உருவாக்கி வருகிறோம். இந்த மாதம் படத்தின் கடைசி ஷெட்யூல் நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக விக்ரம் சாருக்கு காயம் ஏற்பட்டதால் அவர் குணமடைந்த பிறகு விரைவில் மீண்டும் தொடங்குவோம்." எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும் விக்ரமுடன் பணியாற்றியதை பற்றி கேட்டதற்கு, "விக்ரம் சார் இல்லாத இப்படத்தின் பயணத்தை என்னால் நினைத்து கூடப் பார்க்க முடியவில்லை. அவர் ஒவ்வொரு இடத்திலும், கிட்டத்தட்ட ஒவ்வொரு ஷாட்டிலும் எனக்கு உதவியிருக்கிறார். அவர் தன்னலமற்றவர், தன்னைச் சுற்றியுள்ள அனைவரிடமும் மிகுந்த அக்கறை கொண்டவர். சக நடிகராக ஊக்குவிப்பவர். அவரது நகைச்சுவை உணர்வு வேற லெவல்" என்றார்.
இதை தொடர்ந்து ரசிகர் ஒருவர் தங்கலான் படத்திற்கு உடல் ரீதியாக ரெடியாவது கஷ்டமாக இருந்ததா அல்லது மன ரீதியாக ரெடியாவது கஷ்டமாக இருந்ததா எனக் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த அவர், "எல்லா வகையிலும் நான் நடித்ததில் கடினமான படம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.