90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பு, 2010 ஆம் ஆண்டில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி தற்போது வரை அதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஆரம்பத்தில் திமுகவில் இருந்த குஷ்பு பின்பு காங்கிரஸ் கட்சிக்கு மாறினார். இப்போது பாஜகவில் செயல்பட்டு வருகிறார். மேலும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்த இவர் அண்மையில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "நான் முன்பு சொன்னது போல காய்ச்சல் மோசமானது. அது என்னை பாதித்துவிட்டது. அதிக காய்ச்சல், உடல் வலி மற்றும் பலவீனம் ஆகியவற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். உங்கள் உடலில் ஏதேனும் சோர்வு ஏற்பட்டால் அதை புறக்கணித்து விடாதீர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அதன் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இந்த பதிவைப் பார்த்து ஆச்சரியமடைந்த அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.