ADVERTISEMENT

“இதயத்திலிருந்து இரத்தம் கசிகிறது” - குஷ்பு வேதனை

03:44 PM Mar 06, 2024 | kavidhasan@nak…

புதுச்சேரி மாநிலம் சோலை நகர் பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி ஒருவர் அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த சனிக்கிழமை வழக்கம் போல தெருவில் தனது நண்பர்களுடன் விளையாட சென்றார். ஆனால், சிறுமி மாலை ஆகியும் வீடு திரும்பாததால், சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடினர். சிறுமி காணாமல் போனது குறித்து முந்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். போலீசார் அக்கம்பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் அங்குள்ள அம்பேத்கர் நகர் சாக்கடை கால்வாயில் சந்தேகத்திற்கிடமாக மூட்டை ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார் மூட்டையை கைப்பற்றி பிரித்து பார்த்த போது அதில் சிறுமி கை, கால்கள் கட்டப்பட்டு கிடந்தார்.

ADVERTISEMENT

இந்த கொலையில் கஞ்சா குடிக்கும் இளைஞர்கள் சிறுமியின் கை கால்களை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துள்ளனர் என சிறுமியின் தந்தை பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த ஆடியோ அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் துப்பு துலக்கும் விதமாக அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏழு பேரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞன் மற்றும் அவனுக்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டபோது, சிறுமி மயங்கி விழுந்துள்ளதால் அவரை கொலை செய்து மூட்டை கட்டி சாக்கடையில் வீசி இருப்பது தெரியவந்தது. மேலும் கருணாஸ் என்ற அந்த இளைஞர் போலீசாருடன் சேர்ந்து அவர்களுக்கு உதவுவது போல் சிறுமியை தேடியதும் கருணாஸ் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவன் என்பதும் தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

கடத்தல் வழக்காக இருந்த இந்த சம்பவம் போக்சோ சட்டத்தின் கீழ் மாற்றப்பட்டது. இன்று சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேதப் பரிசோதனை முடிந்தவுடன் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்தச் சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்கள் மூலம் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, “என் இதயம், இந்த நேரத்தில் புதுச்சேரியில் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமியின் பெற்றோரிடம் இருக்கிறது. எந்த குழந்தைக்கும் இது போன்று நடக்கூடாது. ஒரு தாயாக இருப்பதால், இதுபோன்ற சம்பவங்களால் என் இதயத்திலிருந்து இரத்தம் கசிகிறது. இதைவிட அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், இந்த கொடூரமான செயலை சிறார் கும்பல் செய்ததுதான். ஒரு மைனருக்கு மிருகத்தனமான குற்றத்தைச் செய்யும் மனமிருக்குமேயானால் சிறுவர்களின் வயதைக் பொருட்படுத்தாமல் தண்டிக்கப்பட வேண்டும் என்று எப்பொழுதும் நான் சொல்வதுண்டு. சிறுவர்கள் என்ற காரணத்தினால் அவர்களை சுதந்திரமாக விட்டுவிடக்கூடாது. ஏழைக் குழந்தையை நம்மால் திரும்பக் கொண்டுவர முடியாது. ஆனால், இதை நேராக நாம் பதிவு செய்ய முடியும். சட்டத்திலிருந்து யாரும் தப்ப முடியாது” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT