Skip to main content

“தைரியம் இருந்தால் ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்தியுங்கள்” - அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ

Published on 21/12/2022 | Edited on 21/12/2022

 

former admk mla vaiyapuri talk about Statehood for Puducherry

 

“புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தர முடியவில்லை என்றால் முதலமைச்சர் ரங்கசாமி பதவி விலக வேண்டும்” என அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ வையாபுரி மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

 

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள அ.தி.மு.க அலுவலகத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அ.தி.மு.க புதுச்சேரி மாநில துணை செயலாளருமான வையாபுரி மணிகண்டன் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர், “அமைச்சர் லட்சுமி நாராயணன் செய்தியாளர்களைச் சந்தித்த போது என்னைப்பற்றி தனிநபர் விமர்சனம் செய்துள்ளார். ஆனால் அந்த சந்திப்பில் புதுச்சேரி மக்கள் நலனைப் பற்றி ஏதேனும் ஒரு வார்த்தை பேசினாரா? அமைச்சர் லட்சுமி நாராயணன் புதுச்சேரியினுடைய நிழல் முதலமைச்சராக செயல்படுகிறார். 

 

முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அ.தி.மு.கவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் நான் மாநில துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளேன். ஒரு கட்சியில் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லாதவர்கள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். நான் இரண்டு முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். இரண்டு முறையும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டேன். ஆனால் என்னைப் பற்றி பேசிய அமைச்சர்கள் பல முறை தேர்தலில் போட்டியிட்டுள்ள நிலையில் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு கட்சிகளில் போட்டியிட்டவர்கள். 

 

2016லிருந்து 21 வரை ஆட்சியில் இல்லாதபோது என்.ஆர் காங்கிரஸ் கட்சி மக்களுக்காக என்ன செய்தது, என்ன போராட்டங்களை நடத்தியது?  எப்போதுமே மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரு கட்சியாக அ.தி.மு.க மட்டுமே உள்ளது. கடந்த காலங்களில் என்.ஆர்.காங்கிரஸ் மக்கள் மத்தியில் பல பொய்களைச் சொல்லி ஆட்சி நடத்தியதன் விளைவுதான் இரண்டு தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் ஒரு தொகுதியில் ஓட ஓட விரட்டப்பட்டார். வெற்றி பெற்ற ஒரு தொகுதியிலும் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள் தனி நபர் விமர்சனம் செய்வது தவறு. அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்துத்தான் என்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் வெற்றி பெற்றுள்ளனர். அ.தி.மு.க கூட்டணி தர்மத்தை மதித்து செயல்பட்ட நிலையில், கூட்டணி தர்மத்தை மீறி அ.தி.மு.க போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களைப் போட்டு வெற்றி பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் கூட்டணியைப் பற்றியோ, கட்சியைப் பற்றியோ பேசத் தகுதி உள்ளதா எனப் புரிந்துகொள்ள வேண்டும். அ.தி.மு.க வாக்குகளைப் பெற்று வென்ற என்.ஆர் காங்கிரசார் தைரியம் இருந்தால் அனைவரும் ராஜினாமா செய்து தேர்தலை சந்தியுங்கள். அ.தி.மு.கவும் 30 தொகுதியிலும் தனித்து நிற்கும். யார் அதிக இடங்களைப் பெறுகிறார்கள் எனப் பார்க்கலாம்.

 

முதல்வர் மாநில அந்தஸ்து பெற்றுத் தருவோம் எனக் கூறித்தான் ஆட்சிக்கு வந்துள்ளார். 2001ஆம் ஆண்டிலிருந்து 13 ஆண்டுகளுக்கு மேலாக முதலமைச்சராக இருக்கும் ரங்கசாமி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தர வேண்டும். செய்ய முடியவில்லை எனத் தெரிந்தும் ஏன் அந்த வாக்குறுதியை மக்களிடம் கொடுக்க வேண்டும்.  "செய் அல்லது செத்து மடி" என்பதைப் போல முதல்வர் மக்களைத் தொடர்ந்து ஏமாற்றாமல், மாநில அந்தஸ்தைப் பெற்றுத் தர வேண்டும், அவ்வாறு முடியவில்லை என்றால் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

 

மாநில அந்தஸ்து கேட்டு முதலமைச்சர் ரங்கசாமி பிரதமரை சந்தித்ததாக அமைச்சர் கூறியிருக்கும் நிலையில் பிரதமர் முடியாது எனச் சொல்லிவிட்டாரா? இது தொடர்பாக பாஜக தலைவர் உண்மைத் தன்மை குறித்து விளக்க வேண்டும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்குமா கிடைக்காதா என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.