லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள 'விக்ரம்' படம் இந்தியாவைத் தாண்டி உலக நாடுகளிலும் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்த படம் வசூலில் உலகம் முழுவதும் ரூ.270 கோடி வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றிக்காக லோகேஷ் கனகராஜ், உதவி இயக்குநர்கள், சிறப்பு தோற்றத்தில் நடித்த சூர்யா போன்றோருக்கு பரிசுகளை வழங்கி அன்பைப் பகிர்ந்தார்.
இந்நிலையில் 'விக்ரம்' படம் குறித்து மீண்டும் ஒரு வீடியோவை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், " தமிழர்கள் இல்லாத நாடு இல்லை. உலகம் முழுக்க பறந்து விரிந்திருக்கும் உலக தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். திரையிடப்பட்ட நாடுகளில் எல்லாம் விக்ரம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இந்த பிரமாண்டமான வெற்றியை எனக்குப் பரிசளித்த தொப்புல் கொடி உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். சிறந்த சினிமாக்களின் மூலம் உங்களை தொடர்ந்து எண்டர்டெயின்மெண்ட் செய்வதுதான், நான் உங்களுக்கு செய்யக்கூடிய பதில், நன்றி என்பதை நான் அறிவேன். அதை செய்வேன். உயிரே...உறவே... தமிழே... நன்றி " எனக் கூறியுள்ளார்.