ADVERTISEMENT

“இந்த முகத்தில் கூட ஏதோ ஒண்ணு இருக்குன்னு நினைத்தால்..” - அழைப்பு விடுத்த யோகிபாபு

12:30 PM Jan 30, 2023 | dassA

ADVERTISEMENT

ADVERTISEMENT

இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘பொம்மை நாயகி’. நடிகர் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் ஷான். கதாநாயகியாக சுபத்ரா நடிக்க, யோகிபாபுவின் மகளாக குழந்தை நட்சத்திரம் ஸ்ரீமதி நடித்துள்ளார்.

வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான பா. ரஞ்சித், படத்தின் நாயகன் யோகிபாபு, சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் மாரி செல்வராஜ், அதியன் ஆதிரை, பிராங்க்ளின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய யோகிபாபு, “இந்தப் படத்தில் இயக்குநர் ஷான் என்னை காமெடி பண்ண விடவே இல்லை. பா.ரஞ்சித்தின் அட்டகத்தி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த சமயத்தில் திடீரென இருபது நாட்கள் கால்ஷீட் கேட்டார்கள். அந்த சமயத்தில் நான் சுந்தர்.சியின் கலகலப்பு படத்திற்காக தேதிகள் கொடுத்திருந்ததால் அந்த வாய்ப்பு மிஸ் ஆனது. ஆனால் பரியேறும் பெருமாள் படம் மூலமாக நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் நடிக்கும் வாய்ப்பை என்னை அழைத்து தந்த இயக்குநர் மாரி செல்வராஜுக்கு நன்றி. இந்த படம் தந்தை மகள் கதை என்பதால் ஒரு அப்பாவின் வலி என்ன என்பதை உணர்த்தும் விதமாக உருவாகியுள்ளது.

கடந்த ஐந்து மாதங்களாக ஒரு அப்பாவாக நானும் அதை உணர்கிறேன். இந்த படத்திற்காக இயக்குநர் ஷான் ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கிறார். சினிமாவில் ஆரம்ப காலத்திலிருந்து எவ்வளவோ அவமானங்களைத் தாண்டித்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். நான் எப்போதுமே காமெடி நடிகன் தான். அதேசமயம் இந்த முகத்தில் கூட ஏதோ ஒன்று தெரிகிறதே என நினைத்து என்னை நம்பி அழைத்தால் நடிக்கத் தயாராக இருக்கிறேன். தாராளமாக வாங்க” என்று இளம் படைப்பாளிகளுக்கு அழைப்பு விடுத்தார் யோகிபாபு.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT