Skip to main content

"வாழ்வை மாற்றிய ராமுடனான அந்த இரவு... ரஞ்சித் அனுப்பிய SMS..." - மாரி செல்வராஜ் சொல்லாத கதைகள்

Published on 02/10/2018 | Edited on 03/10/2018

மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் பரியேறும் பெருமாள் திரைப்படம், ஒரு மக்கள் படமாக வெற்றி பெற்றிருக்கிறது. 'பரியேறும் பெருமாள்' சொல்லிய கதைகள் இதுவரை சொல்லப்படாதது. அதிலும் சொல்லப்படாத சில கதைகளை நம்மிடம் பேசினார்.

 

mari selvaraj



எழுத்தாளரில் இருந்து இயக்குனர்... எப்படி இருந்தது அந்தப் பயணம்?

எழுத்தாளர் என்பதற்கு முன் நான் துணை இயக்குனர். அந்தக் காலகட்டங்களில் நிறைய நேரம் இருக்கும். அந்த சமயங்களை எப்படி உபயோகமாக மாற்றுவது என்று எங்கள் இயக்குனர் ராம் அமைத்துக் கொடுத்ததுதான் எழுத்தாளன் என்பது.

இயக்குனர் ராமை எப்படி சந்தித்தீர்கள், உங்களுக்கும் அவருக்குமான உறவு எப்படி என்பதை சொல்லுங்கள்?

சினிமா பற்றி எதுவும் தெரியாமல் அதற்குள் வந்தவன்தான் நான். ஒரு நகரத்தில் வாழ வழியில்லாததால் வேறு நகரத்திற்கு வந்து எப்படியாவது பிழைத்துக் கொள்ளலாம் என்று சென்னைக்கு வந்தேன். அப்போ வேலை தேடி அலையும்போது, எதார்த்தமாக ஒரு அலுவலகத்திற்குள் நுழைந்தேன். பிறகுதான் தெரிந்தது அது 'கற்றது தமிழ்' படத்தின் அலுவலகம் என்று. முதலில் அங்கு ஆஃபிஸ்பாயாகத்தான் சேர்ந்தேன். ஒரு நாள் இரவு இயக்குனர் ராமுடன் தனியாகப் பேச வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவரும் நானும் நிறைய பேசினோம். அப்போதுதான் அவர் முடிவு செய்து என்னை மறுநாளில் இருந்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கூட்டிட்டு போய்விட்டார்.

'கற்றது தமிழ்' முடிந்து ஐந்து வருடங்கள் கழித்துதான் 'தங்கமீன்கள்' படம் துவங்கினார். அதுவரை அவருடனே இருந்தீர்களா?

அந்த ஐந்து வருட இடைவெளிதான் என் வாழ்வின் பொற்காலம் என்று சொல்வேன். ஏன் என்றால், அந்த ஐந்து வருடத்துக்குள் அவருடன் இருந்த அனைவரும் வெளியேறிவிட்டார்கள். அதனால் எனக்கும் அவருக்குமான பழக்கம் இன்னும் நெருக்கமானது. இன்னொன்று முக்கியமாக சொல்லவேண்டும். முதலில் கற்றது தமிழ் படத்தில்  ஆஃபிஸ் பாயாக வேலைக்கு சேர்ந்தேன். பின் ஐந்து வருடங்கள் கழித்து தங்கமீன்கள் படம் வரும்போது அனைவரும் அறியும்படியான எழுத்தாளனாக எழுதத்துவங்கிவிட்டேன். இது எல்லாவற்றுக்கும் காரணம் அவர்தான்.

 

pariyerum perumal 1



இயக்குனராவதற்கு எப்படி தயாரானீங்க?

என் தொடரை படித்தவர்கள் என்னை எங்கே பார்த்தாலும் 'படம் எப்போ பண்ணுவீங்க?'னு கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. ஒரு கட்டத்துக்கு மேல் ராம் சார்கிட்டயும் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. அப்பறம் அவர்தான் ஸ்கிரிப்ட் ரெடி பண்ண சொன்னாரு. நாலு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி அவர்கிட்ட சொன்னேன். அவர் அதில் இருந்து ஒரு ஸ்கிரிப்ட் ஓகே பண்ணி கொடுத்தார். அந்தக் கதைதான் 'பரியேறும் பெருமாள்'.

இயக்குனர் ரஞ்சித் எப்படி இதுக்குள் வந்தார்?

ராம் கூடவே இருந்ததால் 'காத்திருப்பதே தவம்' என்ற மனநிலைக்கு மாறிவிட்டேன். அதுமட்டும் இல்லாமல் அவசரம் ஏதும் படமால் பொறுமையாக அவருடன் உதவி இயக்குனராக பணிபுரிந்துகொண்டே, சந்திப்பவர்களிடம் எல்லாம் இதைப் பற்றி பேசுவேன். அப்பொழுதெல்லாம் நான் ரஞ்சித் அண்ணாவுடன் ஃபோனில் பேசுவேன். அவரது படங்கள் பார்த்துவிட்டு வாழ்த்து சொல்வேன். ஒரு முறை அவரை சந்திச்சபோது 'என்ன பண்ற'னு கேட்டாரு. அப்போதான் ஸ்கிரிப்ட் லைன் மட்டும் சொன்னேன். அவருக்கு ரொம்பப் பிடிச்சிடுச்சு. "சரி ட்ரை பண்ணு, நானும் யாரவது இருந்தா சொல்றேன்"னு சொல்லி அனுப்பிட்டாரு. அதுக்கு அப்புறம் அவர் ’நீலம் ப்ரொடக்ஷன்’ ஆரம்பிச்சார். அதுல முதல் படமா உன்னுடையதே பண்ணலாம்னு சொன்னார்.

 

pariyerum perumal anandhi kadhir



'பரியேறும் பெருமாள்' - தலைப்பை எப்படி தேர்ந்து எடுத்தீங்க?

எங்கள் குலதெய்வத்தின் பெயர்தான் பரியேறும் பெருமாள். அதுமட்டும் இல்லாமல் என் அண்ணனுடைய பெயரும் என் அப்பாவின் ஜாதகப் பெயரும் அதுதான். எனக்கும் அந்தப் பெயரின் மேல் ஒரு ஈர்ப்பு இருந்தது. ரொம்ப நாட்களாகவே எனக்கு அந்தப் பெயர் வைக்கவில்லையே என்று ஏங்கி இருக்கிறேன். அதனால் ஸ்கிரிப்ட் எழுதும்போதே முடிவு செய்துதான் எழுதினேன், கதாபாத்திரத்தின் பெயர் பரியேறும் பெருமாள் என்று. கதையும் அந்தக் கதாபாத்திரத்தை மையப்படுத்திதான் இருக்கும். அதனால் கதை கேட்பவர்களுக்கும் அந்தத் தலைப்பு பிடித்துவிட்டது.

படத்தில் 'கருப்பி' நாய் ஒரு பாத்திரமாகவும் ஒரு குறியீடாகவும் அனைவரையும் ஈர்த்தது... அதன் உருவாக்கம் பற்றி?

கருப்பி என்னுடைய அகம். பொதுவாக இருபத்திநான்கு மணிநேரமும் ஒருவர் தன் நாயை கொஞ்சமுடியாது. வீட்டில் ஒரு விழா என்றால் நாயை தோட்டத்தில் கட்டிவிடுவோம். ஆனால் அதைத்தாண்டி மனிதனுக்கும் நாய்க்கும் இடையேயான ஒரு வாழ்க்கையை இதில் காட்ட வேண்டும் என்று முடிவு செய்தென். முக்கியமாக கருப்பி காட்சிகளை எல்லாம் எடுக்கும்போது உடன் இருந்தவங்க எல்லாருக்கும் ரொம்ப நெருக்கமாச்சு. அப்போதான் புரிஞ்சுது கருப்பிதான் இந்தக் கதையின் முக்கிய கால்கள் என்று. அதனால் அதன் வழியே இந்தப் படத்தை எடுத்து சென்றோம். இது ஒரு அரசியல் குறியீடா என்று தெரியவில்லை. ஆனால், நிச்சயம் கருப்பி, ஒரு எளிய மனிதனின் வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதன் குறியீடாகத்தான் இருக்கும். கருப்பி பாடல் வரிகள் அழுத்தம் கொடுப்பதாக பலரும் சொன்னார்கள். புதிதாக கேட்பவர்களுக்கு அப்படி தோன்றுவது சாதாரணம்தான். ஆனால், அந்த வரிகளை தினமும் கேட்கும் மக்களுக்கு அது ஒன்றும் புதிது இல்லை. அவர்களுக்குள் இருக்கும் அந்தக் கேள்விகளின் தொகுப்புதான் அந்தப் பாடல்.

இயக்குனர் ராம், இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ரஞ்சித்... இருவரும் என்ன சொன்னார்கள்?

இருவருமே பார்த்தார்கள். காட்சிகளை மட்டும் இணைத்து டப்பிங் செய்யாமல், இசை இல்லாமலேயே ராம் சார் ஒரே இரவில் மூன்று முறை பார்த்தார். 'நான் நினைத்ததைவிடவும் நீ பெரிதாக வளர்ந்துவிட்டாய்' என்றார். ரஞ்சித் பார்த்துவிட்டு அன்று இரவு ஒரு SMS அனுப்பினார். அந்த வார்த்தைகளை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அந்த வார்த்தைகளைப் பார்த்தபின் ரஞ்சித் அண்ணன் மீதான என் பார்வை பலமடங்கு உயர்ந்தது. அதை நான் இப்போது சொல்ல விரும்பவில்லை. ஆனால், இதுபோன்ற வாழ்த்து இதுவரை யாரும் பெற்றிடாதது என்று மட்டும் சொல்லமுடியும்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சர்ப்ரைஸ் கொடுத்த தங்கலான் படக்குழு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
pa.ranjith Thangalaan Vikram Birthday Tribute Video

தமிழ் சினிமா ஹீரோவில், ஹேட்டர்ஸே இல்லாத எல்லா தரப்பு மக்களுக்கும் பிடித்தமான நடிகராக வலம் வருபவர் விக்ரம். தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு உயிரூட்டும் வகையில் தனது அர்ப்பணிப்பை கொடுக்கும் முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர். முன்னணி நடிகர் என்ற அந்தஸ்து பெற்றாலும் தொடர்ச்சியாக வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அவர் நடித்த காசி, பிதாமகன், அந்நியன், தெய்வத்திருமகள், ஐ உள்ளிட்ட படங்கள் அவரது அர்ப்பணிப்பிற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன. 

அந்த வரிசையில் தற்போது தங்கலான் படம் உருவாகி வருகிறது. இந்த சூழலில் இன்று பிறந்தநாள் காண்கிறார் விக்ரம். அதனால் ரசிகர்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தங்கலான் படக்குழு, விக்ரமிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு ஸ்பெஷல் வீடியோவை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளது. அதில் அவரது கதாபாத்திரத்திற்காக அவர் தயாராகும் முறையை மற்றும் அவரது அர்ப்பணிப்பை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த வீடியோ தற்போது படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. 

pa.ranjith Thangalaan Vikram Birthday Tribute Video

இப்படத்தை பா. ரஞ்சித் இயக்கி வரும் நிலையில், விக்ரமோடு பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கோலார் தங்க வயலை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ள நிலையில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் தள்ளி போய் இம்மாதம் வெளியாவதாக பின்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் ரிலீஸ் தேதி அறிவித்தபாடில்லை. இந்த சூழலில் தற்போது வெளியாகியுள்ள ஸ்பெஷல் வீடியோவில் விரைவில் இப்படம் வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

“கடன் வாங்கி கதை சொல்ல முடியாது” - மாரி செல்வராஜ் ஆதங்கம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
mari selvaraj about maamannan in pk rosy film festival

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ‘ரோஸி திரைப்பட விழா’ கடந்த  8ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றுடன் நிறைவடையும் இந்த விழாவில் இன்று மாமன்னன் திரைப்படம் திரையிடப்பட்டது. பின்பு படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் ரசிகர்களுடன் உரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.  

அப்போது, மாமன்னன் படம் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார் மாரி செல்வராஜ். அதன் ஒரு பகுதியில், “மாமன்னன் படம் ஒரு சாதாரண சம்பவம். எங்க அப்பா ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். நான் சேரில் உட்காந்திருக்கேன். அவர் உட்காரவில்லை. அன்னைக்கு எங்க அப்பா உட்பட யாருமே ஃபீல் பண்ணவில்லை. ஆனால் எனக்கு அவர் உட்காரவில்லை என தோன்றியது. ஏன் என கேட்டபோது நாங்க உட்காரமாட்டோம் என்றார். சின்ன வயதில் நானே நிறைய பார்த்திருக்கிறேன். ஆனால் இன்றைக்கு பார்க்கும் போது அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் அது ஒரு கதையாக மாறுகிறது. இன்றைக்கு பரியேறும் பெருமாள் பண்ணிட்டு போனபோது கூட, எங்க அப்பா அப்படித்தான் நின்னுகிட்டு இருந்தார். 

என்னுடைய படைப்பு 10 வருடம் கழித்து கேள்விக்கு உட்படுத்தப்படலாம். எனக்கு இன்றைக்கு உள்ள வலி, அதை வெளியேற்ற வேண்டும் அவ்வளவுதான். ஒரு படைப்பாளியாக ஒரு சுமையை இறக்குகிறேன். எனக்கு விடுபடுவதற்கான வழி தான் இந்த சினிமா. என்னுடைய படைப்பு எதுவாக மாறும் என்பது தெரியாது. எனக்குள் இருக்கும் கோவத்தை மட்டும் கலையாக மாற்றுவதற்கு நான் விரும்பவில்லை. என் வாழ்க்கையை கலையாக மாற்றுவது ரொம்ப ஈஸி. என் வாழ்க்கையில் ஒரு அறம் இருக்கிறது என நம்புவது, அந்த அறத்தை படம் பிடித்துக் காட்டுவது, அதன் மூலம் மனிதத் தன்மையை கேள்விக்குட்படுத்துவது. இதைத்தான் என்னால் பண்ண முடியும். அது ஏற்றுக் கொள்ளப்படுகிறதா? இல்லையா? என்பது பற்றி எனக்கு கவலை கிடையாது.      

நமக்கு முன்னாடி ஒடுக்கப்பட்டோரின் வாழ்க்கையைத்தான் படம் எடுத்துட்டு இருக்கிறோம். தமிழ்நாட்டில் ஒரு 10 பேர் முக்கிய ஆளுமைகளாக பேசிக்கொண்டு வருகிறோம். தனக்கு நடந்ததை எல்லாம் சொல்ல முடியாமல் நசுங்கி இறந்து போனவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள். அவர்கள் வாழ்கையும் கதைதான். 10 பேரோட வெற்றிக்கதையை சொல்வது மட்டும் என்னுடைய வேலை கிடையாது. நசுங்கி, பிசுங்கி காணாமல் போனவர்களின் கதையைத் தோண்டி எடுத்து, அவர்கள் யாரால் நசுக்கப்பட்டார்கள் என்ற கேள்வி எனக்குள் இருக்கிறது. ஏன் நசுக்கப்பட்டோம், பிதுக்கப்பட்டோம் என சொல்லிக்கொண்டே இருக்கீங்க என கேட்பார்கள். வேறு வழி இல்லை. என்னுடைய கதையைச் சொல்லும் போது அப்படித்தான் சொல்ல முடியும். நான் இன்னொருத்தன் கதையை கடன் வாங்கி சொல்ல முடியாது. அந்தக் கதைக்குள் ஒரு முரண்பாடு இருந்தது என்றால், அதற்கு நான் ஒன்னும் செய்ய முடியாது. மறுபடி மறுபடி எனக்கு அப்படிப்பட்ட வாழ்க்கைதான் கொடுக்கப்பட்டது. அந்தக் கேள்விகளை நான் கேட்டுக்கொண்டுதான் இருப்பேன்” என ஆதங்கம் நிறைந்து பேசினார்.