கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான 'மாநகரம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கார்த்தியை வைத்து கைதி படத்தையும், விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தையும் இயக்கியிருந்தார். மூன்றே படங்களில் பலரின் கவனத்தை தன் பக்கம் திருப்பி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு உயர்ந்தார். தனது சினிமா ஆசானான கமல்ஹாசனை வைத்து இயக்கிய விக்ரம் ஹிட்டடிக்கவே லோகேஷ் கனகராஜின் பெயர் கோலிவுட் தாண்டி பிற மொழி ரசிகர்களிடமும் பரவியது. இதையடுத்து விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை லோகேஷ் இயக்கவுள்ளார். இதனிடையே கருத்துக்கள் மற்றும் படம் குறித்த அறிவிப்புகளை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் மூலம் ரசிகர்களிடம் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமூக வலைத்தளங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், " நான் அனைத்து சமூக வலைத்தளங்களில் இருந்தும் சிறிது காலம் விலகி இருக்க போகிறேன். விரைவில் எனது அடுத்த படத்தின் அறிவிப்புடன் திரும்பி வருகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.