ADVERTISEMENT

"அப்பா... சாவடிக்கிறப்பா நீ"... மேடையில் துருவ் - விக்ரம் செல்லச் சண்டை!

12:14 PM Oct 22, 2019 | vasanthbalakrishnan

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிகராக அறிமுகமாகும் படம் 'ஆதித்ய வர்மா'. தெலுங்கில் மிகப்பெரிய வெற்றிப் படமாகவும் ஒரு ட்ரெண்ட் செட்டராகவும் அமைந்த 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக வெளிவரும் இந்தப் படம் முதலில் 'வர்மா' என்ற பெயரில் பாலா இயக்கத்தில் தயாரானது. பாடல் வெளியீட்டு விழா வரை வந்த அந்தப் படத்தின் இறுதி வடிவம் திருப்தியளிக்கவில்லை என்று கூறி தயாரிப்பு நிறுவனம் அந்தப் படத்தை கைவிட்டுவிட்டு மீண்டும் 'ஆதித்ய வர்மா' என்ற பெயரில் 'அர்ஜுன் ரெட்டி'யில் பணியாற்றிய கிரிசய்யாவின் இயக்கத்தில் மீண்டும் உருவாக்கியது. 'ஆதித்ய வர்மா'வின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

ADVERTISEMENT



விழாவில் பேச மேடையேறிய நடிகர் விக்ரம், "எனக்கு துருவ் மாதிரி நல்லா பேசத் தெரியாது. அதுக்கெல்லாம் என் தங்கை கணவர் இருக்கார். அவர் நல்லா பேசுவாரு. ஆனா, எனக்கு இப்போ ரொம்ப டென்ஷனா இருக்கு. ரொம்ப டென்ஷனா இருக்கு, சேது வந்தப்போ கூட இவ்ளோ டென்ஷன் இல்ல" என்று சற்று பதற்றமாகத் தொடங்கினார். தொடர்ந்து, "நான் யோசிச்சதில்ல, அவன் நடிக்கபோறானா டைக்ரக்சனா வேற எதுவுமான்னு. உன் ஆசைப்படி எந்த வேலை வேணாலும் தேர்ந்தெடுன்னு சுதந்திரமா விட்டோம். ஆனா அவன் சினிமா செலெக்ட் பண்ணான். எனக்கு அது ரொம்ப சந்தோஷம். இங்க முதல் நன்றியை தயாரிப்பாளர் முகேஷ் சாருக்குதான் சொல்லணும். 'அர்ஜுன் ரெட்டி' ரிலீஸ் ஆகும் முன்னரே அந்த ரைட்ஸ் வாங்கிட்டாரு. பல ஹீரோஸ் அவரை கேட்டாங்க. ஆனால், அவர்தான் துருவ் வச்சுதான் பண்ணணும்னு முடிவு பண்ணினாரு. அதுவும் ஒரு டப்ஸ்மேஷ் பாத்துட்டு. எனக்கு பயமாக இருந்தது, ஹெவி ரோல், அவனுக்கு வயசு பத்துமா இல்லையான்னு. ஆனா, துருவ் முழு அர்ப்பணிப்போட சிறப்பாக பண்ணியிருக்கான். ஒரு தந்தையா என்ன வேணா சொல்லலாம், ஆனால் நான் சொல்ல விரும்பல. நீங்க பார்த்துட்டு சொல்லுங்க" என்று நெகிழ்ச்சியாகப் பேசினார்.

ADVERTISEMENT


பின்னர் ஜாலி மூடுக்கு மாறிய அவர், "அர்ஜுன் ரெட்டிக்கும் கபீர் சிங்குக்கும் ஆதித்திய வர்மாக்கும் என்ன வித்தியாசம்னா நாங்க இதை ரொம்ப ரசிச்சு லவ் பண்ணி செஞ்சோம். நான் உளறுறேன்னு தெரியுது, மன்னிச்சுருங்க" என்று தொடர்ந்து பேசிவிட்டு மேடையிலிருந்த துருவ் குறித்து "துருவ்வுக்கு எந்த அளவு டெடிகேஷன்னா, அர்ஜுன் ரெட்டி படத்தின் எந்த சீனை இப்போ சொல்லி நடிக்க சொன்னாலும் அப்படியே தமிழில் நடித்துக் காட்டுவான்" என்றார். 'மாட்டிவிட்டுடீங்களே' என்ற ஃபீலிங்கோடு வந்த துருவ்வை அவரே ஒரு காட்சியை சொல்லி நடித்துக்காட்ட சொன்னார். முதலில் தயங்கிய துருவ், பின்னர் நடித்தார். அப்படியும் விக்ரம் அவரை விடாமல், "அந்த துளு டயலாக் பேசு" என்று கூற உடனே துருவ், "அப்பா...சாவடிக்கிறப்பா நீ" என்று செல்லமாக சண்டையிட்டார்.



இதற்குப் பழிக்குப் பழி வாங்கும் விதமாக, பேசி முடித்து மேடையில் இருந்து இறங்க நினைத்த விக்ரமை ரசிகர்களிடம் மாட்டிவிட்டார் துருவ். "அவர் போறாருங்க, அவரை 'சேது' டயலாக் பேச சொல்லுங்க" என்று துருவ் கூற, ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். "ஒரு காலத்துல ரொம்ப சந்தோஷமா இருந்தேன்டி..." என்று தொடங்கும் புகழ் பெற்ற 'சேது' வசனத்தைப் பேசவேண்டுமென அவரே எடுத்துக்கொடுத்தார். பின்னர் விக்ரம் அந்த வசனத்தைப் பேச ரசிகர்களின் குதூகலம் அதிகரித்தது.

"இங்க என் குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் இருக்காங்க. அவர்கள் துருவ் நல்லா வரணும்னு எப்படி ஃபீல் பண்ணுறாங்களோ அதே ஃபீலிங்தான் என் ரசிகர்களாகிய உங்களுக்கும் இருக்கு. அந்த அளவுக்கு என் குடும்பத்துக்கு இணையானவர்கள் நீங்க. நீங்க இங்க இருக்கீங்கன்னு சொல்லல. இதுதான் உண்மை. இதுக்கு நான் கொடுத்து வச்சிருக்கணும், நன்றி. ஒவ்வொருவரும் தனது வாரிசுகளுக்கு வீடு, நிலம்னு ஏதாவது விட்டுட்டு போகணும்னு நினைப்பாங்க. நான் துருவ்வுக்கு விட்டுட்டுப் போற சொத்து நீங்களாதான் இருக்கும்" என்று நெகிழ்வாக முடித்தார் விக்ரம்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT