இந்தியத் திரைத்துறையில் மிக முக்கிய விருதாகப் பார்க்கப்படும் தேசிய திரைப்பட விருது ஆண்டுதோறும் கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டிற்கான 69வது தேசிய விருது அறிவிப்பு நேற்று முன்தினம் மாலை அறிவிக்கப்பட்டது.
இதில் தெலுங்கு படமான புஷ்பா, 2 தேசிய விருது வென்றுள்ளது. சிறந்த நடிகருக்காக அல்லு அர்ஜுனுக்கும், சிறந்த இசையமைப்பாளருக்காக தேவி ஸ்ரீ பிரசாத்திற்கும் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் முதல் முறையாக தேசிய விருது வாங்கியுள்ளார் தேவி ஸ்ரீ பிரசாத். இவருக்கு கமல்ஹாசன், ஏ.ஆர். ரஹ்மான், ராஜமௌலி உள்ளிட்ட பல முன்னணி திரைப் பிரபலங்கள் வாழ்த்து கூறினர்.
இந்நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத், இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். அவரைப் பார்த்ததும் அவரது காலில் விழுந்து ஆசி பெற்று சிறிது நேரம் உரையாடினார். இதனை வீடியோவாக தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்துள்ள தேவி ஸ்ரீ பிரசாத், "என் இசைக் கடவுளை சந்தித்தேன்" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.