அறிமுக இயக்குனர் ஷிஜின்லால் எஸ்எஸ் இயக்கத்தில் சோனியா அகர்வால், விமலா ராமன், சர்மிளா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கிராண்மா. திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம் வரும் 27ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.
அந்த நிகழ்வில் கலந்து கொண்ட சோனியா அகர்வாலிடம் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்துவருவது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த சோனியா அகர்வால், “அத்தகைய செய்திகளைப் பார்க்கையில் நான் ரொம்பவும் எமோஷனலாகிவிடுவேன். உலகம் எங்கே போகிறது என்பதை பார்க்கும்போது ரொம்பவும் வருத்தமாக உள்ளது. நம் எல்லோருக்குமே குழந்தை உள்ளது. எனக்கு குழந்தை இல்லாவிட்டாலும்கூட என்னுடைய குடும்பத்தில் குழந்தைகள் உள்ளன. எப்படி குழந்தைகளுக்கு எதிராக இப்படி யோசிக்கிறார்கள், இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதே புரியவில்லை. என் கையில் துப்பாக்கி இருந்தால் அங்கேயே அவர்களை சுட்டுவிடுவேன். அதேநேரத்தில் சட்டத்தை மீறியும் நாம் செயல்பட முடியாது” எனத் தெரிவித்தார்.