கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன்னட திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், நடிகை ராகினி திரிவேதி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், தொழிலதிபர் பரத் மற்றும் நடிகையும் மாடலுமான சோனியா அகர்வால் வீட்டில் நேற்று சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த இருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான செய்தியை வெளியிட்ட சில இணைய ஊடகங்கள், கன்னட நடிகை சோனியா அகர்வாலின் புகைப்படத்திற்கு பதிலாக 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை சோனியா அகர்வாலின் புகைப்படத்தை வெளியிட்டன. இந்தச் செய்தி வெளியாகி திரைத்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பலரும் நடிகை சோனியா அகர்வாலை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர். தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகிவரும் கிரான்ட்மா படப்பிடிப்பில் பிஸியாக நடித்துவரும் சோனியா அகர்வால் இத்தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இந்த நிலையில், முறையாக விசாரிக்காமல் இது குறித்து செய்தி வெளியிட்ட ஊடங்களை நடிகை சோனியா அகர்வால் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த விவகாரத்தில் உண்மையை அறியாமல் செய்திவெளியிட்ட ஊடக நிறுவனங்கள் மற்றும் செய்தியாளர்கள் மீது நான் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். காலை முதல் தொடர்ச்சியாக வரும் தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் எனக்கும் என் குடும்பத்திற்கும் அதிர்ச்சியையும் பெருந்துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளன" எனக் குறிப்பிட்டுள்ளார்.
P S - I will be taking appropriate legal action towards the concerned media houses and journalists for defamation and putting me and my family through this mental agony and shock caused by all the continuous calls and messages since morning
— Sonia aggarwal (@soniya_agg) August 30, 2021