இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'கோடியில் ஒருவன்' திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் விஜய் மில்டன் எழுதி, இயக்கும் 'மழை பிடிக்காத மனிதன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு நிர்மல் குமார், விஜய் ஆண்டனி கூட்டணியில் வெளியான 'சலீம்' படத்தின் அடுத்த பாகமாக தயாராகி வருகிறது.
மழை பிடிக்காத மனிதன் படத்தின் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார்.இப்படத்தில் பிரபல கன்னட நடிகர் தனஞ்செயா, பிரித்வி, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிக்கின்றனர். சலீம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் பாடலுக்கு விஜய் ஆண்டனி இசையமைக்க அச்சு ராஜாமணி பின்னணி இசையை கவனிக்கிறார். இன்ஃபினிட்டிவ் பிலிம் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 'மழை பிடிக்காத மனிதன்' படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படத்தின் மூலம் முதல் முறையாக விஜய் ஆண்டனி சரத்குமார் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர்.