நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்து செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன.
இந்த நிலையில், கரோனா தொற்றுக்கு சிகிச்சை எடுத்துவந்த நடிகர் நடிகர் நிதிஷ் வீரா மரணமடைந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நிதிஷ் வீராவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ‘புதுப்பேட்டை’, ‘வெண்ணிலா கபடி குழு’, ‘அசுரன்’ உள்ளிட்ட பல படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவர், தமிழ்த் திரையுலகில் சிறந்த துணை நடிகராக அறியப்பட்டார்.
இதனையடுத்து, நிதிஷ் வீரா மறைவுக்கு திரைத்துறை பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.