அடுத்ததாகத்தான் முதல்முறை வெளிநாட்டுக்கு சுற்றுலா போகிறோம் எனும் எண்ணம் தோன்றியது. சில சமயங்களில் எந்த நாட்டுக்கு போகிறேன் என நெருங்கிய நண்பர்கள் கேட்டபோது குழப்பத்தில் வியட்நாம் என்பதற்கு பிலிப்பைன்ஸ் என சொல்லியதுண்டு.
வியட்நாம் நாட்டுக்கு விசா கிடைத்தபின் நவம்பர் மாத மழைக்காலத்தில் சென்னை விமான நிலையத்திலிருந்து பறக்கும் இயந்திர தட்டில் ஏறி அமர்ந்தபோது, வெளியே வேடிக்கை பார்க்கும் வகையில் செலவு செய்து சீட் வாங்கி தந்திருந்தார் அண்ணன். சேப்டி பெல்ட் அணியச்சொல்லி விமான பணிப் பெண்கள் சொன்னதை செய்தபடி வெளியே தென்றலாக வீசிய மழைச் சாரலை கண்ணாடி வழியே ரசித்துக்கொண்டு இருந்தபோது, பறக்கும் தட்டு எங்களை சுமந்து கொண்டு ரன்வேயில் ஓடத்துவங்கியது.
நான் ஒரு பைக் காதலன். எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பைக்கில் போகலாம் என்றால் கிளம்பிவிடுவேன். பைக் சவாரிக்கு நல்ல மனம் ஒத்த துணை இருந்தால் மட்டும் போதும், அப்படியொரு துணை ஒரு காலத்தில் இருந்தது. சென்னை, தஞ்சாவூர், திருச்சி, திருப்பதி, பெங்களூரு என பைக்கில் பயணம் செய்ததுண்டு. பத்திரிகையாளர்களுக்கான இலவச அரசு பேருந்து அட்டை இருந்தும் இப்போதும் பைக் சவாரி தான். அதற்கடுத்து நீண்ட தூர பயணத்துக்கு ரயிலை விரும்புகிறேன்.
ரன்வேயில் ஓடத்துவங்கிய விமானம் மேலேழந்து ஆயிரம், இரண்டாயிரம், மூன்றாயிரம் அடி என படிப்படியாக உயர்ந்ததை விமான பைலட் அறிவித்தபோது, வானத்துக்கு கீழே சிங்கார சென்னை மின்னிக்கொண்டு இருந்தது. வங்காளவிரிகுடா மீது இயந்திர தட்டு பறக்க துவங்கிய நேரத்தில் சுற்றுலா செல்வது குறித்து மகன்களுடன் ஒருநாள் இரவு பேசிக்கொண்டு இருந்தபோது ஏழு வயதாகும் பெரிய மகன் தமிழ்குமரன் சொன்னது நினைவுக்கு வந்தது.