Skip to main content

நிறம் மாறும் செங்கொடி தேசம்! – வியட்நாம் பயணத் தொடர் பகுதி – 4

Published on 09/01/2024 | Edited on 09/01/2024
vietnam-travel-series-part-4

“வியட்நாம் போறிங்களே அந்த நாட்டில் என்னங்க இருக்கு?” இது மனைவி கேட்ட கேள்வி. “உங்க வயசுக்கு ஜாலியா மலேசியா, தாய்லாந்து, பாலி தீவு போகாம அதென்ன வியட்நாம்? அங்கென்ன இருக்கு” என்கிற கேள்வியை கொஞ்சம் வெளிப்படையாகவே கேட்டனர் நெருங்கிய நண்பர்கள். 

இந்த கேள்வியை எதிர்கொண்டபோது எனக்கு வியட்நாம் குறித்து சொல்வதற்கு மூன்று பாய்ன்ட்களே இருந்தன. அது ஒரு பொதுவுடமை தேசம், கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் தேசம். உலக வல்லரசாகவும், உலகத்தின் நாட்டாமையாக தன்னை வெளிப்படுத்திவரும் அமெரிக்காவை போர்க் களத்தில் புறமுதுக்கிட்டு ஓடஓட விரட்டிய தேசம். அமெரிக்கா – வியட்நாம் இடையிலான போர்க்களத்தில் பயத்தில் அலறிக்கொண்டு ஓடிவரும் சிறுமியின் பிம்பம் மட்டுமே மனதில் இருந்தது. இவைகளை மட்டுமே சொல்ல முடிந்தது.

அதேசமயம், கம்யூனிஸ தேசத்தில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் என்ன இருந்துவிடப்போகிறது என்கிற எண்ணம் மனதுக்குள் இருந்தது. 14 நாட்கள் அங்கே இருக்கப்போகிறோம் அங்கே பார்க்க என்ன இருக்கிறது என இணையத்தில் வியட்நாம் குறித்து தேடத்துவங்கினேன்.

vietnam-travel-series-part-4

ஆசிய கண்டத்தில் தெற்காசியாவில் உள்ள நாடுகளில் ஒன்று வியட்நாம். சோசலிச குடியரசு நாடு. நாட்டின் தலைநகரம் ஹனாய். நாட்டின் மொத்த பரப்பளவு 3,31,689 சதுர கிலோமீட்டர். நாட்டின் மொத்த மக்கள் தொகை தோராயமாக 10 கோடியே 40 லட்சம் சொச்சம். நாட்டின் நிலவியல் அமைப்பு மண்ணுளி பாம்பு போல் இருக்கும். அதாவது நாட்டின் வடக்கு எல்லை பகுதியும், தெற்கு எல்லைப்பகுதியும் மண்ணுளி பாம்பின் தலையைப்போல் பெரியதாக இருக்கும், உடம்பு நீண்டதாக வால் போல் இருக்கும். வியட்நாமின் எல்லைகளாக நாட்டின் கிழக்கு பகுதியில் தென்சீனாக்கடல், வடமேற்கு பகுதியில் லாவேஸ், தென்மேற்கு பகுதியில் கம்போடியா, வடக்கு பகுதியில் சீனா போன்றவை அமைந்துள்ளன.

சீனப் பேரரசின் ஒருப்பகுதியாக சுமார் ஆயிரம் ஆண்டுகள் சீனர்களின் ஆட்சியில் இருந்துவந்தது இன்றைய வியட்நாம். 1802ஆம் ஆண்டு இந்நாட்டை ஆட்சி செய்த பேரரசர் ஜியா லோங்கினால் சூட்டப்பட்ட பெயரே வியட்நாம். நாட்டில் 54 இனக்குழுக்கள் உள்ளன. இதில் வியட்நாமிஸ் என்கிற பெயரில் அழைக்கப்படும் கிங்க் என்கிற சமூகம் 85 சதவிதம், தாய் 2 சதவிதம், மியோங் 1.5 சதவிதம், கிமீர் 1.4 சதவிதம், மோங் 1.4 சதவிதம், நுங் 1 சதவிதம். இத்தனை சமூக குழுமக்கள் இருந்தாலும் இவர்கள் பேசும் மொழி, நாட்டின் அதிகாரபூர்வ மொழி வியட்நாமி மொழி. அடுத்ததாக அலுவல் மொழியாக ஆங்கிலம் வைத்துள்ளனர். பிரெஞ்ச், சீன, கெமர் மொழிகளும் பேசப்படுகின்றன. 

vietnam-travel-series-part-4

வியட்நாமில் பௌத்த மதம் தான் முதன்மையானது. கிருஸ்த்துவர்கள் பெருமளவில் இருந்தாலும் அவர்களும் பௌத்த கொள்கைகளை கடைப்பிடிக்கின்றனர். இஸ்லாமியர்களும் மிக குறைவாக உள்ளனர். அனைவருக்குமான சமமான நாடாக வியட்நாம் இருக்கிறது. பௌத்தர்கள் அதிகமாக இருந்தாலும் அதைவிட அதிகமாக மதமற்றவர்கள் இந்நாட்டில் உள்ளனர்.

வியட்நாமில் உலக பாரம்பரிய சுற்றுலாத்தலங்கள் எட்டு இருக்கின்றன. அதில் 5 தலங்கள் அந்த நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இடங்களாக உள்ளன. ஹியூ, ஹாலாங் பே, ஹோய், என் மகன் சரணாலயம், Phong Nha-Ke Bang தேசிய பூங்கா, தாங் லாங்கின் இம்பீரியல் சிட்டாடல் – ஹனோய், ஹோ வம்சத்தின் கோட்டை, டிராங் ஆன் லேண்ட்ஸ்கேப் காம்ப்ளக்ஸ் போன்ற இடங்கள் இருப்பதை படித்து ஆச்சர்யமாகின. இந்த இடங்கள் குறித்து யூடியுப்பில் அந்த வீடியோக்களை பார்த்தபோது, இயற்கை பகுதிகள் மனதை கொள்ளை கொண்டன. இணையத்தில் பார்ப்பதற்கும், நேரில் பார்ப்பதற்கும் பெரும் வேறுபாடு இருக்குமே என மனதில் தோன்றியது.

vietnam-travel-series-part-4

என்னய்யா இப்படி நினைக்கற ‘வியட்நாம் தேசத் தந்தையே உலகம் சுற்றும் ஆசையில் இருந்தவர்தானே’ என எப்போதோ படித்தது மூளைக்குள் மின்னலடித்தது. அவர் கட்டமைத்த தேசத்தில் சுற்றுலா தலங்கள் இருக்காதா என்கிற எண்ணமும் வந்தது. 

வியட்நாம் தேசத்தில் முதல்நாள் பயணமே அதிரிபுதிரியாய் தொடங்கியது. இரவு விமான பயணம் என்பதால் காலையில் தாமதமாகத்தான் எழுந்தோம். 10 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு சாப்பிடலாம் என ஹோட்டல் வரவேற்பறை மேலாளரிடம் கேட்டபோது, காலையில் மட்டும் தான் ஹோட்டலில் உணவு, மதியம், இரவு கிடையாது என்றார். அவரே விசிட்டிங் கார்டு தந்து இந்தியன் ரெஸ்டாரென்ட் இருக்கு பாருங்க; போங்க என்றார்.

vietnam-travel-series-part-4

ஹோட்டலில் இருந்து வெளியே வந்தபோது பகலில் முதல் முறையாக ஹனாய் நகரத்தை பார்த்தோம். நகரத்தின் முக்கிய பகுதி. சாலையின் இருபுறமும் நடைபாதையில் நம்மவூர் கையேந்தி பவன்கள் போலவே குட்டி குட்டியாக நற்காலி போடப்பட்டு சாலையோரம் ஹோட்டல்கள் வியாபித்திருந்தன. இரண்டு குச்சிகளை வைத்து நூடூல்ஸ், பச்சை இலைகளை எடுத்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர். இத எப்படி சாப்பிடுவது என நினைத்தபடி விசிட்டிங் கார்டில் இருந்த பெயரை கூகுள் மேப்பில் தட்டியதும் அது வழிகாட்டியது. அது காட்டிய வழியிலேயே சென்று ஹோட்டலை அடைந்தோம்.

ஏதேதோ பெயர்கள் இருந்தன. மூன்று ஆனியன் பராத்தா ஆர்டர் செய்தபோது வந்தவை நம்மவூர் போலி போல் இருந்தது. நம்மவூர் போலியில் இனிப்பு வைத்திருப்பார்கள் இதில் ஆனியன் அரைத்து வைத்திருந்தார்கள் அவ்வளவே. பராத்தாவுக்கு தொட்டுக்க ரவுண்டாக கட் செய்த வெங்காயம், அரை எலும்பிச்சை பழம், இரண்டு பச்சை மிளகாய். எங்கவூர்ல விதவிதமா சாப்பிடறவங்கடா நாங்க, இங்க இதையா தருவிங்க என மனதுக்குள் சபித்தபடி சாப்பிட்டபோது நாக்கு குடிக்க தண்ணீர் கேட்டது. குடிக்க தண்ணீர் கூட வைக்கவில்லை என்பது அப்போதுதான் தெரிந்தது. தண்ணீர் கேட்டபோது அதுக்கு தனி ரேட் என்றார் சப்ளையர். சாப்பிட்டு முடித்தபின் பில் வந்தது, வாங்கி பார்த்தபோது மயக்கமே வந்துவிட்டது.

பயணம் தொடரும்...

நிறம் மாறும் செங்கொடி தேசம் – வியட்நாம் பயணத் தொடர் பகுதி – 3

Next Story

நிறம் மாறும் செங்கொடி தேசம்! பகுதி - 13

Published on 05/03/2024 | Edited on 06/03/2024
vietnam travel series part 13

கடிகாரத்தில் நேரம் 5 மணியை காட்டியது. 5 மணிக்கெல்லாம் இருட்டிவிட்டதே என நினைத்தால் காலநிலை அப்படி. 4 மணிக்கெல்லாம் சூரியன் மறைந்து இருள் கவ்வத் தொடங்கிவிடுகிறது. வியட்நாமில் 5 மணி என்றால் இந்தியாவில் மாலை 3.30 மணி.

நம்மை முதல் நாள் ஹோட்டலில் இறக்கிவிட்டபின் இரவு உணவுக்காக தலைநகர் ஹனாய் வீதிகளில் வலம் வந்தோம். அங்கு நாம் கண்டது, நகரத்தின் பல பகுதிகளில் பல்வேறு விதமான கடைகள், ஷாப்பிங் மால்கள் எல்லாம் 7 மணிக்கெல்லாம் மூடப்பட்டு இருந்தது. சுற்றுலாப்பயணிகள் அதிகம் புழங்கும் பகுதிகளில் மட்டும் கடைகள், தங்கும் விடுதிகள், சாலையோர உணவகங்கள் இரவு 9 மணி அதிகபட்சம் 10 மணி வரை இயங்குகின்றன. இதிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய உணவு கடைகள் மட்டுமே இரவு 11 மணி வரை இயங்குகின்றன.  

இந்தியாவில் விதவிதமாக சாப்பிட்டு நாக்கு நளபாகத்துக்கு அடிமையானவர்கள் வியட்நாம் உணவை சாப்பிட்டால் முகம் சுருங்கிவிடும். வியட்நாமின் பிரதான உணவு ’போ’ என சொல்லப்படும் சூப். சுடச்சுட தருகிறார்கள். அதில் சைவம் என்றால் நூடூல்ஸ், நறுக்கப்பட்ட வெங்காயதண்டு, வேகவெக்கப்பட்ட முட்டைக்கோஸ் இலை, ஏதாவது ஒரு கீரையை போட்டு தருகிறார்கள். அசைவம் என்றால் நூடூல்ஸ்சுடன், எலும்பு இல்லாத வேகவைக்கப்பட்ட சிக்கன் துண்டுகளை பஞ்சுபோல் பிச்சிப்போட்டு தருகிறார்கள். பீப், பன்றிக்கறி வேண்டும் என்றாலும் கலந்து தருகிறார்கள். அவர்களின் உணவு எதிலும் உப்பு கிடையாது, காரம்  கிடையாது, பெப்பர் கூட கிடையாது. சில ஹோட்டல்களில் மட்டும் பெப்பர், உப்பு தந்தார்கள். வியட்நாமிய மக்கள் பெரும்பாலும் உணவில் உப்பு, காரம் சேர்த்துக்கொள்வதில்லை. உணவில் மஞ்சள் தூள் மட்டும் போட்டு வேகவைத்த உணவை தருகிறார்கள். உணவில் காரம் வேண்டும் என்றால் பொடிசாக நறுக்கிய பச்சை மிளகாய் 4 அல்லது 5 துண்டு தருகிறார்கள் அல்லது மிளகாய்சாஸ்  தருகிறார்கள்.

காலை, மதியம், இரவு மூன்று வேளையும் கட்டாயம் வியட்நாமியர்கள் போ உணவை சாப்பிடுகிறார்கள். அதற்கு தொட்டுக்கொள்ள பொரித்த நத்தை, வேகவைக்கப்பட்ட மஸ்ரூம், மீன் துண்டுகளை வாங்கிக்கொள்ளலாம். அவர்கள் தரும் உணவை அந்த இரண்டு குச்சிகளில் எடுத்து சாப்பிடுவதுதான் எங்களுக்கு சிரமமானதாக இருந்தது. அவர்களும், மேற்கத்திய சுற்றுலாப்பயணிகள் அசால்டாக அதனை பயன்படுத்துகிறார்கள். கைக்கும் வாய்க்கும் ஒரு தொடர்பு  இருக்கணும்ங்க, உணவை கைகளால் பிசைந்து அதை எடுத்து நாம் வாயில் வைத்து  சாப்பிடும்போதுதான் உணவு மேல் மரியாதை வரும், அது உடம்பில் ஒட்டும் என வாட்ஸ்அப் வாத்தியார்களின் மெசேஜ் எப்போதே படித்தது நினைவுக்கு வந்ததால் அவுங்க சொல்றது நியாயம்தானே என சமாதானம் செய்துக்கொண்டு நம்மவூர் ஸ்டைல்க்கே மாறிவிட்டேன்.  

அசைவத்தில் சிக்கன், கடல் உணவுகள், பீப், பன்றிக்கறி பிரதானமாக உள்ளது. மட்டன் எனச்சொல்கிறார்கள் அது ஆட்டுக்கறி இல்லை. பன்றிக்கறி. சாப்பிட்டு பழக்கம் இல்லாததால் தினமும் சிக்கன், கடல் உணவையே சாப்பிட்டுக்கொண்டு இருந்தோம். அதிலும் எண்ணெய்யில் பொறித்த குட்டி ஆக்டோபஸ் அவ்வளவு அற்புதமாக இருந்தது.

ஹோட்டல்களில் மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் என்கிற பெயரில் மரவள்ளி கிழங்கில் செய்யப்பட்ட வடை, வேகவைத்து வறுக்கப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ், வெங்காய போண்டா அற்புதமாக செய்து தந்தனர். உப்பு இல்லாத பண்டம் குப்பைக்கு என்பது நம்மவூர் பழமொழி. அங்கே உப்புயில்லாத பண்டம் வயிற்றுக்கு என்கிறார்கள். உப்புதான் இல்லை. ஆனால் அவ்வளவு அற்புதமாக இருந்தது.

வியட்நாம் உணவு பழிவாங்கிவிடுமோ என நினைத்திருந்தோம். முதல் இரண்டு நாள் வியட்நாம் உணவுகளை ஏற்றுக்கொள்ள நாக்கு அடம்பிடித்தது. அதன்பின் அதன் சுவைக்கு பழக்கமாகி அங்கிருந்த 14 நாட்களும் உடம்பை எதுவும் செய்யவில்லை.

வெள்ளை சோறு வியட்நாமில் எல்லா ஹோட்டல்களிலும் தருகிறார்கள். நம்மவூரில் சாப்பாடு என்றால் அதனோடு சாம்பார், காரக்குழம்பு, மோர்க்குழம்பு, ரசம், மோர், பொறியல், கூட்டு என வகைவகையாக தருவார்கள். அங்கே அதெல்லாம் கிடையாது, அரைவேக்காட்டில் வேகவைக்கப்பட்ட கத்தரிக்காய், வெங்காயம், புதினா வைத்து அதன்மேல் எண்ணெய்யில் பொறிக்கப்ட்ட சிறியதாக கட் செய்யப்பட்ட வெங்காய தாள்களை தூவி சாஸ் ஊத்தி தனியாக ஒரு பிளேட்டில் தந்தார்கள். சாதத்தோடு இதனைத்தான் கலந்து சாப்பிடவேண்டும். தொட்டுக்க மரவள்ளிக்கிழங்கு வடை தருகிறார்கள்.

வெள்ளை சாதமே சர்க்கரை பொங்கல் போல் லேசாக தித்திப்பாக இருந்தது.  காலை, இரவு நேரத்தில் ப்ரைட்ரைஸ் கண்டிப்பாக இருக்கிறது. சிக்கன் ரைஸ், பீப் ரைஸ், வெஜிடபிள் ப்ரைட்ரைஸ் தருகிறார்கள். முட்டை அங்கே வெஜ் கேட்டகரியில் வைத்துள்ளார்கள். ஒரு ஆம்லேட் என்றால் இரண்டு முட்டை ஊத்தி செய்கிறார்கள்.

உலகளவில் சாலையோர உணவகங்களில் புகழ்பெற்றது வியட்நாம். வியட்நாம் நாட்டில் தலைநகரம் ஹனாய், ஹோசிமின், அலாங் பே போன்ற எந்த நகரமாக இருந்தாலும், சிற்றூராக இருந்தாலும் நடந்துபோகும்போது தடுக்கி விழுந்தால் சாலையோர உணவகங்கள் மேல்தான் விழவேண்டும். அந்தளவுக்கு சாலையோரங்களில் உணவகங்கள் உள்ளன. 80 சதவித சாலையோர உணவகங்கள் அசைவம். 20 சதவிதம் அளவுக்கே சைவ உணவகங்கள். 

வியட்நாம் மக்கள் பெரும்பாலும் இந்த சாலையோர உணவகங்களிலேயே உணவு சாப்பிடுகின்றனர். வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் ஆர்வமாக இங்கே சாப்பிடுகின்றனர். அந்தளவுக்கு  சாலையோர உணவகங்கள் தூய்மையாக இருந்தன. சாலையோர ஹோட்டல்களில் குறைந்த விலை, தரமான உணவாக இருக்கிறது. பெரிய ஹோட்டல்களில்  அதிகவிலை, அதே தரத்திலான உணவு கிடைக்கிறது.

ஆயிரக்கணக்கான சிறிய, பெரிய உணவகங்கள் இருந்தாலும் உணவு பொருட்களின் விலை நம்மவூரைவிட அதிகமாகவே இருக்கிறது. சாலையோர உணவு விடுதியாக இருந்தாலும், ஓரளவு பெரிய உணவு விடுதியாக இருந்தாலும் விலை கிட்டதட்ட  ஒரே விலையாகத்தான் இருந்தது. கொஞ்சம் தான் வித்தியாசப்படுகிறது.

நம்மவூர் சாப்பாட்டத்தை தான் சாப்பிடனும் என விரும்பி இந்திய ரெஸ்டாரெண்ட்டுக்குள் சென்றால் அங்கே கிடைப்பது நார்த் இந்தியா உணவுகள் தான். தென்னிந்திய உணவுகள் 99 சதவிதம் நாட்டின் எந்த பகுதியிலும் கிடைப்பதில்லை. 

இங்குள்ள ஹோட்டல்களில் உள்ள ஒரே ஒற்றுமை குடிக்க தண்ணீர் வைப்பதில்லை. 300 மில்லி லிட்டர் குடிதண்ணீர் பாட்டிலின் விலை நம்மவூர் மதிப்புக்கு 80 ரூபாய் வருகிறது. கம்பெனிக்கு தகுந்தார்போல் விலையும் மாறுகிறது. சாப்பிடும்போது விக்கல் எடுத்தால் என்ன செய்வது? அதற்கு இதை குடிங்க என நம் கையில் திணிப்பதை பார்த்து அதிர்ச்சியாக இருந்தது.

பயணங்கள் தொடரும்…………..  

Next Story

நிறம் மாறும் செங்கொடி தேசம்! பகுதி – 12

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
vietnam-travel-series-part-12

1930 அக்டோபர் 20 ஆம் தேதி வியட்நாம் பெண்கள் சங்கம் தொடங்கப்பட்டது. பின்னர் விடுதலைப் பெண்கள் சங்கம், ஏகாதிபத்திய எதிர்ப்பு பெண்கள் சங்கம், ஜனநாயகப் பெண்கள் சங்கம் என பெயர்களை மாற்றிக்கொண்டு களத்தில் இயங்கி வந்தன. 1931 முதல் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்ட 1945 வரை வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சிக்காக மக்களிடம் ஆதரவை திரட்டுவதில் தீவிர பங்காற்றி வந்தது. பிரெஞ்ச் ஆதிக்கத்தை எதிர்த்து போராட்டங்கள் நடத்தின. அதோடு இந்தோசீனா போரில் இச்சங்க பெண்கள் கலந்துகொண்டனர். துப்பாக்கிப் பிடித்து களத்தில் சண்டையிட்டனர். அதில் முக்கியமானவர் நுகுய்ன் தை டிங் என்கிற பெண்மணி. ஹேசிமின் தலைமையிலான தேசிய விடுதலை முன்னணி அமைப்பின் முக்கிய பெண் தலைவராக இருந்தார். இந்த பெண் ஆளுமைகள் மட்டுமல்லாமல் அவர்களின் போராட்டம், வீரம் குறித்து அறிந்துகொள்ள இந்த சிறைச்சாலையில் மட்டுமல்ல இதன் அருகிலேயே வியட்நாம் பெண்கள் அருங்காட்சியகத்தில் அதன் குறிப்புகள் வைக்கப்பட்டுள்ளது.

1985 ஆம் ஆண்டு வியட்நாம் பெண்கள் சங்கம் தொடங்கப்பட்டது. இதன் தலைவரான நுகுய்ன் தை டிங் என்பவரால் அது தொடங்கப்பட்டது. இவர் இரண்டாம் இந்தோசீனா போரின்போது தேசிய விடுதலை முன்னணியில் முக்கிய பெண் தலைவராக இருந்தார். அவரின் வேண்டுகோளின்படியே பெண்கள் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. ஹனாய் நகரத்தில் அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டு 1987 ஜனவரி 10ஆம் தேதி வியட்நாம் சோசலிஸ்ட் குடியரசின் அரசாங்கத்தின் அறிவுறுத்தலின்படி அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. 1995 அக்டோபர் 20 ஆம் தேதி நான்கு மாடி கட்டிடமாக திறக்கப்பட்டது. இந்த கட்டிடத்திற்குள் குடும்பத்தில் பெண்கள், வரலாற்றில் பெண்கள், பெண்கள் ஃபேஷன் என மூன்று தலைப்பில் பிரித்து வைக்கப்பட்டு, நாட்டில் உள்ள 54 இனங்களின் பெண்களின் கலாச்சாரம், உணவு, உடை, கலாச்சாரம், விடுதலை போராட்டம், இந்தோசீனா போர், இரண்டாம் இந்தோசீனா போரில் பெண்களின் பங்கை பறைச்சாற்றும் ஆவணங்களாக 40 ஆயிரம் பொருட்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. 

வியட்நாமில் உள்ள 64 மாகாணங்கள் மற்றும் நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பாலினம் மற்றும் பெண்களின் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு பெண்களிடம் குறைவாக உள்ளது. கிராமப்புற பெண்களிடம் விழிப்புணர்வே இல்லை. தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் பெண்கள் பொதுவாக அரசியல் கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை. பெண்களுக்கு ஓய்வு மற்றும் சமூக நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு குறைந்த நேரமே உள்ளது. அவர்களின் பெரும்பாலான நேரங்கள் வீட்டு வேலைகள் செய்யவும், வயல்களில் வேலை செய்யவும், கால்நடைகளை வளர்த்து பொருளீட்டவே நேரம் சரியாக இருக்கின்றன என்றுள்ளார்கள். இதனால் எல்லா மட்டத்திலும் பெண்களின் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் பாலின சமத்துவத்தை நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் அதிகளவு தடை செய்துள்ளன.

தற்போது நாடு முழுவதும் 10,472 உள்ளூர் பெண்கள் சங்கங்களைச் சேர்ந்த 13 மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்கள் வியட்நாம் பெண்கள் சங்கத்தில் உள்ளனர் என்கின்றனர். அருங்காட்சியக நிர்வாகிகள் நாடு முழுவதும் பெண்களிடம் நடத்திய ஆய்வில் நாடு விடுதலை பெற்றது, ஆனால் இன்னமும் ஆணாதிக்க சமுதாயத்திடம் இருந்து பெண்கள் விடுதலை பெறவில்லை என்கிறது.  

சுதந்திரத்துக்காக, உரிமைக்காக ஒருக்காலத்தில் பெரும் பேரரசுகளை எதிர்த்து, துப்பாக்கி குண்டுகளுக்கே பயப்படாத வியட்நாம் பெண்கள் இப்போது மக்களுக்காக குரல் கொடுத்துவிட்டு சிறையில் கொடுமைகளை அனுபவித்து வரும் சக பெண்களுக்கு குரல் கொடுக்ககூட தைரியமுற்று இருப்பதை காண முடிந்தது. 

பயணம் தொடரும்...

நிறம் மாறும் செங்கொடி தேசம்! பகுதி - 11