Skip to main content

நிறம் மாறும் செங்கொடி தேசம். – வியட்நாம் பயணத் தொடர் பகுதி – 6

Published on 17/01/2024 | Edited on 17/01/2024
Vietnam-travel-series-part-6

எழுநூறு ஆண்டுகாலம் வியட்நாம் தலைநகர் ஹனாய்யில் இயங்கிவந்த ஒரு பல்கலைக்கழகம் பிரெஞ்ச் ஆட்சிக் காலத்தில் நினைவுச் சின்னமாக மாற்றப்பட்டது என கடந்த பகுதியில் சொல்லியிருந்தேன் அல்லவா.. இன்னும் அதனைப் பற்றி பார்ப்போம் வாங்க.

5.80 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட இந்த பல்கலைக் கழகத்துக்குள் வருவதற்கு மூன்று வழிகள் உள்ளன. அதில் பிரதான வாயில் வழியாக நுழையும்போது வழியில் வெண்கலத்தால் செய்யப்பட்ட பிரமாண்ட மணி ஒன்று உள்ளது. இந்த மணி முக்கிய தகவல்களை மன்னருக்கு அறிவிக்க வைக்கப்பட்டுள்ளது. இந்த மணியை துறவிகள் மட்டுமே அடித்து தகவல்களை வெளிப்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.

Vietnam-travel-series-part-6

நம்மவூரில் துளசி மாடம் என நாம் அழைப்பது இங்கும் உள்ளது. கற்பூரம், விளக்கு ஏற்றும் வழக்கம் இல்லை என்பதால் இங்கு ஊதுவத்தி ஏற்றி வணங்குகின்றனர். வியட்நாமின் நான்கு புனித சின்னங்கள் ட்ராகன், ஃபீனிக்ஸ், ஆமை, யூனிகார்ன் போன்றவையாகும். இதில், ட்ராகன், ஃபீனிக்ஸ் பறவையும் பலயிடங்களில் செதுக்கியும், வரைந்தும் வைக்கப்பட்டுள்ளன. 

வீரத்தை அடையாளப்படுத்தும் டிராகன் அரசரின் சின்னமாகவும், அழகியலையும், போராடும், உயிர் பெறும் தன்மையை கொண்ட ஃபினிக்ஸ் பறவை ராணியின் சின்னமாகவும், ஆமை நீண்ட ஆண்டுக்காலம் உயிர் வாழக்கூடியது மற்றும் நீர்வழி ஞானம் உள்ளது என்பதாலும் மற்றும் யூனிகார்ன் உருவம் இந்த இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு மக்கள் இப்போதும் மரியாதை தருகின்றனர்.

Vietnam-travel-series-part-6

இப்பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் போர்களால் சிதலமடைந்தது போக மீதி 82 கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அதனை பாதுகாப்பாக வைத்துள்ளார்கள். அதில் அரசர்களின் வீரம், புகழ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, பல்கலைக் கழகத்தில் 1442 முதல் 1779 வரை நடைபெற்ற முப்பெரு தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 1307 நபர்களின் பெயர் மற்றும் அவர்களின் ஊர் போன்றவை அதில் செதுக்கிவைக்கப்பட்டுள்ளன. லீ வம்சத்தால் இந்த தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இங்கு கல்வி என்பது மூன்று ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள் வரை கற்பிக்கப்பட்டுள்ளது. வியட்நாமின் கலாச்சாரம், கல்வி, வரலாறு, சமூகம் குறித்து தெரிந்துக்கொள்ள இன்றளவும் வரலாற்று ஆய்வாளர்களுக்கு இங்குள்ள குறிப்புகள் ஆவணமாக உள்ளது.

இப்படியான வியட்நாம் கல்வி முறை இன்று எப்படி இருக்கிறது? 

வியட்நாம் மக்கள் பண்டைய காலம் முதல் இப்போதுவரை கல்விக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். நாட்டில் 95 சதவித மக்கள் படித்தவர்கள். கல்வியை பள்ளி முதல் கல்லூரி வரை பல அடுக்குகளாக பிரித்து வைத்துள்ளனர். அதன்படி மழைலையர் கல்வி என்பது 3 வயதில் தொடங்குகிறது. 1 முதல் 5வது வரையிலான தொடக்ககல்வி 11 வயதில் முடிகிறது. நடுநிலைப்பள்ளி என்பது 6 முதல் 9வது வரையிலும், மேல்நிலைப்பள்ளி என்பது 10 முதல் 12 வது வரை வைக்கப்பட்டுள்ளன. அதன்பின் கல்லூரியில் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி படிப்பு என வைத்துள்ளனர். மேல்நிலைப்பள்ளி வரை கல்வி அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்படுகிறது. அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், அரசு தனியார் இணைந்து நடத்தும் பள்ளிகள், அமைப்புகள் நடத்தும் பள்ளிகள் என உள்ளன. கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகள் கூட கட்டிடங்களாக அழகிய வடிவில் இருந்ததை பார்க்க முடிந்தது. தொடக்ககல்வி கட்டாயப்பட்டியலில் உள்ளது.

Vietnam-travel-series-part-6

‘வியட்சாம் தேசிய பல்கலைக்கழகம்’ ஹனாய், ஹோசிமின் என இரண்டு நகரங்களில் உள்ளன. இதன் கீழே கல்லூரிகள் வருகின்றன. சுமார் 50க்கும் அதிகமான பல்கலைகழகங்கள் உள்ளன. மருத்துவம், பொறியியல், கட்டிடவியல், சட்டம், ராணுவம், காவல்துறை, விவசாயம், பொருளாதாரம், கலை, இலக்கியம், கடலியல், துணித்துறை, போக்குவரத்து என தனித்தனியாக பல்கலைக் கழகங்கள் உள்ளன. நாட்டில் 237 பல்கலைக்கழகங்கள் உள்ளனவாம். அதோடு ஆஸ்த்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து நாட்டு பல்கலைக் கழகங்கள் 6 வியட்நாமில் கல்வி கற்பித்து வருகின்றன.

இன்று பண்டைய கல்வி முறை வரலாற்று சுவடாக உள்ள இந்த வளாகத்தை சுற்றி வந்தபோது செல்போனும் கையுமாக பலரும் சுற்றிக்கொண்டு இருந்தனர். உற்று நோக்கியபோது யூடியூபர்கள் என்பது தெரிந்தது. அழகிய இரண்டு யுவதிகளில் ஒருவர் வீடியோ எடுக்க மற்றொரு யுவதி பல்கலைக் கழகத்தின் வரலாற்றை விவரித்துக்கொண்டு இருந்தார். 

பயணம் தொடரும்...

நிறம் மாறும் செங்கொடி தேசம் – வியட்நாம் பயணத் தொடர் பகுதி – 5 

Next Story

நிறம் மாறும் செங்கொடி தேசம்! பகுதி - 13

Published on 05/03/2024 | Edited on 06/03/2024
vietnam travel series part 13

கடிகாரத்தில் நேரம் 5 மணியை காட்டியது. 5 மணிக்கெல்லாம் இருட்டிவிட்டதே என நினைத்தால் காலநிலை அப்படி. 4 மணிக்கெல்லாம் சூரியன் மறைந்து இருள் கவ்வத் தொடங்கிவிடுகிறது. வியட்நாமில் 5 மணி என்றால் இந்தியாவில் மாலை 3.30 மணி.

நம்மை முதல் நாள் ஹோட்டலில் இறக்கிவிட்டபின் இரவு உணவுக்காக தலைநகர் ஹனாய் வீதிகளில் வலம் வந்தோம். அங்கு நாம் கண்டது, நகரத்தின் பல பகுதிகளில் பல்வேறு விதமான கடைகள், ஷாப்பிங் மால்கள் எல்லாம் 7 மணிக்கெல்லாம் மூடப்பட்டு இருந்தது. சுற்றுலாப்பயணிகள் அதிகம் புழங்கும் பகுதிகளில் மட்டும் கடைகள், தங்கும் விடுதிகள், சாலையோர உணவகங்கள் இரவு 9 மணி அதிகபட்சம் 10 மணி வரை இயங்குகின்றன. இதிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய உணவு கடைகள் மட்டுமே இரவு 11 மணி வரை இயங்குகின்றன.  

இந்தியாவில் விதவிதமாக சாப்பிட்டு நாக்கு நளபாகத்துக்கு அடிமையானவர்கள் வியட்நாம் உணவை சாப்பிட்டால் முகம் சுருங்கிவிடும். வியட்நாமின் பிரதான உணவு ’போ’ என சொல்லப்படும் சூப். சுடச்சுட தருகிறார்கள். அதில் சைவம் என்றால் நூடூல்ஸ், நறுக்கப்பட்ட வெங்காயதண்டு, வேகவெக்கப்பட்ட முட்டைக்கோஸ் இலை, ஏதாவது ஒரு கீரையை போட்டு தருகிறார்கள். அசைவம் என்றால் நூடூல்ஸ்சுடன், எலும்பு இல்லாத வேகவைக்கப்பட்ட சிக்கன் துண்டுகளை பஞ்சுபோல் பிச்சிப்போட்டு தருகிறார்கள். பீப், பன்றிக்கறி வேண்டும் என்றாலும் கலந்து தருகிறார்கள். அவர்களின் உணவு எதிலும் உப்பு கிடையாது, காரம்  கிடையாது, பெப்பர் கூட கிடையாது. சில ஹோட்டல்களில் மட்டும் பெப்பர், உப்பு தந்தார்கள். வியட்நாமிய மக்கள் பெரும்பாலும் உணவில் உப்பு, காரம் சேர்த்துக்கொள்வதில்லை. உணவில் மஞ்சள் தூள் மட்டும் போட்டு வேகவைத்த உணவை தருகிறார்கள். உணவில் காரம் வேண்டும் என்றால் பொடிசாக நறுக்கிய பச்சை மிளகாய் 4 அல்லது 5 துண்டு தருகிறார்கள் அல்லது மிளகாய்சாஸ்  தருகிறார்கள்.

காலை, மதியம், இரவு மூன்று வேளையும் கட்டாயம் வியட்நாமியர்கள் போ உணவை சாப்பிடுகிறார்கள். அதற்கு தொட்டுக்கொள்ள பொரித்த நத்தை, வேகவைக்கப்பட்ட மஸ்ரூம், மீன் துண்டுகளை வாங்கிக்கொள்ளலாம். அவர்கள் தரும் உணவை அந்த இரண்டு குச்சிகளில் எடுத்து சாப்பிடுவதுதான் எங்களுக்கு சிரமமானதாக இருந்தது. அவர்களும், மேற்கத்திய சுற்றுலாப்பயணிகள் அசால்டாக அதனை பயன்படுத்துகிறார்கள். கைக்கும் வாய்க்கும் ஒரு தொடர்பு  இருக்கணும்ங்க, உணவை கைகளால் பிசைந்து அதை எடுத்து நாம் வாயில் வைத்து  சாப்பிடும்போதுதான் உணவு மேல் மரியாதை வரும், அது உடம்பில் ஒட்டும் என வாட்ஸ்அப் வாத்தியார்களின் மெசேஜ் எப்போதே படித்தது நினைவுக்கு வந்ததால் அவுங்க சொல்றது நியாயம்தானே என சமாதானம் செய்துக்கொண்டு நம்மவூர் ஸ்டைல்க்கே மாறிவிட்டேன்.  

அசைவத்தில் சிக்கன், கடல் உணவுகள், பீப், பன்றிக்கறி பிரதானமாக உள்ளது. மட்டன் எனச்சொல்கிறார்கள் அது ஆட்டுக்கறி இல்லை. பன்றிக்கறி. சாப்பிட்டு பழக்கம் இல்லாததால் தினமும் சிக்கன், கடல் உணவையே சாப்பிட்டுக்கொண்டு இருந்தோம். அதிலும் எண்ணெய்யில் பொறித்த குட்டி ஆக்டோபஸ் அவ்வளவு அற்புதமாக இருந்தது.

ஹோட்டல்களில் மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் என்கிற பெயரில் மரவள்ளி கிழங்கில் செய்யப்பட்ட வடை, வேகவைத்து வறுக்கப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ், வெங்காய போண்டா அற்புதமாக செய்து தந்தனர். உப்பு இல்லாத பண்டம் குப்பைக்கு என்பது நம்மவூர் பழமொழி. அங்கே உப்புயில்லாத பண்டம் வயிற்றுக்கு என்கிறார்கள். உப்புதான் இல்லை. ஆனால் அவ்வளவு அற்புதமாக இருந்தது.

வியட்நாம் உணவு பழிவாங்கிவிடுமோ என நினைத்திருந்தோம். முதல் இரண்டு நாள் வியட்நாம் உணவுகளை ஏற்றுக்கொள்ள நாக்கு அடம்பிடித்தது. அதன்பின் அதன் சுவைக்கு பழக்கமாகி அங்கிருந்த 14 நாட்களும் உடம்பை எதுவும் செய்யவில்லை.

வெள்ளை சோறு வியட்நாமில் எல்லா ஹோட்டல்களிலும் தருகிறார்கள். நம்மவூரில் சாப்பாடு என்றால் அதனோடு சாம்பார், காரக்குழம்பு, மோர்க்குழம்பு, ரசம், மோர், பொறியல், கூட்டு என வகைவகையாக தருவார்கள். அங்கே அதெல்லாம் கிடையாது, அரைவேக்காட்டில் வேகவைக்கப்பட்ட கத்தரிக்காய், வெங்காயம், புதினா வைத்து அதன்மேல் எண்ணெய்யில் பொறிக்கப்ட்ட சிறியதாக கட் செய்யப்பட்ட வெங்காய தாள்களை தூவி சாஸ் ஊத்தி தனியாக ஒரு பிளேட்டில் தந்தார்கள். சாதத்தோடு இதனைத்தான் கலந்து சாப்பிடவேண்டும். தொட்டுக்க மரவள்ளிக்கிழங்கு வடை தருகிறார்கள்.

வெள்ளை சாதமே சர்க்கரை பொங்கல் போல் லேசாக தித்திப்பாக இருந்தது.  காலை, இரவு நேரத்தில் ப்ரைட்ரைஸ் கண்டிப்பாக இருக்கிறது. சிக்கன் ரைஸ், பீப் ரைஸ், வெஜிடபிள் ப்ரைட்ரைஸ் தருகிறார்கள். முட்டை அங்கே வெஜ் கேட்டகரியில் வைத்துள்ளார்கள். ஒரு ஆம்லேட் என்றால் இரண்டு முட்டை ஊத்தி செய்கிறார்கள்.

உலகளவில் சாலையோர உணவகங்களில் புகழ்பெற்றது வியட்நாம். வியட்நாம் நாட்டில் தலைநகரம் ஹனாய், ஹோசிமின், அலாங் பே போன்ற எந்த நகரமாக இருந்தாலும், சிற்றூராக இருந்தாலும் நடந்துபோகும்போது தடுக்கி விழுந்தால் சாலையோர உணவகங்கள் மேல்தான் விழவேண்டும். அந்தளவுக்கு சாலையோரங்களில் உணவகங்கள் உள்ளன. 80 சதவித சாலையோர உணவகங்கள் அசைவம். 20 சதவிதம் அளவுக்கே சைவ உணவகங்கள். 

வியட்நாம் மக்கள் பெரும்பாலும் இந்த சாலையோர உணவகங்களிலேயே உணவு சாப்பிடுகின்றனர். வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் ஆர்வமாக இங்கே சாப்பிடுகின்றனர். அந்தளவுக்கு  சாலையோர உணவகங்கள் தூய்மையாக இருந்தன. சாலையோர ஹோட்டல்களில் குறைந்த விலை, தரமான உணவாக இருக்கிறது. பெரிய ஹோட்டல்களில்  அதிகவிலை, அதே தரத்திலான உணவு கிடைக்கிறது.

ஆயிரக்கணக்கான சிறிய, பெரிய உணவகங்கள் இருந்தாலும் உணவு பொருட்களின் விலை நம்மவூரைவிட அதிகமாகவே இருக்கிறது. சாலையோர உணவு விடுதியாக இருந்தாலும், ஓரளவு பெரிய உணவு விடுதியாக இருந்தாலும் விலை கிட்டதட்ட  ஒரே விலையாகத்தான் இருந்தது. கொஞ்சம் தான் வித்தியாசப்படுகிறது.

நம்மவூர் சாப்பாட்டத்தை தான் சாப்பிடனும் என விரும்பி இந்திய ரெஸ்டாரெண்ட்டுக்குள் சென்றால் அங்கே கிடைப்பது நார்த் இந்தியா உணவுகள் தான். தென்னிந்திய உணவுகள் 99 சதவிதம் நாட்டின் எந்த பகுதியிலும் கிடைப்பதில்லை. 

இங்குள்ள ஹோட்டல்களில் உள்ள ஒரே ஒற்றுமை குடிக்க தண்ணீர் வைப்பதில்லை. 300 மில்லி லிட்டர் குடிதண்ணீர் பாட்டிலின் விலை நம்மவூர் மதிப்புக்கு 80 ரூபாய் வருகிறது. கம்பெனிக்கு தகுந்தார்போல் விலையும் மாறுகிறது. சாப்பிடும்போது விக்கல் எடுத்தால் என்ன செய்வது? அதற்கு இதை குடிங்க என நம் கையில் திணிப்பதை பார்த்து அதிர்ச்சியாக இருந்தது.

பயணங்கள் தொடரும்…………..  

Next Story

நிறம் மாறும் செங்கொடி தேசம்! பகுதி – 12

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
vietnam-travel-series-part-12

1930 அக்டோபர் 20 ஆம் தேதி வியட்நாம் பெண்கள் சங்கம் தொடங்கப்பட்டது. பின்னர் விடுதலைப் பெண்கள் சங்கம், ஏகாதிபத்திய எதிர்ப்பு பெண்கள் சங்கம், ஜனநாயகப் பெண்கள் சங்கம் என பெயர்களை மாற்றிக்கொண்டு களத்தில் இயங்கி வந்தன. 1931 முதல் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்ட 1945 வரை வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சிக்காக மக்களிடம் ஆதரவை திரட்டுவதில் தீவிர பங்காற்றி வந்தது. பிரெஞ்ச் ஆதிக்கத்தை எதிர்த்து போராட்டங்கள் நடத்தின. அதோடு இந்தோசீனா போரில் இச்சங்க பெண்கள் கலந்துகொண்டனர். துப்பாக்கிப் பிடித்து களத்தில் சண்டையிட்டனர். அதில் முக்கியமானவர் நுகுய்ன் தை டிங் என்கிற பெண்மணி. ஹேசிமின் தலைமையிலான தேசிய விடுதலை முன்னணி அமைப்பின் முக்கிய பெண் தலைவராக இருந்தார். இந்த பெண் ஆளுமைகள் மட்டுமல்லாமல் அவர்களின் போராட்டம், வீரம் குறித்து அறிந்துகொள்ள இந்த சிறைச்சாலையில் மட்டுமல்ல இதன் அருகிலேயே வியட்நாம் பெண்கள் அருங்காட்சியகத்தில் அதன் குறிப்புகள் வைக்கப்பட்டுள்ளது.

1985 ஆம் ஆண்டு வியட்நாம் பெண்கள் சங்கம் தொடங்கப்பட்டது. இதன் தலைவரான நுகுய்ன் தை டிங் என்பவரால் அது தொடங்கப்பட்டது. இவர் இரண்டாம் இந்தோசீனா போரின்போது தேசிய விடுதலை முன்னணியில் முக்கிய பெண் தலைவராக இருந்தார். அவரின் வேண்டுகோளின்படியே பெண்கள் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. ஹனாய் நகரத்தில் அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டு 1987 ஜனவரி 10ஆம் தேதி வியட்நாம் சோசலிஸ்ட் குடியரசின் அரசாங்கத்தின் அறிவுறுத்தலின்படி அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. 1995 அக்டோபர் 20 ஆம் தேதி நான்கு மாடி கட்டிடமாக திறக்கப்பட்டது. இந்த கட்டிடத்திற்குள் குடும்பத்தில் பெண்கள், வரலாற்றில் பெண்கள், பெண்கள் ஃபேஷன் என மூன்று தலைப்பில் பிரித்து வைக்கப்பட்டு, நாட்டில் உள்ள 54 இனங்களின் பெண்களின் கலாச்சாரம், உணவு, உடை, கலாச்சாரம், விடுதலை போராட்டம், இந்தோசீனா போர், இரண்டாம் இந்தோசீனா போரில் பெண்களின் பங்கை பறைச்சாற்றும் ஆவணங்களாக 40 ஆயிரம் பொருட்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. 

வியட்நாமில் உள்ள 64 மாகாணங்கள் மற்றும் நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பாலினம் மற்றும் பெண்களின் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு பெண்களிடம் குறைவாக உள்ளது. கிராமப்புற பெண்களிடம் விழிப்புணர்வே இல்லை. தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் பெண்கள் பொதுவாக அரசியல் கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை. பெண்களுக்கு ஓய்வு மற்றும் சமூக நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு குறைந்த நேரமே உள்ளது. அவர்களின் பெரும்பாலான நேரங்கள் வீட்டு வேலைகள் செய்யவும், வயல்களில் வேலை செய்யவும், கால்நடைகளை வளர்த்து பொருளீட்டவே நேரம் சரியாக இருக்கின்றன என்றுள்ளார்கள். இதனால் எல்லா மட்டத்திலும் பெண்களின் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் பாலின சமத்துவத்தை நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் அதிகளவு தடை செய்துள்ளன.

தற்போது நாடு முழுவதும் 10,472 உள்ளூர் பெண்கள் சங்கங்களைச் சேர்ந்த 13 மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்கள் வியட்நாம் பெண்கள் சங்கத்தில் உள்ளனர் என்கின்றனர். அருங்காட்சியக நிர்வாகிகள் நாடு முழுவதும் பெண்களிடம் நடத்திய ஆய்வில் நாடு விடுதலை பெற்றது, ஆனால் இன்னமும் ஆணாதிக்க சமுதாயத்திடம் இருந்து பெண்கள் விடுதலை பெறவில்லை என்கிறது.  

சுதந்திரத்துக்காக, உரிமைக்காக ஒருக்காலத்தில் பெரும் பேரரசுகளை எதிர்த்து, துப்பாக்கி குண்டுகளுக்கே பயப்படாத வியட்நாம் பெண்கள் இப்போது மக்களுக்காக குரல் கொடுத்துவிட்டு சிறையில் கொடுமைகளை அனுபவித்து வரும் சக பெண்களுக்கு குரல் கொடுக்ககூட தைரியமுற்று இருப்பதை காண முடிந்தது. 

பயணம் தொடரும்...

நிறம் மாறும் செங்கொடி தேசம்! பகுதி - 11