Skip to main content

தோனியை ஏமாற்றிய சென்னை...திருப்தியளிக்குமா டெல்லி... சிஎஸ்கே vs டிசி

Published on 26/03/2019 | Edited on 26/03/2019

12வது ஐபிஎல் தொடர் கடந்த சனிக்கிழமை அன்று தொடங்கப்பட்டது. நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணி , ஆர்சிபியுடன் முதல் மேட்ச் ஆடியது. ஆடிய முதல் போட்டியிலேயே வெற்றியை சுவைத்துள்ளது சிஎஸ்கே. இந்த தொடரில் நான்கு போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இன்று சிஎஸ்கேவும், டெல்லி கேபிடல்ஸும் தங்களுடைய இரண்டாவது ஆட்டத்தை ஆட உள்ளனர். சிஎஸ்கே முதல் போட்டியில் வெற்றியடைந்ததை போலவே டெல்லி கேபிடல்ஸ் அணியும் ஆடிய முதல் மேட்சில், மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடித்தது.  இவ்விரு அணிகளும் ஏற்கனவே ஆடிய முதல் போட்டியில் வெற்றிவாகை சூடியுள்ளதால் இன்று நடைபெறும் போட்டிக்கு ரசிகர்கள் இடையே பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது. 
 

csk

 

 

இரவு 8:00 மணிக்கு டெல்லியிலுள்ள  ‘ஃபெரோஸ் கோட்லா’ மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது. டெல்லி கேபிடல்ஸ் அணி இந்த வருடம் தன்னுடைய சொந்த மைதானத்தில் முதல் மேட்ச் விளையாடுகிறது. சிஎஸ்கே அணியும் இந்த வருட ஐபிஎல் தொடரின் வலிமையான அணியாக இருக்கிறது. தன்னுடைய முதல் போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றிருந்தாலும், அந்த அணியின் பேட்டிங்கை ஆர்சிபி உடனான மேட்சில் சரியாக பார்க்க முடியவில்லை. இன்று நடைபெறும் மேட்சில் கண்டிப்பாக அதை பார்க்க முடியும். ஏனென்றால் டெல்லி மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது. அதைபோன்றே சுழற்பந்து வீச்சாளர்கள் பந்து வீசவும் ஏற்றது என்று சொல்லப்படுகிறது. ஆனாலும், சென்னை மைதானத்தை போல ஸ்பின்னர்கள் ஆட்சி செய்ய முடியாது. ஒரளவிற்கு ஸ்பின்னர்களுக்கு பந்து சுழலும் என்பதால் இவ்விரு அணிகளின் ஸ்பின்னர்களுக்கும் இன்று சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். இதனால் டெல்லி அணியில் ட்ரெண்ட் பவுல்ட்டை அணியிலிருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக நேப்பாலை சேர்ந்த சந்தீப் லமிச்சானேவை (லெக் ஸ்பின்னர்) அணியில் சேர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிஎஸ்கேவின் முந்தைய வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஹர்பஜன் சிங், அவருடைய சூழலில்தான் ஆர்சிபி வீழ்ந்தது. சென்னை பிட்சை போல டெல்லி பிட்சும் சுழற்பந்து வீச தகுந்தது என்பதால் ஹர்பஜனுக்கு இன்றும் வாய்ப்புகள் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 

இவ்விரு அணிகளும் கடந்த முறை டெல்லியில் சந்தித்துக்கொண்டபோது முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களுக்கு 5 விக்கெட்களை இழந்து 162 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய சென்னை அணி 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்களை இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. இதுவரை சென்னை, டெல்லி அணிகள் ஃபெரோஸ் கோட்லா மைதானதில் ஆறு முறை மோதியுள்ளது. அதில் 4 போட்டிகள் சிஎஸ்கேவும், 2 போட்டிகள் டெல்லி அணியும் வெற்றி பெற்றுள்ளது. மொத்தமாக இந்த  இரு அணிகளும் நேருக்கு நேராக 18 போட்டிகள் விளையாடியுள்ளன. அதில் 12 போட்டிகளில் சிஎஸ்கேவும், 6 போட்டிகளில் டெல்லியும் வெற்றி பெற்றுள்ளனர். 
 

சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி கடந்த மேட்சில் பேட்டிங் விளையாடவில்லை என்றாலும் இதற்கு முன்பு விளையாடிய சர்வதேச மேட்சுகளில் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளார். ஆகவே ஐபிஎல் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்பப்படுகிறது. யாராலும் கணிக்கவே முடியாத ஒரு பேட்ஸ்மேனாக இருப்பவர் டெல்லி அணியின் ரிஷப் பண்ட்தான். ஒரு மேட்சில் கண்ணாபின்னாவென்று அடித்தாலும், அடுத்த மேட்சில் உறுதியாக அவர் அடிப்பார் என்று சொல்ல முடியாது. அதனால் இன்றைய மேட்சில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதேபோல கிறிஸ் மோரிஸ் டெல்லி அணிக்கு திரும்புகிறாரா என்று எந்த அறிவிப்பும் இல்லை. முந்தைய மேட்சில் ஆடியவர்களே இன்று நடைபெறும் மேட்சில் ஆடுவார்கள் என்று எண்ணப்படுகிறது. 
 

dc

 

 

சென்னை மைதானத்தை ஸ்லோ ட்ராக்கா மாற்றியதற்கு தோனி கடுமையாக விமர்சித்தார். ‘ஐபிஎல் என்பதே பேட்டிங்கான போட்டி, அதனால் பிட்சுகளும் அவ்வாறு பேட்ஸ்மேன்களுக்கு ஏற்றார்போல இருந்திருக்க வேண்டும்’  என்றார். தோனி சொன்னதுபோன்ற ஆடுகளமாக டெல்லி ஆடுகளம் இருப்பதால் தோனிக்கு இது வரப் பிரசாதமாக இருக்குமா என்பதை இன்று இரவு தெரிந்துவிடும். டெல்லி அணி முழுக்க இளைஞர்கள் உள்ள அணியாக துடிப்பான ஒரு அணியாகவும் இருக்கிறது. சென்னை அணி மிகவும் அனுபவம் வாய்ந்த அணியாக உள்ளது. இதுவரை டெல்லி அணி நல்ல டீமாக இருந்தாலும், டீமில் நிலையான தன்மையில்லாமல் இருந்தது. ஆனால், மும்பையுடன் அவர்கள் விளையாடியதை பார்த்தபோது இளம் அணியில் அனுபவத்தை சேர்த்து விதைத்திருக்கிறார் டெல்லியின் புதிய கோச் ரிக்கி பாண்டிங் என்று தெரிகிறது. ரிக்கி மட்டுமின்றி கங்குலியும் மெண்டராக இருப்பதால் டெல்லி அணி மீது பலரின் கண்கள் உள்ளது.  ரிக்கி, கங்குலி ஆகியோர் வெளியே இருந்துதான் டெல்லி அணியை பார்த்துகொள்ள முடியும் ஆனால் சிஎஸ்கேவில் தோனி மைதானத்திற்குள் இருந்தே பார்த்துகொள்வதால் மேலும் சிஎஸ்கேவுக்கு கூடுதல் பலமாக இருக்கிறது. பேட்டிங்கு சாதகமாக இருக்கும் ஃபெரோஸ் கோட்லா மைதானத்தில் இன்று என்ன நடக்கப் போகிறது என்று பார்ப்போம்.

 

 

Next Story

தமன்னாவிற்கு சைபர் கிரைம் சம்மன்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
tamanna summoned by maharashtra cyber crime for ipl telecast issue

கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியது. அதன்படி அந்நிறுவனத்தின் செயலியான ஜியோ சினிமா செயலியில் இலவசமாக ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பி வந்தது. 2023 முதல் அடுத்த ஐந்தாண்டிற்கு ஐபில் தொடரின் டிஜிட்டல் உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஃபேர்பிளே என்கிற சூதாட்ட செயலியில் சட்டவிரோதமாக ஐபிஎல் போட்டிகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டதாக கூறி வியாகாம் நிறுவனம் மகாராஷ்ட்ரா சைபர் கிரைமில் புகார் அளித்தது. அந்த புகாரில், ஃபேர்பிளே செயலில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்பட்டதால் தங்கள் நிறுவனத்துக்கு ரூ.100 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக குறிப்பிட்டிருந்தது. இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஃபேர்பிளே செயலியின் ஊழியர் ஒருவரை கைது செய்தனர். மேலும் அச்செயலியை விளம்பரப்படுத்திய பிரபலங்களை விசாரணை செய்ய முடிவெடுத்தனர். அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரங்கள் பாட்ஷா, சஞ்சய் தத், ஜாக்குலின் பெர்னாண்டஸ், தமன்னா உள்ளிட்ட பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.  

கடந்த 23 ஆம் தேதி சஞ்சய் தத்துக்கு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். ஆனால், தான் இந்தியாவில் இல்லாத காரணத்தால் தன்னால் ஆஜராக முடியவில்லை என சஞ்சய் தத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது தமன்னாவிற்கு வருகிற 29ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 

Next Story

ரோஹித் சொன்னதைச் செய்த பண்ட்; கலக்கிய டெல்லி அணி!

Published on 25/04/2024 | Edited on 26/04/2024

 

gt vs dc pant delivered the rohit wish delhi capitals victory

ஐபிஎல் 2024இன் 40 ஆவது லீக் ஆட்டம் டெல்லி மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே நேற்று (ஏப்.24) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணிக்கு ஜேக் ஃப்ரேசரின் தொடக்க அதிரடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 23 ரன்களில் வெளியேறினார். புதுமையான முயற்சியாக அக்சர் 3ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கினார். அடுத்து பிரித்வி பவர்பிளேயிலே 11 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு வந்த சாய் ஹோப்பும், டெல்லி அணியின் ஹோப்பை போக்கும் வகையில் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். 44-3 என்று மோசமான நிலையில் இருந்த அணியை அக்சருடன் இணைந்து மீட்டார் கேப்டன் பண்ட். பரீட்சார்த்த முயற்சியைப் பயன்படுத்திக் கொண்ட அக்சர் சிறப்பாக விளையாடினார்.

பண்ட்டுக்கு சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்த அக்சர் அதிரடியாக 43 பந்துகளில் 5 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிக்சர்களில் கலக்கிய பண்ட் 8 சிக்சர்கள், 5 பவுண்டரிகளுடன் 43 பந்துகளில் 88 ரன்கள் குவித்தார். முத்தாய்ப்பாக மொஹித் சர்மாவின் கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்கள் உட்பட 4 சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி சேர்த்து அந்த ஓவரில் மட்டும் 30 ரன்கள் குவித்தார். அவருக்கு துணையாக வழக்கம் போல கலக்கிய ஸ்டப்ஸ் 7 பந்துகளில் 2 சிக்சர்கள், 3 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகள் மட்டும் இழந்து 224 ரன்கள் குவித்தது. சந்தீப் வாரியர் 15 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்த, மற்ற பவுலர்கள் சொதப்பினர். குறிப்பாக மொஹித் சர்மா 4 ஓவர்களில் 73 ரன்களைக் கொடுத்து ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிக ரன்கள் கொடுத்தவர் என்கிற மோசமான சாதனையைப் படைத்தார்.

gt vs dc pant delivered the rohit wish delhi capitals victory

பின்னர் 225 ரன்கள் என்கிற கடின இலக்கை துரத்திய குஜராத் அணிக்கு கேப்டன் கில் 6 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த தமிழ்நாட்டு வீரர் சாய் சுதர்சன் எப்போதும் போல பொறுப்பாக ஆடினார். 2ஆவது விக்கெட்டுகு சஹாவும், சாயும் சேர்ந்து 82 ரன்கள் எடுக்க சஹா 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த சில பந்துகளில் நன்றாக ஆடி அரை சதம் கடந்த சுதர்சனும் 65 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஒமர்சாய் 1, ஷாருக்கான் 8, டெவாட்டியா 4 என விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல சரிந்தது.

பின்னர் வந்த மில்லர் தன் அதிரடியை ஆரம்பித்தார். சிறப்பாக ஆடி அணியை வெற்றி பெற வைப்பார் மில்லர் என்று ரசிகர்கள் எதிரபார்த்த வேளையில், 23 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் ரஷித் 23, கிஷோர் 13 முயன்றும் குஜராத் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 220 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி த்ரில் வெற்றி பெற்றது. பண்ட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் டெல்லி அணி 8 புள்ளிகளுடன் 6ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

பண்ட்டின் இந்த அதிரடி பேட்டிங் ரோஹித்தின் கூற்றை நிரூபித்துள்ளது. இங்கிலாந்து வீரர் பென் டக்கெட், இங்கிலாந்தின் பேஸ்பால் ஆட்டத்தால் தான் ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடினார் என்று கூறியதற்கு பதிலளிக்கும் வகையில் ரோஹித், ரிஷப் பண்ட்டின் அதிரடியைப் பார்த்ததில்லையா என்று கூறியிருந்தார். அந்தக் கூற்றை நிரூபிக்கும் வகையில் பண்ட் நேற்றைய போட்டியில் ஆடியுள்ளார். இதன் மூலம் உலகக்கோப்பை டி20 அணிக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் போட்டியில் பண்ட் முன்னிலை வகிக்கிறார் என கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பெங்களூருவுக்கு மட்டும் மற்ற அணிகளின் வெற்றியைப் பொறுத்து பிளே ஆஃப் வாய்ப்பு உள்ளது. மற்ற அனைத்து அணிகளுக்கும் பிளே மீதமிருக்கும் போட்டிகளை வென்றால் பிளே ஆஃப் வாய்ப்பு இருப்பதால், ஐ.பி.எல் தொடர் மேலும் சுவாரசியமடைந்துள்ளது.