சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கென்று கூடைப்பந்து போட்டிக்கான கேம்ப் நடப்பதை அறிந்த லெட்சுமணன், தன்னந்தனியாக சென்னை மண்ணில் கால் வைத்திருக்கிறார். நன்றாக நடக்க முடிந்த நபர்களே சென்னையில் முகவரி தேடிப் போக திணறும்போது, தன்னந்தனியாக வீல்சேராடு தேடி அலைந்து கேம்ப் நடந்த இடத்தை அடைந்திருக்கிறார். கூடைப்பந்து என்றால் என்னவென்றே தெரியாத லெட்சுமணனை, மற்றவர்கள் விளையாடுவதை இரண்டு நாட்கள் பார்க்க சொல்லியிருக்கிறார் கோச் தாயுமான சுப்பிரமணியன். பின்பு மூன்றாவது நாளில் இருந்து களத்தில் இறங்கி விளையாட ஆரம்பித்திருக்கிறார் லெட்சுமணன். வெளிநாட்டை சேர்ந்த மற்றொரு கோச் ஜெஸ்பாலின் துணையோடு பயிற்சி பெற்று 60 பேர் பங்கேற்றதில் முதல் ரவுண்டிலேயே செலக்ட் ஆகி தூள் கிளப்பியிருக்கிறார். இதனால் தாய்லாந்து நாட்டில் நடந்த போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் அங்குள்ள விளையாட்டு வீரர்கள் தரமான வீல்சேர் வைத்து விளையாடி இருக்கிறார்கள். ஆனால் இவர்களோ தரமில்லாத வீல்சேரை வைத்து விளையாடி இருக்கிறார்கள். விளையாடும்போது வீல்சேரோடு கீழே விழும் நிலையில், வெளிநாட்டு வீர்ர்களோ எளிதில் எழுந்து விலையாடினர்.. ஆனால் நம் இந்திய வீரர்களோ கஷ்டப்பட்டு எழுந்து விளையாடியிருக்கிறார்கள். இதனால் தோல்விகளைத் தழுவி பல பாடங்களைக் கற்று இந்தியா வந்தனர். இப்போதும் இந்தியாவிற்குள் திறம்பட விளையாடி அசத்தி வருகிறார்கள்.
லெட்சுமணனின் திறமையைப் பார்த்த சத்தியபாமா பல்கலைக்கழகம், அங்கேயே இலவசமாக சீட் கொடுத்து கல்வி அளித்து கொண்டிருக்கிறார்கள்.லெட்சுமணனிடம் பேசினோம், “நான் வெறித்தனமான தல ரசிகர். நான் நல்லா இருக்கும்போது விளையாடவே போக மாட்டேன். இந்தப் பிரச்சனைக்கு பிறகுதான் விளையாட்டை முழுசா கத்துக்கிட்டு போட்டியில் கலந்துக்க ஆரம்பிச்சேன். வீட்டுல முதல் பையனா இருந்துட்டு குடும்பத்துக்கு ஏதும் பண்ண முடியாம இருக்குறதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு. என் இடத்துல இருந்து தம்பி ஆனையப்பன் படிச்சிட்டே வேலை பாத்துட்ருக்கான். எல்லாத்துக்கும் மேல நண்பன் மாயாண்டிதான் நான் விளையாடுறதுக்கு முக்கியமான காரணம். நான் விளையாடுற இடத்துக்கு எல்லாம் என்னைய சைக்கிள்ல வச்சி தள்ளிட்டு வருவான்.
நான் விளையாடுறதுக்காக அவன் வேலையையே விட்டுட்டு கூட வந்துருக்கான். மாயாண்டி இல்லனா, இன்னிக்கு நான் இல்ல. எங்களுக்கு பெரிய பிரச்சனை என்னனா, ரயில்ல உள்ல மாற்றுத்திறனாளி கோச்ல வந்து கையும், காலும் நல்லா இருக்குறவங்க மனசாட்சியே இல்லாம படுத்துருப்பாங்க. எவ்வளவு சொன்னாலும் காதுல கேக்காத மாதிரியே படுத்துருப்பாங்க. அப்புறம் எங்களுக்கேத்த பாத்ரூம் கிடையாது. இதைக் கண்காணிக்க வேண்டிய டி.டி.ஆரும் எங்க கோச்சுக்கு வர மாட்டாரு. எங்களால தன்னந்தனியா ரயில்ல இருந்து இறங்க முடியாது. இப்படிதான் ஒருமுறை ரயில்ல இருந்து இறக்கிவிட ஆள் இல்லாம, ஒருமுறை மதுரைல இறங்குறதுக்கு பதிலா விருதுநகர்ல போய் இறங்குனேன். நடு ராத்திரியில என்ன பண்றதுனே தெரியாம முழிச்சிட்ருந்தேன். இதெல்லாம் அரசு சரி பண்ணா நல்லா இருக்கும். இப்படி எத்தனை தடைகள் வந்தாலும் சரி, இந்தியாவிற்காக விளையாடுறதுதான் என்னோட இலட்சியம்” என்று தன்னம்பிக்கையோடு கூறுகிறார் லெட்சுமணன். இவர் சாதிப்பதற்கு தடையாக இருப்பது வீல்சேர் மட்டும்தான். வெளிநாட்டில் ஆர்டர் கொடுத்து வாங்க 1.5 லட்சம் பணம் இல்லாமல் தவிக்கும் இந்த விளையாட்டு வீரனுக்கு நாம் உதவிக் கரங்களை நீட்டினால் மட்டுமே இந்தியாவிற்காக விளையாட இவர் போன்ற எண்ணற்ற திறமையாளர்கள் உருவாகுவார்கள்.