அசோக வனத்தில் இருந்த சீதாப்பிராட்டி யாரை ஸ்ரீராம தூதனாக ஆஞ்சனேயர் சென்று சந்தித்தபோது, ஒரு வெற்றிலையை எடுத்து அனுமனின் தலை உச்சியில் வைத்து, ""நீ என்றும் சிரஞ்சீவியாக வாழ்வாயாக'' என்று சீதாப்பிராட்டியார் ஆசிர்வாதம் செய்தாராம். இதனால் உச்சிகுளிர்ந்து மகிழ்ந்தாராம் ஆஞ்சனேயர். சீதாப்பிராட்டியார் ஆசிர்வதித்த வெற்றிலையை மாலையாகத் தொடுத்து அவருக்கு சாற்றி வழிபாடு செய்தால், ஆஞ்சனேயர் உச்சிகுளிர்ந்து நமக்கு அருள்புரிவார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. எனவே வெற்றிலை மாலை சாற்றி அவரை வணங்கி அருள்பெறுவோம்.
வடைமாலை
ஊட்டச்சத்து மிகுந்த தானியங்களில் உளுந்தும் ஒன்று. ஸ்ரீராமபிரானோடு இணைந்து ஓயாமல் உழைத்துக் கொண்டிருந்த தனது மகன் அனுமன் உடல் என்றும் களைப்பு அடையாதிருக்கும் வகையில் தாயார் அஞ்சனாதேவி தினமும் பெரிய உளுந்துவடை செய்து தருவாராம். ஒரு வடை சாப்பிட்டால் அன்று முழுவதும் ஆஞ்சனேயர் உடல் களைப்பின்றி உற்சாகமாக இருப்பாராம். எனவே ஆஞ்சனேயருக்கு வடைமாலை சாற்றி வழிபட்டால் வாழ்வில் சோர்வின்றி இருக்கலாம் என்பது ஐதீகம்.
துளசிமாலை
துளசி இலை திருமாலுக்கு மிகவும் உகந்ததாகும். திருமால் எடுத்ததுதானே ஸ்ரீராமாவதாரம். எனவே ஸ்ரீராம பக்த அனுமனுக்கு துளசி இலையும் மிகவும் பிடித்த ஒன்றானது. துளசிமாலை சாற்றி அனுமனை வழிபட்டால் உடல் பிணிகள் அகன்று ஆரோக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.
பழமாலை
பெரும்பாலும் வானரங்களுக்கு பழங்கள் என்றால் பிடிக்கும். வானர ரூபமான ஆஞ்சனேயருக்கும் பழங்கள் மிகவும் பிடித்த ஒன்று. எனவே பழங்களால் மாலை செய்து அனுமனுக்கு சாற்றி வணங்கினாலும் அவரது திருவருளை எளிதாகப் பெறமுடியும்!