Skip to main content

சொத்துப் பிரச்சனையா?

Published on 28/02/2019 | Edited on 28/02/2019

சிலருக்குக் கிடைக்கவேண்டிய சொத்துகள் இறுதி நேரத்தில் கிடைக்காமல் போய்விடுகின்றன. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான துயரத்துக்கு ஆளாகின்றனர். இதற்கு ஜோதிடரீதியான காரணத்தையும், பரிகாரத்தையும் இங்கு காணலாம்.ஜாதகத்திலிருக்கும் 2-க்கு அதிபதியும், 4-க்கு அதிபதியும் ஒருவருடைய சொத்து பற்றிக் குறிப்பிடும். அவை ஜாதகத்தில் சரியாக இல்லையென்றால் கிடைக்க வேண்டிய சொத்து கிடைக்காமல் போய்விடும். முக்கியமாக 4-க்குரிய கிரகம் நீசமடைந்தால் அல்லது பலவீனமாக இருந்தால் அவருக்கு சேரவேண்டிய வாகனம், வீடு, நிலம், பூர்வீக சொத்து ஆகியவற்றில் பிரச்சினைகள் ஏற்படும்.

god image

2-ஆம் அதிபதி கெட்டுப்போனால், சுயமாக சம்பாதித்த சொத்தில் பிரச்சினைகள் உண்டாகும். 2-ல் நீச செவ்வாய் இருந்தாலோ, பார்த்தாலோ சொத்தில் வில்லங்கம் உண்டாகும்.ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் நீசமாக அல்லது பலவீனமாக அல்லது பாவ கிரகத்துடன் இருந்தால், அவருக்கு நகைகள், அலங்காரப் பொருட்கள் வந்து சேர்வதில் சிக்கல் உண்டாகும்.ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் 2-க்கு அதிபதியாகி பலவீனமாக இருந்தால் நோயின் காரணமாக சொத்தை இழக்கவேண்டிய சூழல் உண்டாகும். நெருக்கமான உறவினரே அவரை ஏமாற்றிவிடுவார். ஜாதகத்தில் 4-க்கு அதிபதி பலவீனமாக இருந்து, பாவ கிரகத்தால் பார்க்கப்பட்டால் அவருக்கு நல்ல வீடு அமையாது. அப்படியே வீடு அமைந்தாலும், அதில் தோஷமிருக்கும் அல்லது அவருடைய சொத்து கைநழுவிச் சென்றுவிடும். தசா காலங்கள் சரியில்லாமலிருந்தால், தற்போது இருக்கும் சொத்தையே இழக்கவேண்டியதிருக்கும். 4-க்கு அதிபதி 12-க்கு அதிபதியுடன் சேர்ந்து 12-ல் இருந்தால், அவருடைய பிறந்த ஊரிலுள்ள சொத்தில் பிரச்சினைகள் ஏற்படும். வெளியே சென்று சொத்து சம்பாதித்திருந்தாலும் சிக்கல்கள் உண்டாகும்.

ஒரு ஜாதகத்தில் 4-ல் சூரியன் இருந்து சனியால் பார்க்கப்பட்டால் ஜாதகர் தன் சொத்துகளை அனுபவிக்கமுடியாது. அவருடைய சொத்து அவருக்குக் கிடைக்காத வகையில் பிறர் ஏமாற்றுவார்கள். அதே ஜாதகத்தில் சுக்கிரன் ராகுவுடன் சேர்ந்தால், அதிலும் குறிப்பாக 3-ஆம் வீட்டில் சேர்ந்தால், சகோதரர்கள் சொத்துகளை அபகரித்துக் கொள்வார்கள். ஒரு ஜாதகத்தில் சந்திரன் 11-ல் உச்சமாக இருந்து, 12-ல் செவ்வாய், சனி இருந்தால், ஜாதகர் தன் பேராசை குணத்தால் ஏமாந்துவிடுவார். தனது சொத்து அவருக்குக் கிடைக்காது. 12-ல் சந்திரன், 4-ல் கேது, 7-ல் செவ்வாய் இருந்தால், பூர்வீக சொத்து கைக்கு வருவதில் சிக்கல் ஏற்படும்.
4-ல் சனி, 7-ல் செவ்வாய், 12-ல் ராகு இருந்தால், வரவேண்டிய குடும்பச் சொத்தில் பிரச்சினைகள் உண்டாகும். 8-ல் சுக்கிரன், ராகு, செவ்வாய் இருந்தால், தந்தைவழியில் வரவேண்டிய சொத்து கிடைக்காது. 4-க்கு அதிபதி நீசமடைந்து, 8-ல் பாவகிரகத்துடன் இருந்தால் அல்லது 8-ஆம் அதிபதியுடன் இருந்தால், அவருக்கு வரவேண்டிய சொத்து கிட்டாது.

thirupathi temple

பரிகாரங்கள்

செவ்வாய்க்கிழமைகளில் ஆஞ்சனேயரை நான்குமுறை சுற்றி வந்து வணங்கவேண்டும். செவ்வாயின் "ஓம் அங்க் அங்காரகாய நமஹ' என்ற மந்திரத்தை 108 முறை கூறவேண்டும்.

தினமும் அரசமரத்திற்கு நீரூற்றி,சுற்றிவர வேண்டும். சனிக்கிழமைகளில் அரசமரத்திற்கு தீபமேற்றி வைப்பது நல்லது.

தினமும் காலையில் சூரிய பகவானுக்கு நீர் வார்ப்பது சிறந்தது.

முன்னோர்களின் கடவுளை வழிபடவேண்டும்.

தன் லக்னாதிபதியின் ரத்தினத்தை அணியலாம். தேவையற்ற பொருட்களை வீட்டில் சேர்த்து வைக்கக்கூடாது. படுக்கையறையில் செருப்பை விடுவது நல்லதல்ல. படுக்கையை காலால் உதைப்பதும் தவறு.

ஞாயிற்றுக்கிழமை மாலை பைரவர் சந்நிதிக்குச் சென்று தீபமேற்றி வழிபடவேண்டும்.

மேற்கண்ட வழிமுறைகளை ஒருவர் கடைப்பிடித்து வந்தால், சொத்து விஷயங்களிலிலிருக்கும் தோஷங்களும் பிரச்சினைகளும் நீங்கும். வரவேண்டிய சொத்துகள் நிச்சயம் தேடிவரும்.

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம்; பக்தர்கள் உற்சாகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Meenakshi - Sundareswarar Chariot; Devotees excited

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரை திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

மேலும், மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வுக்காக மதுரை வந்தடைந்தார். கள்ளழகர். உடன் பாரம்பரியமாக கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.