Skip to main content

குபேரனுக்கு சிறப்பான பூஜை இங்கு தான் …

Published on 27/02/2019 | Edited on 27/02/2019

சிவபெருமான் ஜோதியாய்த் தோன்றி சிவலிங்கரூபமாய் கோவில் கொண்ட தலங்கள் ஜோதிர்லிங்கத் தலங்கள் எனப்படுகின்றன. மொத்தம் 64 ஜோதிர்லிங்கங்கள் உண்டென்பர். அவற்றுள் முக்கியமானவை பன்னிரண்டு. அவற்றிலொன்று தானே தோன்றிய ஓங்காரேஸ்வரர் ஜோதிர்லிங்கம்.யமுனையில் 15 நாள் நீராடிய பயன், கங்கையில் ஏழு நாள் நீராடிய பயன் நர்மதையைப் பார்த்தாலே கிடைக்கும் என்பர். அத்தகைய நர்மதையில் "ஓம்' போன்ற வடிவில் ஒரு தீவுப்பகுதி உள்ளது. இது மந்தாதா, சிவபுரி என்று அழைக்கப்படுகிறது. இங்கேதான் ஓங்காரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.மந்தாதா என்னும் மன்னன் நர்மதைக் கரையில் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் புரிந்தான்.அவனுக்குக் காட்சிகொடுத்த சிவன், அவன் கோரிக்கையையேற்று இங்கே எழுந்தருளினாராம். அந்த மன்னன் பெயரால் இப்பகுதி மந்தாதா எனப்படுகிறது.தேவி அகல்யாபாய் போல்கர் என்னும் சிவபக்தை, தினமும் களிமண்ணில் 18,000 சிவலிங்கங்கள் செய்து அதை நதியில் விடுவாராம். அவை மிதந்து செல்லுமாம். அத்தகைய சக்தி வாய்ந்த தலமாக இது விளங்குகிறது.

grishneswar temple

நர்மதைக் கரையில் மல்லேஸ்வரர் ஆலயம் உள்ளது. அங்கிருந்து படகுகள் மூலமோ பாலத்தின் வழியாகவோ தீவுக்குச் செல்லலாம். அங்கே நர்மதையில் நீராடிவிட்டு ஆலய தரிசனம் செய்யலாம். ஆலய வாயில் சிறு குகைபோல இருக்கும். அதற்குள் சென்று ஓங்காரேஸ்வரரை வழிபடலாம். சிவலிங்கத்தின் நான்கு புறமும் அபிஷேக நீர் விழும் அமைப்புள்ளது. பார்வதிதேவி, பஞ்சமுக ஆஞ்சனேயர் விக்ரகங்களும் உள்ளன. முதல் தளத்தில் ஓங்காரேஸ்வரரை தரிசித்துவிட்டு இரண்டாவது தளத்துக்குச் சென்றால் மகாகாளேஸ்வர லிங்கத்தை தரிசிக்கலாம். மூன்றாவது தளத்தில் சித்தநாதேஸ்வரரும், நான்காவது தளத்தில் குப்தேஸ்வரரும், ஐந்தாவது தளத்தில் தவஜேஸ்வரரும் அருள்புரிகின்றனர்.இவ்வாலயத்தைச் சுற்றி மேலும் 12 லிங்கங்கள் உள்ளன. மேலும் மாதா காட் (படித்துறை), சீதா வாடிகா (தோட்டம்), தாவடி குண்ட் (குளம்), மார்க்கண்டேயர் சிற்பம்- ஆசிரமம், அன்னபூரணி ஆசிரமம், அறிவியல்கூடம், படே அனுமன், ஹேடாவதி அனுமன் கோவில்கள், ஓங்கார மடம், மாதா ஆனந்தமயி ஆசிரமம், ரிணமுக்தேஸ்வரர் ஆலயம், காயத்ரி மாதா, மகாவிஷ்ணு, வைஷ்ணவி தேவி, காசிவிஸ்வநாதர் ஆலயங்கள் உட்பட ஏராளமான புனிதத் தலங்களும் தீர்த்தங்களும் இப்பகுதியில் உள்ளன.

kuberan god

இங்கு குபேரன் சிவபெருமானை எண்ணித் தவமிருந்து நவநிதிகளுக்கும் தலைவனான். எனவே குபேரனுக்கும் இங்கு ஆலயம் உள்ளது. சிவனின் ஜடாமுடியிலிருந்து ஒருதுளி நீர் இங்கே விழுந்ததாம்.அது சிற்றாறாக ஓடி நர்மதையுடன் கலக்கிறது. தீபாவளியின்போது குபேரனுக்கு இங்கு மிகச் சிறப்பாகப் பூஜைகள் நடக்கும்.பக்தர்கள் பல்வேறு புனித தீர்த்தங்களிலிருந்து நீர்கொண்டுவந்து ஓங்காரேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். இதனால் எண்ணியவை யாவும் ஈடேறுகின்றன என்பது பக்தர்கள் கூற்று. மத்தியப் பிரதேச மாநிலம், கண்ட்வா மாவட்டத்தில் அமைந்துள்ளது ஓங்காரேஸ்வரர் ஆலயம். உஜ்ஜயினியிலிருந்து 142 கிலோமீட்டர், கண்ட்வாவிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது.

Next Story

பாகிஸ்தானில் பழங்கால இந்து கோவில் இடித்து தகர்ப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Demolition of a Historic Hindu temple in Pakistan!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவதற்கு முன்னாள், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையொட்டி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ‘கைபர் கோவில்’ என்ற பழங்கால இந்து கோவில் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் பின்பு, 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்னால், அங்குள்ள சிறுபான்மையின மக்களான இந்து மக்கள், இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தனர்.

இதனால், 1947ஆம் ஆண்டு முதல், அந்த இந்து கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் உள்ளே சென்று வழிபடவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த கோவில் மூடப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த கோவிலில் உள்ள செங்கற்கள் ஒவ்வொன்றாக விழுந்து, அந்த கோவில் சிதிலமடைந்து காட்சியளித்துள்ளது.

இந்த நிலையில், அந்தப் பழமையான இந்து கோவில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கூறியதாவது, ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை உறுதி செய்வது மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் பொறுப்பாகும்’ என்று கூறியுள்ளது.

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.