இதனைத்தொடர்ந்து போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கிய போது, அப்போது போலீஸாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. அதில் கடந்த 5-ந்தேதி ஒரு இளம் பெண் மற்றும் 2 வாலிபர்கள் சென்னை அசோக் நகரில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் குற்றாலம் செல்வதற்காக காரை வாடகைக்கு எடுத்துள்ளனர். மேலும் மூன்று நாட்களுக்கு தேவைப்படும் என்றும் கூறியுள்ளனர். அதன் பின்பு நாகநாதன் அந்த காரை ஓட்டியுள்ளார். அதோடு 9ஆம் தேதி அன்று தான் சென்னை திரும்பி வருவேன் என்றும் தகவல் கொடுத்துவிட்டு எடுத்து சென்றுள்ளார். நாகநாதன் சொல்லியபடி மூன்று நாட்களுக்கு மேலாகியும் திரும்ப வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் டிரைவர் நாகநாதனுக்கு நான் பலமுறை போன் செய்தும் எடுக்கவில்லை. திரும்ப போன் செய்த போது அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் காருடன் சென்ற நாகநாதன் மாயமாகி உள்ளார். எனவே கார் கடத்தப்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் உள்ளது என குறிப்பிட்டு இருந்தார். இந்த புகார் குறித்து, தமிழகம் முழுவதும் போலீஸ் நிலையங்களுக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில்தான் கொட்டாம்பட்டி அருகே கால்வாயில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது நாகநாதன் என்பதை போலீசார் உறுதி செய்தனர். மேலும் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதையும் போலீசார் கண்டறிந்தனர்.
மேலும் அவரை கொன்றுவிட்டு, அவருடன் காரில் வந்த 4 பேர்தான் காரை கடத்திச் சென்றதும் தெரியவந்ததால் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த 4 பேரையும் கண்டுபிடிக்க மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த ஜெயசுதா (வயது 30), பெரோஸ் அகமது (34), புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையைச் சேர்ந்த ஹரிகரன் (30), காஞ்சீபுரம் வடகலையைச் சேர்ந்த ஜெகதீசன் (24) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. அதில் ஜெயசுதா பட்டதாரி பெண் என்றும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பெரோஸ் அகமதுவும், ஜெயசுதாவும் ஒன்றாக படித்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. அதில் ஹரிகரன் பெரோஸ் அகமதுவின் நண்பர் என்றும் தெரியவந்துள்ளது.
அதோடு சென்னையில் மசாஜ் சென்டர் நடத்தி அதன் மூலம் பணம் சம்பாதித்து வந்த ஜெயசுதா நாளடைவில் பெரோஸ் அகமதுவுடன் சேர்ந்து புதுச்சேரியில் ஓட்டல் நடத்தியுள்ளார். அந்த ஓட்டலில் தான் ஜெகதீசன் வேலை பார்த்து வந்தார். ஓட்டல் தொழிலில் இவர்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்காததால் மேலே குறிப்பிட்ட நான்கு பேரும் சேர்ந்து கார்களை கடத்தி விற்க திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் நாகநாதனை காரில் வரவழைத்து குற்றாலத்துக்கு செல்லும் வழியில் தனது தோழி ஒருவரை திருச்சியில் இருந்து ஜெயசுதா ஏற்றிச் சென்றுள்ளார். பின்னர் திரும்பி வரும் வழியில்தான் டிரைவர் நாகநாதனை கொலை செய்துவிட்டு காரை கடத்திச் சென்றுள்ளனர்.
பின்னர் திருச்சியில் ஒருவரிடம் ரூ.20 ஆயிரம் ரூபாயை அட்வான்ஸாக பெற்றுக் கொண்டு காரை அவரிடம் விற்று விட்டு பின்னர் அவர்கள் 4 பேரும் அரசு பஸ்சில் சென்னை சென்று அங்கிருந்து ஆந்திரா, பெங்களூரு, கோவை போன்ற இடங்களுக்கு சென்றுள்ளனர். அதன்பின்னர் சென்னை வரும் போது போலீசிடம் சிக்கியுள்ளனர். மேலும் இது போல் வேறு சம்பவம் எதுவும் இவர்களால் நடந்துள்ளதா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.