ADVERTISEMENT

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை அவமானப்படுத்திய கும்பல்; உயிரை விட்ட இளம்பெண்

10:55 AM Feb 09, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் சையத் அகிம். இவரது மனைவி நூர்ஜகான் பாத்திமா. இந்த தம்பதிக்கு யாஸ்மின் என்கிற 26 வயது மகளும், ஜவகர் பரூக் என்கிற 24 வயது மகனும் இருக்கின்றனர். இந்நிலையில், சையத் அகிம் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு, உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். அப்போது, கணவனை இழந்த நூர்ஜகான், தன் இரண்டு பிள்ளைகளுடன் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளார்.

மேலும், சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்த நூர்ஜகான், அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தனது பிள்ளைகளை காப்பாற்றி வந்துள்ளார். அதே சமயம், பிள்ளைகளின் படிப்பு செலவுக்காகவும் குடும்ப தேவைக்காகவும் அக்கம் பக்கத்தினரிடம் கடன் வாங்கியுள்ளார். அதுமட்டுமின்றி, மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள் சிலரிடம், தனிப்பட்ட முறையில் நூர்ஜகான் பாத்திமா சிறுகச் சிறுக 8 லட்ச ரூபாய் வரை கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. அதன் வட்டியும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்துள்ளது.

ஒருகட்டத்தில் பணம் கொடுத்த கடன்காரர்கள், வட்டியுடன் சேர்த்து 18 லட்ச ரூபாயாக தர வேண்டும் என நூர்ஜகானை மிரட்டியுள்ளனர். இதனால் அச்சமடைந்த நூர்ஜகான், வாங்கிய பணத்தை கொடுக்க முடியாமல் கடன்காரர்களுக்கு பயந்து தலைமறைவானார். இதனால் பதறிப்போன நூர்ஜகானின் மகன் ஜவகர், அவரைப் பல இடங்களில் தேடி அலைந்துள்ளார். ஆனால், நூர்ஜகானை எங்கு தேடியும் கிடைக்காததால் 17ஆம் தேதியன்று கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அப்போது தலைமறைவான நூர்ஜகான், தான் தூத்துக்குடியில் உள்ள உறவினர்கள் வீட்டில் இருப்பதாக செல்போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். இந்நிலையில், ஜவகர் வேலை சம்பந்தமாக வெளியே சென்றிருந்தபோது, வீட்டில் அவரது சகோதரி யாஸ்மின் மட்டும் தனியாக இருந்துள்ளார். அந்த சமயம், வீட்டிற்கு வந்த கடன் கொடுத்த மூன்று பெண்கள், யாஸ்மினை தகாத வார்த்தையில் அவமானப்படுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி, வாங்கிய பணத்தை வட்டியோடு கொடுக்க வேண்டும் என மிரட்டியுள்ளனர்.

இதனால், மனவேதனை அடைந்த யாஸ்மின் கண்ணீர் விட்டு கதறியுள்ளார். அப்போது வீட்டில் ஆறுதல் சொல்வதற்கு கூட யாரும் இல்லாததால் தனிமையில் வாடிய யாஸ்மின், வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு, வீட்டிற்கு வந்த ஜவகர், தன் சகோதரியின் உடலை பார்த்து கண்ணீர்விட்டு கதறியுள்ளார். பின்னர் இதுகுறித்து தகவலறிந்த போலீசார், யாஸ்மினின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ஜவகர் பரூக் கந்துவட்டி கொடுமையால் தனது சகோதரி யாஸ்மின் தற்கொலை செய்து கொண்டதாகவும், இதற்கு காரணமான மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த மூன்று பெண்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதே சமயம், கந்துவட்டி கொடுமையால் அவமானப்படுத்தப்பட்ட பெண், திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னை மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT