ADVERTISEMENT

10 ஆண்டுகள் தலைமறைவு; கணவரை கொன்ற மனைவி, ஆண் நண்பருடன் கைது

02:12 PM Dec 22, 2023 | ArunPrakash

கடலூர் மாவட்டம் சிதம்பரம் உட்கோட்டம் சிதம்பரம் நகர காவல் நிலைய கனக சபை நகரை சேர்ந்த அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் சம்பத் என்பவரின் மனைவி கிரண் ரூபணி என்பவருக்கும், கன்னியாகுமரியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் சமூக வலைத்தளத்தின் மூலம் பழக்கம் ஏற்பட்டு, இந்த பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இதற்கு இடையூறாக இருந்த கணவர் சம்பத் என்பவரை கொலை செய்ய திட்டம் தீட்டி முட்லூர் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் அமீர் பாஷா என்பவரின் உதவியுடன் கடந்த 30.8.2013 அன்று நள்ளிரவு ஒரு மணி அளவில் கார் ஏத்தி கொலை செய்து, அந்த கொலையை விபத்தாக மாற்றுவதற்கு மூவரும் முயற்சி செய்தனர்.

ADVERTISEMENT

இதனை புலனாய்வு செய்த அப்போதைய சிதம்பரம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளரும், தற்போதைய மாவட்ட எஸ்பியுமான ராஜாராம், தகுந்த சாட்சியத்துடன், நடந்தது விபத்து இல்லை என்று கண்டறிந்து மூவரையும் கொலை வழக்கில் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினார். பின்னர் இந்த வழக்கில் புலன் விசாரணை முடித்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த நிலையில் மூவரும் நீதிமன்ற பிணை பெற்று வெளியே சென்றனர். வழக்கு விசாரணையை தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் மூவருக்கும் சிதம்பரம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. பிடியாணையை நிறைவேற்ற முடியாமல் நிலுவையில் இருந்ததால், வழக்கு மேற்கொண்டு விசாரணை செய்ய முடியாத நிலையில் இருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், இவ்வாண்டின் துவக்கத்தில் ராஜாராம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி ஏற்றவுடன் தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர் ரகுபதி மேற்பார்வையில் நகர காவல் ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் விழுப்புரம், மங்கலம்பேட்டை, சென்னை, கன்னியாகுமரி, பெங்களூரு போன்ற இடங்களில் விசாரித்த போது கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வழக்கின் மூன்றாவது குற்றவாளி அமீர் பாஷா என்பவரை தனிப்படை போலீசார் விழுப்புரத்தில் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

இந்நிலையில் வழக்கில் தொடர்புடைய ராஜேஷ் மற்றும் கிரண் ரூபிணி ஆகியோர் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த தகவலின் படி சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் ஆறுமுகம், சிறப்பு உதவியாளர் புருஷோத்தமன், தலைமை காவலர் ரமேஷ் ராமநாதன், பெண் காவலர்கள் சுதா, புனிதா ஆகியோர் சென்று தலைமறைவாக இருந்த இருவரையும் கைது செய்து அழைத்து வந்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT