Skip to main content

மனைவியின் நடத்தையில் சந்தேகம்; கணவர் வெறிச்செயல்

Published on 21/02/2023 | Edited on 21/02/2023

 

cuddalore district kattumannarkoil husband and wife incident 

 

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி அருகில் உள்ள குமராட்சி எனும் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 45). இவரது மனைவி இன்பவள்ளி (வயது 38). இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

 

இந்த நிலையில், தமிழ்ச்செல்வன் தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக கேரளா சென்று அங்கே கூலி வேலை செய்து வருகிறார். அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து செல்லும் தமிழ்ச்செல்வன், தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம் அடைந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சமீபத்தில் கேரளாவில் இருந்து ஊருக்கு வந்த தமிழ்ச்செல்வன், மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

 

இந்த நிலையில், நேற்று மாலை மதுபோதையில் வீட்டுக்கு வந்த தமிழ்ச்செல்வன் மனைவியிடம் மீண்டும் தகராறு செய்துள்ளார். கணவன், மனைவிக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தமிழ்ச்செல்வன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இன்பவள்ளியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதனால் இன்பவள்ளி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அறிந்த அக்கம்பக்கத்தினர் குமராட்சி காவல் நிலையத்திற்கு இது குறித்து தகவல் அளித்தனர். இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையிலான போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்டு கிடந்த இன்பவள்ளியின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

அதனைத் தொடர்ந்து மனைவியை கொலை செய்த கணவர் தமிழ்ச்செல்வனை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது தமிழ்ச்செல்வன் தன் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் சந்தேகத்தின் பேரில் கட்டிய மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவரின் வெறிச்செயல் அப்பகுதி கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்