விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே உள்ள கீழ்மைலம் பகுதியைச் சேர்ந்தவர் பாபு(30). கூலித் தொழிலாளியான இவரது மனைவி ஹேமலதா(26). கடந்த 2004ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். பாபுவுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. போதையில் மனைவியை அடிக்கடி துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் ஹேமலதாவை அவரது குடும்பத்தினரிடம் சென்று வரதட்சணை வாங்கி வருமாறு அடிக்கடி துன்புறுத்தி சித்திரவதை செய்துள்ளார்.
இந்நிலையில், விழுப்புரம் பெரியகாலனி பகுதியில் வசிக்கும் ஹேமலதாவின் சித்தப்பா, ஒரு இருசக்கர வாகனத்தை பாபுவுக்கு வாங்கிக் கொடுத்துள்ளார். அதன்பிறகு அரசு தொகுப்பு வீடு திட்டத்தின் கீழ் இவர்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வீடு கட்டும் செலவிற்கு கூடுதலாக பணம் தேவை அதற்கு ஐம்பதாயிரம் ரூபாய் பணம் வாங்கி வருமாறு மனைவி ஹேமலதாவை அடித்து துன்புறுத்தியுள்ளார் பாபு.
இந்தநிலையில் கடந்த 2010டிசம்பர் மாதம் 20ஆம் தேதி இரவு பாபு தனது மொபைல் போனில் வேறு ஒருபெண்ணோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதை பார்த்து கோபமடைந்த ஹேமலதா, கணவர் பாபுவிடம் அது குறித்து யார் என்னவென்று கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த பாபு, ஹேமலதாவை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ஹேமலதா உயிரிழந்துள்ளார். இதுகுறித்து மயிலம் போலீசார், பாபு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விசாரணை விழுப்புரம் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இது சம்பந்தமான வழக்கு முடிவடைந்த நிலையில் நீதிபதி சாந்தி, பாபு, மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக அவருக்கு ஆயுள் தண்டனையும், ஏழாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். அதை கட்டத் தவறினால் மேலும் 3 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்குமாறு தமது தீர்ப்பில் கூறியுள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்புவழக்கறிஞராக சங்கீதா ஆஜரானார்.